Wednesday, November 10, 2010

இழப்பு

  அன்று சனிக்கிழமை இரவு மணி பத்து இருக்கும்.  எப்பொழுதும் போல் அடுத்த வாரத்திற்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டை அடைந்திருந்தோம்.  குழந்தைகளை உடைமாற்றி, பல்துலக்கி விட்டு படுக்க சொல்லிவிட்டு வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.  வெளியில் போய்வந்த களைப்பில் என் கணவர் வழக்கம்போல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் ஆனந்தமாக லயித்து இருந்தார்.  எங்கு வெளியில் போய்விட்டு வந்தாலும் நான் மட்டும் போவதற்குமுன்பும் சரி, வந்த பின்பும் சரி வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று மனதில் நொந்துக்கொண்டு என் வேலையை 
தொடர்ந்தேன்.  அப்பொழுது தொலைபேசி மணி ஒலித்தது.  இந்த இரவு நேரத்தில் யார் கூப்பிடுகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் என் கணவர் தொலைப்பேசியை கையில் எடுத்து “ஹலோ” என்றார்.  பின்னர், “சொல்லுன்னே,எப்படி இருக்க?” என்றார்.  பின்னர் “அப்படியா, எப்போ? என்னாச்சு? என்று வெறும் கேள்விகளையே கேட்டார்.  இதை கேட்டவுடனேயே என் மனதில் திக்கென்று பயம் கவ்விக்கொண்டது.  யாருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லையே என்று மனம் படபடத்தது.  தூர தேசத்தில் இருக்கும் பொழுது நடு இரவில் அல்லது எதிர் பாராத நேரத்தில் ஊரில் இருந்து போன் வந்தாலே மனம் நடுங்கும்.  தந்தி என்றாலே கெட்ட செய்திதான் என்று ஒரு காலத்தில் இருந்ததை போன்று  இருக்கும் இரவில் வரும் தொலைபேசி அழைப்பு. 

என் கணவர் பேசிக்கொண்டிருக்கையில் நடுவில் குறுக்கிடவும் முடியாது.  ஆனால் அவருடைய பேச்சு தோரணையிலேயே ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்தேன்.  என்னால் வேலையை தொடரமுடியவில்லை. போட்டது போட்ட படி விட்டு விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தேன்.  அவர் பேசி முடித்தப்பின் யாருக்கு என்ன ஆனது என்று கேட்டேன்.  “கீழையூர் அக்காவின் கணவர் இறந்து விட்டாராம்.” என்றார்.  எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  “என்ன ஆனது, எப்படி என்று கேட்டேன்.  “உடம்பு சரியில்லாமல் திடீரென்று இறந்து விட்டாராம் “ என்றார்.  மனம் மிகவும் வலித்தது.  அவருக்கு ஐம்பத்து ஐந்து வயது தான் இருக்கும்.  அவரின் மனைவி எனக்கு நாத்தனார்.  மிகவும் பாசமாக இருப்பார்.  நான் ஊருக்கு போகும் பொழுது எனக்கு வத்தல், வடகம் எல்லாம் போட்டுக்கொடுப்பார்.  அவர்களுக்கு இரண்டு மகன்கள்.  ஒருவருக்குக் கூட திருமணம் ஆகவில்லை.  மனம் முழுதும் வேதனை கவ்விக்கொண்டது.  அந்த இரவு வேலையில் யாரிடம் இந்த சோகத்தை பகிர்ந்து கொள்வது?  நானும் என் கணவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம்.  கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட அகால துர்மரணங்கள் எங்களை மிகவும் பாதித்திருந்தது.  இதை எழுதும் பொழுது கூட என் கண்களில் நீர் தழும்புகிறது. தனிமையில் அழ மிகவும் பழகிப்போனது.  உடனே ஊருக்கு தொலைபேசியில் அழைப்பதால் என்ன பயன்?  யாரும் பேசும் நிலையில் இருக்க மாட்டார்கள்.  அப்படியே அழைத்தாலும் இரு முனையிலும் நிசப்தமும், விசும்பலும், அழுகையினால் மூக்கை உரிஞ்சும் சப்தமுமே மிஞ்சும்.  ஆறுதலாக பேசக்கூடிய மனநிலையில் நாங்களும் இல்லை.  சரி இரண்டு நாட்கள் கழித்து பேசிகொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.  எவ்வளவு தூரம் நம்மால் தொலைபேசியில் ஆறுதல் கூறமுடியும்?  உற்றார் உறவினர் சூழ தங்கள் துக்கத்தை அவர்கள் அங்கே பகிர்ந்துகொள்ள , இங்கே யாரும் இன்றி நாங்கள் மனதுக்குள் மட்டுமே அழ முடிந்தது.  உடனே ஊருக்கு போக முடியாத சூழ்நிலை.  யாரிடம் இதை கூறி புரியவைக்க முடியும்.  நம் மனதில் ஏற்படும் போராட்டங்கள் நமக்கு மட்டுமே தெரியும்.  இரவு படுத்தப்பின்னும் தூக்கம் வரவில்லை.  அழுகை ஓலங்கள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.  

மறுநாள் எல்லோரும், அலுவலகம், பள்ளி என்று சென்றப்பின் நான் தனியாக வீட்டில் இருந்தேன்.  அந்த தனிமை என்னை கொன்றது.  ஊரில் எப்படி இருக்கிறார்களோ? என்ன நடந்ததோ என்று மனம் ஊரை நோக்கி பறந்து கொண்டே இருந்தது.  மனதில் பட படப்பு இருந்து கொண்டே இருந்தது.  ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு நம் வேதனை புரிய வாய்ப்பில்லை.  நாம் இத்தகைய துக்கங்களை ஒரு தினசரியில் படிக்கும் செய்தியாகத்தான் எடுத்துக்கொள்வோம் என்று நினைக்கிறார்கள். இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?  நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை.  சந்தோஷமான விஷயங்களை எளிதாக நாம் மற்றவர்களுடன் தொலைபேசியில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பேசி பகிர்ந்து கொள்ளமுடியும்.  ஆனால் மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது  எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்  என்பதில் எனக்கு சந்தேகமே.  ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் பொழுது சென்ற முறை சந்தித்த யாராவது ஒருவர்  இம்முறை இல்லை எனும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே அது கொடுமையிலும் கொடுமை.  அவர்களின் நினைவுகள் நம்மை தாக்கி கொண்டே இருக்கும்.  மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். நேரில் சென்று உடலை பார்க்காதவரையிலும் மனம் உண்மையை ஏற்க மறுக்கும்.   ஆனால் அதனை தூரத்தில் இருந்து கேட்டும் பொழுது மனதின் ஓரத்தில் அது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கும்.  நேரில் பார்ப்பவர்கள் கூட சடங்குளை முடித்த பின் நிதர்சனத்தை நோக்கி நடக்கத்துவங்குகிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்து கொண்டு செய்தி மட்டுமே கேட்டறியும் நம் மனம் உண்மையை ஏற்கொள்ள மறுக்கிறது.  ஊருக்கு  சென்று பார்க்கும் வரை இது எதுவுமே நடக்கவில்லை என்று இறந்தவர் கண் முன் மீண்டும் தோன்றுவாரா என்று ஒரு நினைப்பு மனதின் ஓரத்தில்  தொற்றிக்கொண்டே இருக்கும்.  எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இழப்பு இழப்புதான்.  மனதில் ஏற்படும் துக்கமும், தாக்கமும் ஒன்றுதான்.    

Wednesday, November 3, 2010

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

  எல்லோரும் காலையில் பள்ளிக்கூடம், ஆபீஸ் என்று  சென்றப் பின் நான் என் அன்றாட வேலைகளை தொடங்க ஆரம்பித்தேன்.  இரவு சரியாக தூங்காததால் களைப்பு வேறு.  இருந்தும் இல் வேளைகளில் இருந்து தப்பிப்பதற்கு ஜாமீன் கிடைக்காதே.  திருமணம் என்ற குற்றத்தை ஒரே ஒரு முறை புரிந்ததற்காக இந்த தண்டனையா என்று என்னையே நொந்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.  வீட்டை கூட்டுவதற்கு முன் ஒவ்வொரு அறயாக சென்று அங்கு அலங்கோலமாக கிடக்கும் பொருட்களை முதலில் அடுக்கி வைப்பது என் வழக்கம்.  என் பெண்ணின் அறைக்கு நுழைந்த பொழுது அங்கு எதுவும் தரையில் கிடக்கவிலை.  அவளின் ஸ்டைல் என்ன தெரியுமா?  எந்த பொருளானாலும் அவள் மேசை மீது குவித்து வைத்து விடுவாள்.  அதை ஒழுங்காக அடுக்கி வாத்தால் என்ன என்று கேட்டால் “I Like it this way amma.  எனக்கு இப்படி இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்”, என்று வேறு ஒரு பதில்.  அவள் அலமாரியை திறந்தால் துணிமணிகள் ஒரு சிறு எவரெஸ்ட் மலை போல் குவிந்து கிடக்கும்.  மாதம் ஒரு முறை அதை நான் அடுக்கினால் உண்டு.  மிகவும் கோபம் வந்துவிட்டால் நான் எல்லாவற்றையும் எடுத்து ஒரு நாள் தரையில் வீசுவேன்.  பின் அவளையே மடிக்கச் சொல்வேன்.  End of the day mission accomplish செய்வது அடியேனே.  பெத்த மனம் பித்து ஆயிற்றே.  இது இப்படி இருக்க, ”எனக்கு dressஏ இல்லை.   You never buy for me." என்ற குறைவேறு.  என் தந்தை சொல்வதை போல் நாண்கு துணியை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் மாற்றி மாற்றி துவைத்து மடித்து அடுக்கி அழகாக வைத்துக்கொள்ள தோன்றும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.  கேட்டதை வாங்கியும் கொடுத்து வாங்கிகட்டிக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது!!


    மகனின் அறைக்கு சென்றால் என் தலை எந்திரன் ரோபோ போல் சுற்றும்.  படுக்கையில் புத்தகம், தரையில் சாமான் என்று பொருட்கள் அறை முழுதும் இரைந்து கிடக்கும்.  ஒன்று நான் ரோபோவாக மாறவேண்டும் அல்லது உதவிக்கு நல்ல “சிட்டி ரோபோ” ஒன்று அவசியம் வேண்டும். அலங்கோலமான அறையை பார்த்தவுடனேயே கோபம் தலைக்கு ஏறும்.  ஆனால் யாரிடம் காண்பிப்பது.   மனதுக்குள் திட்டிக்கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து அவற்றுக்குரிய இடத்தில் அகுக்கி வைத்து விட்டு பின் மற்ற அறைகளை சுத்தம் செய்வேன்.   என்னிடம் ஒரு fridge magnet உள்ளது.  அதில் “I don't need a man to keep me happy but a maid is essential."  இவர்கள் அடிக்கும் கூத்திற்கு வேலை செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.  விடுமுறை நாட்கள் இன்னும் மோசம்.  தந்தையும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்.  சுத்தம் செய்து செய்து என் முதுகு கேள்விக்குறியாக இருக்கும்.  மீண்டும்  திங்கள் மதியம் தான் நிமிரும்.


     ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தம் செய்யும் போதுதான் எனக்கு less things more comfort என்று என் தந்தை கூறுவது ஞாபகத்திற்கு வரும்.  ஆனால் என்ன செய்வது பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் நானும் பொருட்களை வாங்குவதை நிறுத்துவதில்லை.   அவற்றிற்கு ஒரு உபயோக காரணத்தை கண்டுபிடிக்க தவறுவதும் இல்லை.  ஏதொ உலக பொருளாதாரத்திற்கு என்னால் ஆன உதவி என்று வைத்துக்கொள்ளுங்கள். 


   ஒரு வழியாக என் வேலையை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து உட்காருகையில் மணி நாண்காகிவிடும்.  பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்.  பின் மாலை கடன் தொடரும்.  வந்தவுடன் என் மகனின் புத்தகப்பை ஒரு புறம், சாப்பாட்டுப் பை ஒரு புறம் , uniform ஒரு புறம்  என்று பறக்கும்.  சிறு சுனாமி வந்தது போல் வீடு காட்சியளிக்கும்.  பின் என் ராக ஆலாபனையை தொடங்கினால் எல்லாம் அதன் அதன் இடத்திற்கு போகும்.  சரி வீட்டுப்பாடம் செய்ய வைக்கலாம் என்று புத்தகப்பையை திறந்தால் பென்சில் இருக்காது, இல்லை நோட்டு புத்தகங்கள் கசங்கி இருக்கும்.  அப்பாடா என்று ஆகிவிடும்.  எப்பொழுதுதான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதோ என்று வேண்டாத சாமி இல்லை.  “உன்னை திருமணம் செய்து கொள்பவள் என்ன பிள்ளை வளர்த்து வைத்து இருக்கிறார்கள் உங்கள் அம்மா. இப்படி ஒரு பொருப்பில்லாத பிள்ளையை  என் தலையில் கட்டி விட்டார்கள்.” என்று என்னை திட்டுவாள் என்றும் கூறியிருக்கிறேன்.  அதை புரிந்து கொள்ளும் வயசு இல்லை என்று தெரிந்தும் என் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன்.  ஒரு வேலை நானே என் மாமியாரை சில சமயங்களில் இப்படித்தான் மனதில் திட்டுகிறேனோ??  நானும் பல சாம பேத வழிகளை கையாண்டு பார்த்துவிட்டேன்.  பலன் இல்லை.  அடிக்கும் மசியவில்லை.  எந்த  ராஜா எந்த பட்டிணம் போனால் என்ன நான் செய்வது தான் செய்வேன் என்று அவன் உலகில் சந்தோஷமாக விளையாடி திரிந்தான்.  சரி ஹாஸ்டலில் போட்டு ஒரு வருடம் நிமிர்த்தலாம் என்று முடிவு செய்து ஒரு நல்ல ஹாஸ்டல் பார்க்க சொல்வதற்காக என் தந்தைக்கு போன் செய்தேன்.  எனக்கும் என் தந்தைக்கும் இடையே  நடந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு......

நான்:   அப்பா எப்படி இருக்கீங்க?

அப்பா:  நான் நல்லா இருக்கேம்மா.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. நேத்து தான் போன் பண்ண அப்புறம் என்ன இன்னைக்கு திடீற்னு காலையிலேயே போன்.  என்ன விஷயம்?

நான்:   ஒன்னுல்லை அப்பா. ரிஷி ரொம்ப விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கான்.  கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.  நல்ல ஹாஸ்டலா பாருங்க, போட்டுட்டு நா நிம்மதியா இருக்கேன்.

அப்பா:   ஏம்மா அப்படி சொல்ற?  போகப்போக திருந்திவிடுவான்.  கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்கொடு.

நான்:   சொல்லியும் பாத்துட்டேன், அடிச்சும் பாத்துட்டேன்.  திருந்தவே மாட்றாம்பா.  கத்தி கத்தி எனக்கு தான் B.P வந்தும் போல. 

இதை கேட்டு பதற்றமடைந்த என் தந்தை( எனக்கு B.P வந்துவிடும் என்பதால் பதற்றம் இல்லை. பேரனை அடித்து விட்டேன் என்பதற்கான பதற்றம்.):  என்னமா, அடிக்காதம்மா பாவம்.

நான்: பாவம் யாருப்பா? நான் தான் பாவம்.

அப்பா:   இல்லம்மா, அடிச்சீனா ரொம்ப feel பண்ணுவான்.  மனசுக்குள்ள வச்சுகிட்டு கஷ்டப்படுவான்.  நான் செஞ்ச தப்பை நீங்க உங்க பிள்ளைகளுக்கு செய்யாதீங்க.  நான் தான் சின்ன வயசில் உங்களை அடிச்சு வளத்தேன்.  நீங்க அப்படி செய்யாதீங்கம்மா.

நான்:   கம்பெடுத்தால் தான் சில சமயம் குரங்கு ஆடுதுப்பா.   நீங்க மட்டும் எங்களை அடிச்சீங்க.  ஏன் நாங்க மட்டும் செய்யக்கூடாதா?

அப்பா:   இல்லம்மா. நான் உங்கள அடிச்சது disciplined ஆ வளக்க.

நான்: நானும் அதுக்குத்தான் அப்பா அடிச்சேன்.

அப்பா:   NO, NO, அவன அடிகாதம்மா.  நான் அப்படி disciplinedஆ வளத்ததாலதான் இப்ப உங்க உங்க வீட்ல அதே ஒழுங்க எதிர்பார்கறீங்க.  சண்டை வருது.  என்ன செய்யறது.  ஏண்டா அப்படி அடிச்சோம்னு இப்ப நான் feel பண்றேம்மா.  இங்க எங்கிட்ட கொண்டுவந்து விடு.  நான் நல்லவிதமா பொருமையா சொல்லிக் கொடுத்து வளக்கறேன். 

நான்:   சரிப்பா நான் போனை வக்கறேன்.
போனை வைத்த பிறகு சிறுது நேரம் இந்த சம்பாஷணையை rewind செய்து பார்த்தேன். பெற்ற பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும்  இடையே இவ்வளவு வித்தியாசமா?
பேரப்பிள்ளைகள் மீதுதான் தாத்தா பாட்டிக்கு அளவிட முடியாத கண்மூடித்தனமான பாசம்.  வரையரையற்ற இந்த பாசத்தை அருகில் இருந்து அனுபவிக்க இயலாமல் நம் குழந்தைகளும் இந்த பொருள் தேடும் உலகில் நம்மோடு சேர்ந்து அலைகிறார்கள்.

Friday, October 22, 2010

Birthday Bash

Birthday Bash


For the past two months the buzz around my house has always been about 16th October. You might think what is so auspicious about that date. It is nothing but my daughter's 13th birthday. I don't think I ever realized the fact that I was entering my teenage when I turned thirteen. My thirteenth birthday was just like any other number. But to my daughter it is like a jewel in her crown. She was so excited about her birthday. She would always talk about the dress she would wear, how she would look, what gift she wanted etc. Every time the talk about her birthday would come up my son would be boiling with fumes inside because he had five more solid years to call himself a teen. To him it is attaining manhood--may be 25% manhood??? We told our daughter that she could have a party. We gave her many options like bowling, movie, rock-climbing, but all these were termed as "LAME". She wanted to do something different. I didn't understand what that "something different" meant. Then she told she wanted to have a combined party with her close friend who will be burning 13 in November. We agreed for it.





On the 15th October I was thinking that I should do something to make her happy on her birthday. Though not a mega party at least something she would remember for her life. I called two of her close friends for a sleep over. Both their moms were so nice to agree to send their daughters home for a sleepover. Sruthi told me that she had asked three of her bus friends to come over for dinner that evening. Me and my friend Chitra went and bought all the necessary things for making dinner. My husband told that we could order pizza. I wanted to make everything myself for my teenage princess. Me and Chitra made pizza, pasta, corn , beans and nachos salad, chalupaa, jamun and baked some brownies. We were on our heels for almost 4 hours. 5 of her friends were there, Gaurika,Madhulika,Monisha,Brandon,Saadhvika. Madhu's mom Rohini also had come to wish Sruthi. There was so much of noise and laughter echoing around the house. Rishi was feeling all left out. Ravi came home early and was giving company for Rishi. We couldn't figure out for what they were all laughing so much. Everyone was talking and everyone was laughing. This is what childhood innocence means. I could remember the days me and my friends would sit and laugh for anything and everything. We would laugh at a bald head-- unfortunately my dad was also bald. If someone fell we would laugh first then go to their rescue. Where has all that innocent laughter gone? I felt that the house was so full of energy and enthusiasm. Kids enjoyed the food I had cooked--thats what they told me. Rohini, Chitra and me had a good time talking. Gaurika,Monisha and Brandon left at around 10.45p.m. Later we planned to cut the cake at 12 sharp. We all sat to watch a movie.



At 11.45 p.m I got the brownie ready to be cut. Sadhvika was jumping around screaming that she would be the first one to wish Sruthi and give her a hug. Inside me I was thinking the same. The mom status prohibited me from shouting it aloud. All of us were ready for the big show. Rishi was watching a private movie inside the bedroom(he calls it like that because only he was watching the cartoon). Everybody's eyes were on the clock. The clock was ticking... 11.58.59 then 12. "Happy birthday Sruthiiiiii" screamed Sadhu first. Though I was ready for shouting I stood spellbound seeing her screaming. She gave Sruthi a big hug. I came to my senses in a jiffy and wished my little girl. Madhu and Sadhu welcomed her to the world of "Teendom". Sruthi felt like she had become eligible for so many things in her life all of a sudden.





Ravi took a break for a second and went inside the room. We were all wondering what he was about to do. To everybody's surprise he came out with something in his hand. He gave it to Sruthi. I couldn't see what it was. I could only hear Sruthi scream OMG,OMG,OMG non stop. I peeped and saw what was in her hand. It was the I Touch she had asked for. She gave Ravi a hug and jumped saying "thank you papa, thank you papa." Rishi got soo upset seeing the gift that he went inside the room and closed the door. He must have been thinking inside "Why the hell was I not born first to reach teendom?" Sruthi was in the height of her happiness. She cherished the gift by touching it softly. She kissed it. She held it close to her cheek. She wanted to use the very moment. Her friends felt happy for her. We convinced Rishi to come out of the room. Then we all had the brownie and the photo session with Rishi's long face got done. We sat to watch the movie again. Rishi in his height of sadness went to sleep.







After the movie was over Sruthi told "Man this birthday was an "EPIC". "Thank you mama". She didn't jump around and tell me that she was happy that I took so much effort to do all this. Her excitement for the gadget was more . May be she thought it is all the part of parental package. Anyways moms are always taken for granted. It is only later in our life we realise the importance of our moms. Even then we don't take a moment to thank them for what all they did for us. Many of her friends called her to wish at that midnight. I was thinking why she was calling it an epic. Was it because of the gift she got? Or because the pain I took to organize a small party ? It was solely because her two best friends were there to share her moments of joy together with her. How much ever we try to be friendly with our kids we cannot be their friends. Friends are friends, we as parents can only imitate or pretend to be friends but cannot replace a friend . Sruthi shares with me everything but still I feel there are few things that she will share only with her friends. I felt very happy for having given her the opportunity to enjoy the special moment with her friends. What else is important in a parent's life other than to see their children be happy. We have celebrated so many birthdays but till now this has become an epic just because of the fact her friends were there when she turned a new leaf in her life book of teenage. I wish the value for friendship remains the same ever in her life as now

Tuesday, October 5, 2010

எந்திரன் விமர்சனம்

சிறப்புச் செய்தி:


உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எந்திரன் சுறாவளி ஒரு வழியாக எங்கள் வீட்டுக்கரையை நேற்று மாலை கடந்து சென்றது.

நேற்று மாலை 5.45 மணி காட்சிக்கு எந்திரன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்றோம். திரையரங்கில் அலையென மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் நண்டு சிண்டுகளுடன் அனைவரும் குடும்ப சகிதமாக வந்திருந்தனர். நாங்களும் எங்கள் பங்கிற்கு ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பாப்கார்ன் மற்றும் இத்தியாதி, இத்தியாதிகள் வாங்கி கொண்டு படம் பார்க்க சென்றமர்ந்தோம். படம் ஆரம்பித்தவுடன் நாகரீகம் கருதியா என்று தெரியவில்லை ஆனால் ரஜினி ரசிகர்கள் பலர் இருந்தும் யாரும் விசில் அடிக்கவில்லை. சத்தம் போடவில்லை. படம் நிசப்தமாக ஆரம்பித்து ஏறக்குறைய மூன்று மணி நேரம் என் பொறுமையை சோதித்து இனிதே முடிவுற்றது. படம் பார்க்க உள்ளே சென்றபொழுது இருந்த ஆர்வம்,ஆரவாரம் படம் பார்த்து விட்டு வெளியே போன பலரிடம் காணாமல் போனது. அது படம் பற்றிய ஏமாற்றத்தினாலா அல்லது படம் பார்த்து களைத்துவிட்டதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. வெளியே வந்த என் காதுகளில் “ரிங்” என்ற சத்தம் சிறிது நேரத்திற்கு ஒலித்துக் கொண்டே இருந்தது. I could hear the clashing of metal sound for quite some time. எனக்குத்தான் இப்படி ஆனால் என் கணவரின் முகம் அன்று மலர்ந்த ரோஜாவாக சந்தோஷமாக காணப்பட்டது. அவருக்கு படம் பிடிக்காவிட்டால் கூட அதை ஒத்துக்கொள்ள மனம் வராது. ஏன் என்றால் அவர் ஆத்மார்த்தமான ரஜினி ரசிகராயிற்றே!! நானும் ரஜினி ரசிகை தான் ஆனாலும் எனக்கு வடிவேலு ஸ்டைலில் “அப்பாடா கண்ணை கட்டிடுச்சுடா சாமீ......”


சரி எந்திரன் சூறாவளி என் மனதில் விட்டுச்சென்ற சுவடுகள் இனி இங்கே உங்களுக்காக.......

அழியாத சுவடுகள்::


1. அழகான பாடல் காட்சிகள்.

2.ரகுமானின் மனதை கவரும் இசை.

3.கடைசி இருபது நிமிடங்கள் “சிட்டி” ரஜினியின் ஆர்ப்பரிப்பான நடிப்பு.

4.பிரம்மாண்ட க்ளைமாக்ஸ்.

5. சங்கரின் தொழில் நுட்ப அறிவு.

6. இந்த வயதிலும் ரஜினியின் தொழில் பக்தி.

7. படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களின் உழைப்பு.

8.ஆங்கில படம் போன்ற தமிழ் படம்.

9.ஒரு நொடியில் பல புத்தகங்களை ஸ்கேன் செய்து நினைவில் நிறுத்திக்கொள்ளும் ரோபோவின் திறன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.



மறையக்கூடிய சுவடுகள்::



1. முதிர்ச்சி தெரியும் ரஜினியின் முகம்.

2.என்ன தான் உலக அழகியாக இருந்தாலும் உடலழகில் மார்க்கண்டேயனாக சிக்கென இருக்கும் ஐஸ்வர்யாவின் முகத்தில் பல கோணங்களில் தெரிகிறது வயதின் முதிர்ச்சி.

3.வேகம் குறைந்த ரஜினியின் நடை.(இதற்கு மேல் ஒரு அறுபது வயதுகாரரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்.ஆனால் என்ன செய்வது படத்தின் கதாபாத்திரத்திற்கு வேகம், இளமை தேவையாய் இருக்கிறதே)

4.படம் முழுதும் நட் ,போல்ட், மெஷின் பற்றிய வசனங்கள்தான் மிகுதி.

5.கணினி அறிவு இல்லாத சாதாரண மக்களுக்கு எவ்வளவு தூரம் இந்த concept புரியும் என்று தெரியவில்லை.(neural schema போன்ற வார்த்தைகள் க்ரீக்,லாட்டின் போன்று இருந்தது.)

6. ரஜினி,ஐஸ்ஸை காதல் ஜோடியாக கற்பனை செய்வதில் கொஞ்சம் கஷ்டம்.

7.நகைச்சுவை மிகமிக குறைவு. ரஜினி படம் என்றாலே ஜனரஞ்ஜகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. பொதுவாக ரஜினி படங்களில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் ஒன்றிற்கு இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவை வறட்சி.

8.ஒரு பெயர்ப்பெற்ற விஞ்ஞானியின் உதவியாளர்கள் என்ற பெயரில் சந்தானம்,கருணாஸை கேளித்தனமாக உலா வர செய்தது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.They both became comedy pieces.

9.படம் முழுதும் உலோகங்களின் உரசல் சத்தம். கடைசி இருபது நிமிடங்கள் காது கிழியும் உலோக போர் சத்தம். Transformer, Terminator படம் பார்ப்பது போல் இருந்தது.

10.ஏகத்திற்கு வாரி இரைக்கப்பட்டிருக்கும் பணம்.

11.தனக்கு தெரிந்த அணைத்து computer gimmicks யையும் சங்கர் பயன்படுத்திகொள்ள ஏற்படுத்தப்பட்ட களம்.

12.சாவி கொடுத்த பொம்மை போல் உணர்ச்சியற்ற ஐஸ்வர்யாவின் நடிப்பு.

13.நீட்டி முழக்கி மூன்று மணி நேரம் படத்தை இடைவேளை இன்றி ஓடவிட்டு கொடுமை படுத்தியிருப்பது.

14.மற்ற எல்லா படங்களையும் விட அதிகமான டிக்கெட் கட்டணம்.

15.மனதில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு கதை கரு.

16. கதை மொத்தமும் ரஜினி என்ற சாமியை சுற்றியே அங்கப்பிரதட்சனம் செய்கிறது.

17.இருந்தும், மொத்தத்தில் இது ரஜினிக்கான களம் இல்லை.


படத்தை பார்த்த ஆண்கள் பலருக்கு படம் பிடித்திருந்தது. ஆனால் பெண்களுக்கு ஏமாற்றமே. இதை நான் மட்டும் சொல்லவில்லை. பல பேரிடம் கேட்டு அறிந்த பதில். அவர்களுக்கும் சேர்த்தே நான் எழுதியுள்ளேன். சிறுவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பிடித்திருக்கும் ஆனால் சிறுமிகளுக்கு பிடித்ததாக கேள்விபடவில்லை. Barbie doll loversயை ரோபோ லவ்வர்ஸ்களாக ஆக்குவது கடினம். கூட்டி கழித்து பார்க்கும் பொழுது புரிவது Men are from Mars and Women are from Venus. பொதுவாக பெண்களுக்கு உணர்வு பூர்வமான, உணர்ச்சிபூர்வமான படங்கள் தான் பிடிக்கும். எனவே கண்களை கட்டிய நீதி தேவைதையாக சுவடுகளை தராசில் நிறுத்து உங்கள் தீர்ப்பை முடிவு செய்யுங்கள்... பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

Saturday, October 2, 2010

எந்திரன் வைரஸ்

கொஞ்சம் காலமாகவே உலகெங்கும் எந்திரன் வைரஸ் பரவி வருகிறது. இது ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ,கண்டங்களை கடந்து கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது. வயது பேதம் இன்றி சிறுவர் முதல் முதியோர் வரை இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு உண்டான மருந்து நேற்று முதல் திரையரங்குகளில் கிடைக்கின்றது. இதனால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு திரையரங்குகளின் வாசலிலேயே இரவு முதல் காத்து இருந்து இன்று தரிசனம் செய்தனர்.திருப்பதி மலையானை கூட இப்படி காத்திருந்து தரிசனம் செய்து இருக்க மாட்டார்கள். முதல் மருந்து டோஸே கிடைக்காமல் பலர் காத்து இருக்க , இரண்டாம் டோஸுக்கு வேறு தள்ளு முள்ளு நடைபெறுகிறது. இந்த வைரஸ் ஒரு ஒட்டுவாரொட்டியாக இருக்கிறது. உலக சுகாதார மையத்தினால் கூட இதனை கட்டுக்குள் வைக்க இயலவில்லை. பன்றிக்காய்ச்சலை விட மிக மிக வேகமாக பரவிவருகிறது. இது ஒரு புறம் இருக்க,



ஊரே திருவிழா கோலம் பூண்டுள்ளது . பால் அபிஷேகம் என்ன, அலகு குத்தி காவடியாட்டம் என்ன?? ஏதோ தீபாவளியே வந்துவிட்டது போன்று பட்டாசுகள் வெடிக்க, தாரை தப்பட்டை முழங்க, வருகிறார் , வருகிறார் என்று காத்திருந்த எந்திரன் மஹாராஜா வந்துவிட்டார் கம்பீரமாக வீர நடை போட்டு உலகெங்கும். இந்த வைரஸின் தாக்குதல் எங்கள் குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. இதில் மிகவும் பாதிக்கப்பட்டது எங்கள் வீட்டு தலைவர்தான். நேற்று அலுவலகத்தில் இருந்து வருவதற்கே இரவு 11.30 ஆகிவிட்டது. என்னடா இது கான்பரன்ஸ் கால் 10 மணிக்கே முடிந்து விடுமே இன்னும் ஏன் வரவில்லை என்று வைத்த விழி மூடாமல் நான் காத்திருந்தேன். வீட்டுக்கு வந்தவரிடம் ஏன் இத்தனை நேரம் என்று கேட்டேன். அதற்கு முதலில், “கான்பரன்ஸ் கால் லேட் ஆகிவிட்டது” என்று கூறிவிட்டு அடுத்து முகம் முழுதும் ஆனந்தம் பொங்க “எந்திரன் செம ஹிட்.” என்றார். அஹா இப்பொழுது விளங்கிவிட்டது ஏன் தலைவர் வர இவ்வளவு நேரம் என்று. அலுவலகத்திலேயே முதல் தகவல் அறிகையை படிப்பது போன்று, முதல் விமர்சனத்தை படித்து விட்டு அதற்கு பின்னர் காத்திருந்து மற்ற விமர்சனங்களையும் படித்துவிட்டு வந்திருக்கிறார். எம்.பி.ஏ படித்தபொழுது ராத்தூக்கம் முழுத்து படித்தது போல் இருந்தது.


 ஒரு படம் பார்க்கப்போகும் முன் அது நன்றாக இருக்கிறதா இல்லையா ? குழந்தைகளுடன் பார்க்கலாமா? என்பதை மட்டுமே நான் தெரிந்து கொண்டு போவேன். விரிவான விமர்சனங்களை படித்துவிட்டு போக பிடிக்காது. அது படத்தின் சுவாரஸ்சியத்தை குறைத்துவிடும் போல் எனக்கு தோன்றும். மேலும் மற்றவரின் பார்வையில் நாமும் படத்தை பார்க்க நேரிடும். அடுத்தவர் ரசித்த, சுவைத்தவற்றை நாமும் ரசிக்கத்தோன்றும். ஒரு படம் பார்க்கப்போகும் போது எந்தவித "preconcieved notions" உடனும் எனக்கு போக பிடிக்காது. எனது பார்வையில் படத்தை பார்த்து மதிப்பிடவேண்டும் என நினைப்பேன். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் படம் பார்த்தப்பின் அதனைப் பற்றி அலசுதல் கூடாது. அப்படியே மறந்துவிட வேண்டும். அதனை பற்றி வீட்டுக்கு வந்தபின்னும் பேசினால் அப்பாவிடவிருந்து அடி விழும். காரணம் படிப்பில் கவனம் சிதறி விடுமாம். ஆனால் இப்பொழுது நாங்கள் எங்கள் வீட்டில் எங்கள் குழந்தைகளுடன் விலாவாரியாக சினிமாவை பற்றி அலசி ஆராய்கிறோம். காலம் மாறிவிட்டது. சினிமாவின் ஆதிக்கம் இங்கே கொடிகட்டி பறக்கிறது. நம்மை விட சினிமாவின் technical detailsஐ நம் குழந்தைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அவர்கள் சொல்லித்தான் எனக்கு பல படங்களின் பெயர் கூட தெரியவரும்.


பொதுவாக தமிழ் படங்கள் பார்க்காத என் மகன் எந்திரன் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றான். காரணம் அவனின் நண்பர்கள் யாவரும் பார்க்கப்போகிறார்களாம். ஆங்கிலத்தில் டப்பிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வேறு ஒரு யோசனை அவனுக்கு. ஆனால் திரும்பும் இடம் எங்கும் இப்படத்தை பற்றியே பேசுவதால் வேறு வழியில்லாமல் பார்க்க காத்து இருக்கிறான். எங்கள் நண்பர்கள் வேறு போன் செய்து டிக்கெட் புக் செய்து விட்டீர்களா? என்றைக்கு போகிறீர்கள்? என்று சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டி தொட்டி எங்கும் இதே பேச்சுத்தான். உறவினர்களுக்கு I.S.D செய்து நலம் விசாரிக்கலாம் என்றால் முதல் கேள்வி, நன்றாக இருக்கிறீர்களா? இரண்டாம் கேள்வி,”எந்திரன் பார்த்துவிட்டீர்களா? என்பதாகும். இப்படி நாலா பக்கத்திலிருந்தும் கேள்விக்கனைகள் பாய்வதால் நாங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சிக்கு போகலாம் என்று புக் செய்துள்ளோம். எனக்கு எந்த ஒரு புது படமும் முதல் சில நாட்களுக்கு பார்க்க பிடிக்காது. ரசிகர்கள் அடிக்கும் காது கிழிக்கும் விசில் சத்தம் , அவர்கள் போடும் ஆட்ட பாட்டத்திற்கு நடுவே ஒரு வசனமும் புரியாது. அப்படிப்பட்ட ஆரவார சூழ்நிலையில் என்னால் நிம்மதியாக படம் பார்க்க இயலாது. தலைவலி தான் மிஞ்சும். ஆனால் எந்திரனை நான் மூன்றாம் நாளே பார்க்க ஒத்துக்கொண்டதற்கு பல காரணங்கள். ஒன்று படம் பற்றிய இமாலய எதிர்பார்ப்பு, இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்ற பரிதவிப்பு, படம் பார்த்த பலர் படத்தை அஹா ஒஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்,அப்படி என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு, அடுத்து சூப்பர் ஸ்டார், சங்கர்,ஐஸவர்யாவின் கூட்டனி. உலக அரங்கில் தமிழ் படத்திற்கான பெரும் அங்கீகாரம். அந்த வரலாற்றில் நாமும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம். இது என்ன பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமா என்று கேட்காதீர்கள். இப்படத்தை பொறுத்தவரையில் ஏதோ ஆர்வக்கோளாறினால் எத்தொகையாயினும் அத்தொகை கொடுத்து இப்படம் பார்ப்பதே எல்லோரின் குறிக்கோளாகிப்போனது.. படித்தவர், படிக்காதவர், அறிந்தவர், அறியாதவர், என்று எல்லா தரப்பும் இப்படத்திற்காக சுயநினைவில் நம் பர்ஸ்களுக்கு சூடு வைத்துக்கொள்ள முன் வந்துள்ளோம்.. என்ன செய்வது peer pressure வேறு. எந்திரன் பற்றிய மந்திரம் ஓத தெரியாவிட்டால் மனித குலத்தில் இடம் இல்லை என்று கூறிவிடுவார்களே என்று பயந்து, நானும் சீக்கிரம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டேன். இதற்கு மறுத்தால் என் வீட்டிலேயே பூகம்பம் வெடிக்கும்..... ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை என்ற கதையாக நானும் கும்பலோடு கோவிந்தா போட காத்திருக்கிறேன்.

Wednesday, September 22, 2010

தாய்மை

திறக்காத கண்களை
திறக்க வைத்து
பல் துலக்கி
குளிக்க வைத்து
அவசரமாய் சீருடை மாட்டி
சுட்டு வைத்த இட்லியை
வாயில் திணித்து
முழுங்கி விடு என
ஒருவாய் தண்ணீரும் கொடுத்து
புத்தகப் பையை தோளில் மாட்டிவிட்டு
பள்ளிக்கு கையசைத்து
அனுப்பி விட்டு
மாலை வரை
காத்திருப்பேன் எப்பொழுது
நீ திரும்பி வருவாய் என.


வந்த பின்
கை,கால் கழுவ வைத்து
சாப்பிட டிபனும் கொடுத்து
”எடுத்து வா” புத்தகப் பையை என்பேன்.
பையை எடுத்து வர பத்து நிமிடம்
திறப்பதற்கோ ஐந்து நிமிடம்
பாட புத்தகத்தை எடுப்பதற்கு
மற்றுமொரு ஐந்து நிமிடம்.

வீட்டு பாடம்
செய்ய வைப்பதற்குள்
என் தலைக்குள் பெரும் சூறாவளி.
காற்றின் வேகம்
மின்சாரமாய் உடம்பெங்கும் பாய
கோபத்தில் கைகளோ
உன் உடம்பில்
தடம் பதிக்க
அழுது கொண்டே முடித்திடுவாய்
வீட்டுப் பாடம் அனைத்தையுமே.
தேம்பி தேம்பி
களைத்திடுவாய்
படித்து முடித்தப் பின்
உறங்கிடுவாய்.

புயலுக்குப் பின் அமைதியாக
நீ உறங்கிய பின்
உன் அருகில்
அமைதியாய் வந்து
உன் தலையை
என் மடியில் கிடத்தி
உன் தலை கோதி
நெற்றியில் முத்த மிடுவேன்
கண்களில் நீர் நிரம்பி
கண்ணத்தில் வழிந்தோட
உன்னை வாரி அணைத்து
தூங்கும் உன்னிடம்
காதுகளில்
மெதுவாக ஓதிடுவேன்
“சாரிடா கண்ணா” என்று.
 

Sunday, September 19, 2010

ரசிகபக்தர்கள்

இன்று நாளிதழில் நான் படித்த செய்தி என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. “எந்திரன் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் ரசிகர் மன்றத்தினர் முட்டி போட்டு 1350 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.”
எங்கே செல்கிறது நம் இளைஞர் சமூகம்? யாரோ ஒருவரின் வெற்றிக்காக இப்படி தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கலாமா?  ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் கண்மூடித்தனமான ரசிகபக்தர்களாக இருப்பதனால் இவர்களுக்கு என்ன பயன்?  யாருக்காக இப்படி செய்கிறார்களோ அவர் ஒரே வரியில் “நானா அப்படி செய்யச்சொன்னேன் ?” என்று கேட்டுவிட்டு அவர் தன் வேலையை பார்க்க போய்விடுவார்.  சுடும் வெய்யிலில் முட்டி தேய இவர்கள் தங்களை வருத்திக்கொண்டு இங்கு இவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அங்கு யாருக்காக இவர்கள் வேண்டுகிறார்களோ அவர் ஏசி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார்.   இவர்களுக்கு என்ன “அவார்டா’ கிடைக்கப்போகிறது? வேறு வேலைவெட்டி இல்லாத இவர்கள்  தங்களின் குடும்பங்களுக்காக கூட  இப்படி வேண்டிக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் முன் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்க இவர்களுக்கு எது பெரிய வேண்டுதலாக இருக்கிறது பாருங்கள்.  இப்படி பட்ட இந்தியாவைத்தான் திரு.அப்துல் கலாம் அவர்கள் 2020ல் பார்க்க நம்மை கனவு காணச்சொன்னாரா? தெரியவில்லை.  வாழ்க்கையில் போராடி முன்னேர வேண்டும் என்று நினைப்பவர் எவரும் இப்படி நேரத்தை விரயம் செய்ய மாட்டார்கள்.  பொறுப்புள்ள யாரும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்கைகளை செய்ய மாட்டார்கள்.  தங்களின் தாய் தந்தைக்காக இப்படி வேண்டிகொண்டிருப்பார்களா? நம் நாட்டை காக்க வெய்யிலிலும் குளிரிலும் போராடும் வீரர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக இப்படி வேண்டியிருப்பார்களா?  அண்டை நாட்டில் அன்றாடும் உணவுக்கும் , உயிருக்கும் போராடும் நம் இனமாம் தமிழ் இனத்திற்காக இப்படி வேண்டுகிறார்களா? உலகம் முழுதும் ஒன்றும் அறியா குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை நிணைத்து அவர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரேனும் வடிப்பார்களா?  இப்படி எத்தனையோ வேண்டுதல்கள் நமக்காக காத்திருக்க தேவை இல்லா ஒன்றிற்காக எதற்காக வேண்டுகிறார்கள்?  கடவுள் என்ன ஒன்றும் அறியாதவனா இதற்கெல்லாம் மயங்கிவிட??  யார் யாரை இப்படி  இங்கு ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்பதே தெரியவில்லை.   யாருக்கு இதனால் என்ன லாபம்?  பணக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.  தெருக்கோடியில் புரள்பவர்கள் புரண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்..எது எப்படி ஆயினும் முட்டி தேய்வது தான் மிச்சம்.  இவர்கள் எல்லாம் சமூகத்தின் எச்சம்.......  

Thursday, September 16, 2010

சில்லரைத்தனம்

கோவிலுக்கு போவேன்
இறைவனை அருகில்
சென்று தரிசிக்க
மடித்து வைத்த காசை
யாருக்கும் தெரியாமல்
பூசாரியின்
கையில் வைத்து
தினிப்பேன்.

கோவில் வாசலில்
ஒரு வேலை
உணவுக்கு
பிச்சை எடுக்கும்
வயதான முதியவருக்கு
சில்லரை இல்லை என்பேன்.

ஊனம்

கண் இல்லை
கால் இல்லை
வாய் பேச முடியவில்லை
நாங்கள் யார்??
ஊனமுற்றோர்.

கண் உண்டு
கால் உண்டு
திறனாய் பேச வாயும் உண்டு
இதயத்தின் உள்ளிருக்கும்
சிறியதாம் மனசாட்சி மட்டும்
இல்லா நீங்கள் யார்???

Thursday, September 9, 2010

ஜுனியர் ஜோடி நம்பர் 1

                       
                        ஓடி விளையாடு பாப்பா--நீ
                         ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
                         கூடி விளையாடு பாப்பா--ஒரு
                         குழந்தையை வையாதே பாப்பா.

                         காலை யெழுந்தவுடன் படிப்பு--பின்பு
                         கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
                         மாலை முழுதும் விளையாட்டு --என்று
                         வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.........................

   “ஸ்ருதி, ரிஷி மணி எட்டாகுது. சாப்பிட வாங்க.  சாப்டுட்டு ஒன்பது மணிக்கெல்லாம்  படுங்க.  அப்போதான் நாளைக்கு சீக்கிரமாக எழுந்திருக்க முடியும்” என்று நான் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தேன்.  “அம்மா ப்ளீஸ் டென் மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ்” என்று சாக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இருவரும் ஒற்றுமையாக இருக்கும் நேரம் டிவி பார்க்கும் நேரம் ஒன்று தான்.  அந்த நேரத்தில் பார்க்கையில் பாசமலர் சிவாஜி,சாவித்திரி தோற்றுவிடுவார்கள்.  மற்ற நேரங்களில் மூன்றாம் உலகப்போர் மயம் தான்.  என்ன தான் அப்படி பார்க்கிறார்கள் என்று நானும் சென்று பார்த்தேன்.  “அம்மா நீங்களும் வாங்க.  ஜூனியர் ஜோடி நம்பர் 1 பாருங்க.  எல்லோரும் எப்படி நல்லா டான்ஸ் ஆடுறாங்க தெரியுமா? என்று கூறிய என் மகள் என்னையும் அந்த “இடியட் பாக்ஸ்” முன் உட்கார வைத்தாள். கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்கலாம் என்று நானும் பார்க்க ஆரம்பித்தேன்.   பார்க்க நன்றாகத்தான் இருந்தது.  ஆறு வயது முதல் குழந்தைகள் பாட்டுக்கேற்ப ரசனையுடன் நடனமாடியது அழகாக இருந்தது.  மறுநாளும் அதே நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.   இப்படியே இரண்டு வாரங்கள் தொடர்ந்து பார்த்தேன்.  யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது.  ஒரு நாள் அந்த நிகழ்ச்சியைப் பற்றி யோசித்து பார்க்கையில் பல உண்மைகள் புலப்பட்டது.

    ஜூனியர் ஜோடி நம்பர் 1 என்பது சிறுவர்களுக்கான நடன போட்டி.  அதில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஜோடியாக நடனமாட வேண்டும்.  அவர்களின் நடனத்தை பார்த்து யார் சிறந்த ஜோடி என்று தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் குழு.  இதில் ஜெயிப்பவர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகள்.  இதில் கலந்து கொள்பவர்களுக்கும் பரிசுகள்.  எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுதும் அவர்களை தொலைக்காட்சியில் காண இயலும்.    நம் எல்லோருக்கும்  நம் முகம் டிவியில் தோன்றினால் மகிழ்ச்சிதானே?  கல்யாண வீட்டு வீடியோவில் கூட நாம் போஸ் கொடுப்போம்.  இப்படி இருக்கையில்  எந்த  பெற்றோருக்குத்தான் தன்  பிள்ளையை தொலைக்காட்சியில் பார்க்க ஆசையிருக்காது.   அதுவும் உலகம் முழுதும் பார்க்கப்படுவார்கள் என்றால் டபுள் மகிழ்ச்சிதானே?  முதலில் இந்த நிகழ்ச்சியின் பாசிடிவ் விஷயங்களை யோசித்தேன்.  முதலாவதாக நிகழ்ச்சியில் பங்கு பெறும்        குழந்தைகள் நன்றாக ஆட , நேர்த்தியாக ஆட கற்றுக் கொள்கிறார்கள்.  இரண்டாவது, ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை கூடுகிறது.  மூன்றாவது, கடினமாக உழைக்க கற்றுக் கொள்கிறார்கள்.  சக போட்டியாளருடன் சகஜமாக பழகும் வாய்ப்பு கிட்டுகிறது.  மனதை கஷ்டப்படுத்தும் விமர்சனங்களை கூட பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது போல நடிக்க கற்றுக்கொள்கிறார்கள்.

     இந்நிகழ்ச்சியினால் என்ன என்ன பாதிப்புக்குள்ளாகிறார்கள் இக்குழந்தைகள் என்பதையும் நான் எண்ணிப்பார்க்க தவறவில்லை.  கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயதில் இவர்களிடம் நடுவர்கள், “ உங்கள் ஜோடி கெமிஸ்டரி நன்றாக உள்ளது” , என்று கூறுகிறார்கள்.  அதன் அர்த்தம் புரிகிறதா இக்குழந்தைகளுக்கு என்று எனக்கு புரியவில்லை.  புரியாமல் இருப்பதே மேல் என்று நான் நினைக்கிறேன்.  ஆனால் எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டுவார்கள் இந்த பொம்மலாட்ட குழந்தைகள்.  “ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா?  பால்ய திருமணம் ஒழிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பால்ய ஜோடிகள் திரையில் எப்படி அங்கீகரிக்கப்படுகிறது??  இதை காணும் பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்கிறார்கள்.  இப்படி பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா?

     ஆடுவது காதல் பாடல்களுக்கு .  அதற்கு நடுவர்களாக அரியாசனத்தில் வீற்று இருப்பவர்கள்,” உங்கள் எக்ஸ்ப்ரெஷன் சூப்பர்”, என்பார்கள்.  ஆறு வயதுக்கும் , பத்து வயதுக்கும் எப்படி காதல் பற்றி உணர்வுகளை புரிந்து அரிந்து, முகத்தில் உணர்ச்சிகளை  கொண்டு வர முடியும்?  ஆனால் இந்நிகழ்ச்சியில் இவை நடக்கிறது.   அவர்கள் அந்த உணர்வுகளை உணர்ந்து வெளிகொணர வைக்கப்படுகிறார்கள்.   டிவி, சினிமா , இன்டர் நெட் என்று பார்ப்பதால்தான் இந்நாட்களில் பல குழந்தைகள் சிறு வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறார்கள் என்பது மருத்துவ ரீதியாக நீரூபிக்கப்பட்டிருக்கிறது.   Puberty is advanced to younger age these days due to over exposure.  பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள்.  இப்படி இருக்கும் காலகட்டத்தில் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் குழந்தைகளை காதல் பாட்டுகளுக்கு உணர்ச்சி பொங்க ஆட வைப்பது என்னைப் பொருத்த வரையில் கண்டிக்கத்தக்கது.  இதற்காக choreography என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் நடன அசைவுகளும் அபத்தம். Some of the dance movements are so obscene. எப்படித்தான் தங்கள் குழந்தைகளை இப்படி கெடுக்க பெற்றோருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை.  குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். உங்கள் நிறைவேறாத ஆசைகளை அவர்கள் மூலம் தீர்த்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்.  அவர்களுக்கும் ஆசைகள் உண்டு.  அவர்களுடைய உலகம் கள்ளம் கபடமற்றது அதில் சேற்றை வாரி இரைத்து அசிங்கப்படுத்தாதீர்கள். The children loose their childhood innocence with such exposure.

    சிறு வயதில் இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிடுகிறார்கள்.  இதுவும் ஒரு வகையில் குழந்தை தொழில் தான்(child labour) .   இதற்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.  சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க வழி தெரிந்துவிடுவதால் அவர்களுக்கு படிப்பின் மீது கவனம் குறையும் வாய்ப்புள்ளது.  பெற்றோர்கள் தங்களுக்கு பெருமை சேர வேண்டும் என்ற காரணத்திற்காக பலிகடாவாக குழந்தைகளை பயன் படுத்துகிறார்கள்.  அவர்கள் வெறும் நிகழ்காலத்தை யோசிக்கிறார்கள்.  எதிர்காலத்தை மறந்து விடுகிறார்கள்.  போட்டி, போட்டி, போட்டி, ஜெயிக்க வேண்டும், ஜெயிக்க வேண்டும், என்ற மந்திரமே ஓதப்படுகிறது.  இப்படி போட்டி சூழலிலேயே வளர்ந்தால் பிற்காலத்தில் எல்லாமே ஒரு போட்டியாகத்தான் பார்ப்பார்கள்.  எதிலும் , எல்லாவற்றிலும் ஜெயித்தாக வேண்டும் என்று போதிப்பது பெரும்பாலும்  நம் நாட்டில்தான்.  இதனால் தான் நம் சமுதாயமே ஒரு போட்டி மனப்பான்மை உடைய சமுதாயமாக இருக்கிறது. எதிலும் நம்மால் எளிதில் திருப்தி அடைய முடிவதில்லை.

     பிராக்டீஸ் (practice) என்ற பெயரில் அச்சிறு மொட்டுக்கள் கசக்கப்படுகிறார்கள்.  பெற்றோர்கள் அவர்களின் உடல்வலியை உணர்வதாக தெரியவில்லை. ஒரு நிமிடம் அக்குழந்தைகளின் வலியை உணர்ந்தால் இப்படி அவர்களை இரவு ,பகல் பாராது வாட்டி வதைக்க மாட்டார்கள்.  படிப்பு ஒரு புறம், டான்ஸ் ஒரு புறம் என்று அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல்.  உடலளவிலும் பாதிப்படைகிறார்கள்.   இதில் நான் இன்னொன்றும் கவனித்து இருக்கிறேன்.  நிகழ்ச்சியில் பங்கு   பெறும் குழந்தகளைவிட அவர்களின் பெற்றோர் மிகுந்த டென்ஷனகாக காணப்படுகிறார்கள்.  சிலர் கை பிசைந்து கொண்டே இருப்பார்கள்.   எளிதாக உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள்.   எல்லா ரியாலிட்டி ஷோவிலும் இது தான் நடக்கிறது. 

     சூப்பர் சிங்கர் ஜுனியர் என்றொரு நிகழ்ச்சி முன்பு நடந்தது.  அது ஒரு பாட்டு பாடும் போட்டி. அதில் ஐந்து வயது சிறுவனை அவனைவிட பெரிய குழந்தகளுடன் போட்டி போடச் செய்து அழகு பார்க்கிறார்கள்.  Ofcourse he is a child prodigy.  ஆனால் நரம்பு தெரிக்க அந்த குழந்தை கஷ்டமான பாடல்களை தேர்வு செய்து கஷ்டப்பட்டு பாடும் பொழுது கோபத்தில் என் நரம்பும் தெரிக்கும்.  என் கோபமெல்லாம் பெற்றோர் மீது தான்.  அந்த பாலகன் பாடும் பொழுது தன் தந்தையை பார்த்துக்கொண்டே பாடுவான்.  “அப்பா நான் ஒழுங்காக பாடுகிறேனா? தப்பு செய்திருந்தால் மன்னிக்கவும்” என்று பயம் கலந்த அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.  அவன் பாடும் பொழுது அவன் தந்தை கயிற்றின் மேல் நடப்பவரை போல் முழி பிதுங்கி அமர்ந்திருப்பார்.   பெற்றோரை திருப்திபடுத்த வேண்டுமே என்ற கட்டாயத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள்.  இதற்காக முகம் சுழிக்காமல் மிக மிக கடினமாக உழைக்கிறார்கள்.  பெற்றோரின் கோபதாபங்களையும் இவர்கள் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. 

     பள்ளிகளும் தங்கள் பள்ளிக்கு இப்படிபட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெயர் கிடைக்கிறது என்ற காரணத்தினால் attendance பற்றி கவலைபடாமல், படிப்பை பற்றி கவலைப்படாமல் இக்குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.  தொலைகாட்சி நிறுவனங்களும் வருமானம் என்ற நோக்கிலேயே இம்மாதிரியான நிகழ்ச்சிகளை அள்ளி வீசுகிறார்கள்.  அவர்களை கேட்டால் “பார்த்து ரசிக்க ஆட்கள் இருக்கும் பொழுது ரசிகர்களின் ரசனைக்கேற்ப படைப்பது தான் எங்கள் வேலை” என்று தங்கள் தரப்பு நியாயத்தை மனசாட்சியை விற்று கூறுகிறார்கள்.

     பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  குழந்தைகள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.  ஆனால் அங்கு எல்லோர் முன்னிலையிலும் அவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை.  உலகெங்கும் தொலைகாட்சியில் பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் அக்குழந்தைகளை ஆட விட்டு நிறை குறைகளை எல்லோர் முன்புப் விவாதிப்பது, விமர்சிப்பது ஆலோசனை கூறுவது என்பது அக்குழந்தைகளை உயிரோடு தோளுரிப்பு செய்வது போன்றது.  பெரியவர்களான நாமே நம்மை யாரேனும் குறை கூறிவிட்டால் சட்டென்று ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் இருக்கிறோம் . எல்லோர் முன்பும் இப்படி கூறிவிட்டார்களே என்று எத்தனை குழந்தைகள் அழுகின்றன, தலை குணிந்து நிற்கின்றனர்.  இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?  குழந்தைகளுக்கு அவமானம் என்றால் அது அவர்களுக்கும் தானே?  மனரீதியில் அவர்கள் பாதிப்புள்ளாகிறார்கள்.  சிலர் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கலாம்.

       படிக்க வேண்டிய வயதில் இப்படி ஆடல் பாடல் என்று கவனத்தை சிதற விடுகிறார்கள்.  நடனத்திற்காக பாடல்களை மனப்பாடம் செய்யும் நேரம் பாடங்களை படிக்கலாம்.  வாழ்க்கையில் கலை, விளையாட்டு எல்லாம் தேவைதான்.  ஆனால் படிப்பை பணயம் வைத்து சிறு வயதில் மற்றவற்றில் போட்டி போடுவது எவ்வளவு தூரம் பயனுள்ளதாக இருக்கு?.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம்.    திறமைகளை வெளிக்கொணர இவையெல்லாம் ஒரு பாதை தான்.  ஆனால் இதுவே வாழ்க்கைபாதை ஆகி விடமுடியாது.  படிப்புக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்கவும் முடியாது.  They cannot do justice to their studies.  அவர்களின் கவனம் முழுதும் ஆடல் பாடலில் லயித்துவிடும்..  அப்படியே அவர்களில் சிலர் இரண்டிலும் சிறந்து விளங்கினால் அதற்காக அவர்கள் எவ்வளவு பாடு பட வேண்டும்.  இப்படி ஜெயித்து வருவதினால் எதிர்காலத்தில் என்ன பயன்??

     எல்லாமே உலகமயமாகி போன இக்காலத்தில் கல்வி அறிவு மிக மிக முக்கியம்.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.  குழந்தைகளை நேர்வழியில் இட்டுச்செல்வது பெற்றோரின் கடமை.  எத்தனையோ பேர் சிறு வயதில் புகழின் உச்சியில் இருந்துவிட்டு பின் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள்.   இப்படி பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சிறு வயதில் limelight க்கு வருவதினால் நிஜ வாழ்க்கையின் அழகினை, நிதர்சனத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.   சிறு வயதில் புகழ் பெறுவதால் அதை அவர்களுக்கு கையாள தெரிவதில்லை.  குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்று ஆகிவிடுகிறது.  தாங்கள் உபயோகப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரும் வயதும் இல்லை.

                        ”தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
                       முந்தி இருப்பச் செயல்”
                      
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.   ”ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்”.  நாம் நம் குழந்தைகளை குழந்தை பருவத்தை அனுபவிக்க விடவேண்டும்.  அவர்களை மனித நேயம் மிக்க மனிதர்களாக வளர உதவ வேண்டும்.  இதுவே நம் கடமை. 

     இப்படியாக பலவாறு யோசித்து நான் இனி இந்நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.  குழந்தைகள் தங்களை வருத்திக்கொண்டு நம்மை சந்தோஷப்படுத்துவதை என்னால் ஏற்கமுடியவில்லை.எனவே இப்படிபட்ட நிகழ்ச்சிகளுக்கு நம் ஆதரவை கொடுக்காமல் இருப்பதே நம்முடைய எதிர்கால சந்ததியருக்கு நாம் செய்யும் நற்செயல்.  மலரட்டும் இம்மொட்டுக்கள் அப்பழுக்கில்லா மலர்களாக.........  பாரதியின் பாட்டுக்கேற்ப அவர்கள் குழந்தைபருவத்தை சந்தோஷமாக கழிக்கட்டும்.

Monday, August 30, 2010

பசி பலவிதம்

     காலை 6.30.  ட்ரிங்,ட்ரிங் என்று அலாரம் அடித்தது.  தலையில் ஒரு தட்டு தட்டி அதனை அமைதி படுத்திவிட்டு சில நிமிடங்கள் படுக்கையில் கிடந்தேன்.  அடித்து எழுப்பிய அலார கடிகாரத்தின் மேல் கோபம் கோபமாக வந்தது.  இது ஏன் தான் இப்படி சரியான நேரத்திற்கு வேலை பார்க்கிறதோ என்ற கோபம்.  பின் திறக்க மறுத்த விழிகளை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.  கைகளை விரித்து பார்த்து “கடவுளே இன்று நாள் நன்றாக இருக்கட்டும்.  எல்லோரையும் நன்றாக வை”  என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு எழுந்தேன்.  சோம்பலாக இருந்தாலும் கடமை உணர்வுடன் என் போர்வையை மடித்து வைத்துவிட்டு பல்துலக்கச் சென்றேன்.

     பல் துலக்கி, முகம் கழுவி நான் திருப்பதியாம் என் அடுப்பறையில் நுழைந்தபொழுது மணி 6.45.  காலை டிபன் என்ன, மதியம் யாவருக்கும் லஞ்ச் பாக்ஸ் என்ன என்று யோசித்து ஒரு வழியாக சமையலை தொடங்கினேன்.  காலையில் வெங்காயம் நறுக்கி சமையல் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை.  கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அரிந்து முடித்தேன்.  வாணலியை அடுப்பில் ஏற்றியபொழுது மணி ஏழு.  ஆஹா பிள்ளைகளை எழுப்ப வேண்டிய நேரம் ஆகிவிட்டதே என்று அடுப்பை சிம்மரில் வைத்துவிட்டு அவர்களை எழுப்பச் சென்றேன்.  “குட்டீஸ் மணி ஏழு இன்னும் ஐந்து நிமிடங்களில் எழுந்து விடுங்கள்,” என்று கூறிவிட்டு ஏசியை ஆணைத்துவிட்டு என் வேலையை தொடர சென்றேன்.


      பாதி சமையலில் திரும்பவும் அவர்கள் அறைக்குச் சென்று,”மணி 7.15 ஆகிவிட்டது.  பள்ளிக்கு கிளம்ப நேரமாகிவிடும்.  எழுந்து கிளம்புங்கள்”, என்று மீண்டும் சேவலைப் போல் கொக்கரித்துவிட்டு அடுக்களைக்குள் சென்றேன்.  ஒரு வழியாக 7.20க்கு குழந்தைகள் இருவரும் எழுந்து,  பல் துலக்கி பின் காலை கடன்களை முடித்து பள்ளிக்கு தயாரானார்கள்.  7.50க்கு சாப்பாட்டு மேசையில் இருவருக்கும் இரண்டு துண்டு ரொட்டியை தட்டில் வைத்து சாப்பிடுங்கள் என்று கூறினேன்.  எட்டு மணிக்கு என் பன்னிரண்டு வயது மகள் சாப்பிட்டு முடித்தாள்.  என் எட்டு வயது மகனோ,”அம்மா, ஏன் இவ்வளவு காலை உணவு தருகிறீர்கள்? இப்பொழுதுதானே பால் குடித்தேன்.  அதற்கு மேல் இரண்டு பிரட் சிலைஸ் வேறா? நான் எப்படி சாப்பிடுவேன்? பிரட்டில் அந்த ஓரங்களை நறுக்கி விட்டுத்தாருங்கள்.  I don't like to eat the crust." என்று வியாக்கானம் பேசிமுடித்தான்.  அவனை சாப்பிட வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.  என் தந்தை கூறுவது என் நினைவிற்கு வந்தது.  “அவனவன் நொய்க்கு அழுகிறான் நீங்கள் நெய்க்கு அழுகிறீர்கள்,” என்பார். 


     இரண்டு மணி நேரம் பம்பரமாக சுற்றி வேலைபார்த்ததால் எனக்கு சிறிது ஓய்வு தேவைபட்டது.  என் அறையில் “மெயில் செக்” செய்யலாம் என்று சன்னலோரமாக அமர்ந்தேன்.  மழை வருவது போல் இருந்ததால் சிறிது நேரம் அந்த மேகக்கூட்டங்களை பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.  அப்பொழுது நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிருத்தும் இடம் அருகில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க ஒரு இந்திய ஆடவர் நின்று கொண்டிருந்தார்.  அவர் தோளில் ஒரு கருப்பு நிற “பேக் பேக்” தொங்கி கொண்டிருந்தது.  எண்ணெய் என்ன என்பதை பார்த்திராத அவர் தலை முடி வரண்டு காணப்பட்டது.  கரும் பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தார்.  அவருடைய கருத்த தேகத்தை அது மேலும் கருமையாக்கி காட்டியது.  அந்த சீருடையை அவர் துவைத்து பல நாட்கள் ஆகியிருக்கும் போல் இருந்தது. தோட்ட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.  ஏன் அங்கு நின்று கொண்டு அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.  சுற்றி முற்றி பார்த்த அவர் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவசர அவசரமாக சில அடிகள் எடுத்து வைத்தார்.


    அவர் சென்ற திசையில் என் கண்கள் சென்றது.  அங்கு புல்லில் சில ஊதுபத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன் அருகில் இரண்டு ஆரஞ்சு பழங்களும் ஒரு ரொட்டி பாக்கெட்டும் இருந்தது.  புல்லின் மேல் திறந்தபடி கேக் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.  அவையாவும் பேய்களுக்காக சீனர்களால் படைக்கப்பட்ட உணவு.  ஆகஸ்ட் மாதம் பேய்கள் மாதம் என்று அவர்கள் கொண்டாடுவார்கள்.  உயிரோடு இருக்கும் பொழுது செய்கிறார்களோ இல்லையோ இறந்த பின் ஆவியாய் சுற்றும் ஆவிகளுக்கு பலவகையான உணவுகளை வைத்து படைப்பார்கள்.  பேய்கள் அந்த உணவை சாப்பிடும் என்பது அவர்களின் ஐதீகம்.  பேய்களை அப்படி குஷிபடுத்துகிறார்களாம்.  சிலர் பொய்யான காகித காசுகளை எரிப்பார்கள்.  அவை பேய்களை சென்று அடையுமாம்.  அதை வைத்து எந்த கடையில் என்ன வாங்கும் பேய்கள் என்பதனை யான் அறியேன் பராபரமே.  நான் கடவுளை தவிர யாரையும் நம்புவது கிடையாது.  காசென்றால் பேயும் பிணமும் வாய் பிளக்கும் என்பதை இதை வைத்துத்தான் கூறினார்களோ?  நம் ஊரில் வருடத்திற்கு ஒரு முறை இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் நமக்கு பிடித்தவிற்றை சமைத்து வைத்து படைத்து பின் நாமே ஒரு கட்டு கட்டுவது வழக்கம். 

     சுற்றிலும் நோட்டமிட்ட அந்த ஆடவர் சில நொடிகள் படைக்கப்பட்ட அந்த உணவின் அருகில் நின்றார்.  நம் ஊரில் இப்படி பட்ட இடங்களை மிதிப்பதற்கோ தொடுவதற்கோ கூட பயப்படுவார்கள். எங்கே பேய்கள் நம்மை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம்.   பின் மீண்டும் ஒரு முறை யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்த ரொட்டி பாக்கெட்டை கடகடவென எடுத்து தன் பேக்பேக்கில் வைத்து திணித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.  சில அடிகள் நடந்த அவருக்கு என்ன தோன்றியதோ மீண்டும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு மீண்டும்  சென்றார்.  ஒரு வேலை பேய்களுக்கான உணவு என்று நினைத்து எடுத்த ரொட்டியை வைத்து விட போகிறார் என்று காத்திருந்தேன்.  அங்கு சென்ற அவர் ஒரு நொடியில் அங்கு இருந்த இரு ஆரஞ்சு பழங்களையும் எடுத்து வேகமாக பையில் வைத்து திணித்தார்.  அங்கிருந்த கேக் துண்டுகள் புல்லின் மேல் இருந்தபடியால் விட்டுச்சென்றார்.  பின் யாரும் தன்னை பார்க்கவில்லை என்ற நிம்மதி ஒரு புறம் , சரி இன்றைக்கு நமக்கு ஒரு வேலை உணவு கிடைத்துவிட்டது. அந்த காசு மிச்சம் என்ற நிம்மதி ஒரு புறம் என்று ஒரு பெருமூச்சுடன்  தன்  வேலையை தொடங்க நடக்கலானார்.  அவருக்கு கடைசி வரை நான் பார்த்துக் கொண்டிருந்தது தெரியாது.


    உணவின்றி உடையின்றி இவர்கள் படும் பாடு மனதை கனக்கச்செய்தது.  பசி பத்தும் அறியாது.  பேய் உணவானால் என்ன பசிக்கு பேதமில்லை.  இப்படியெல்லாம் வெளிநாடுகளில் வந்து கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் படும் பாடு இவர்களின் குடும்பத்தாருக்கு எங்கே தெரியப்போகிறது. ஊருக்கு செல்லும் பொழுது கசங்காத துணிகளை அணிந்து செல்லும் இவர்கள் இங்கு கசங்கிய துணியாய் வாழ்க்கையில் போராடுவது மனதை நெருடுகிறது.  அவரை அழைத்து ஒரு வேலை உணவாவது கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து உடை மாற்றி  வாசலுக்கு சென்று பார்த்த பொழுது அவர் எங்கோ சென்று மறைந்திருந்தார்.  அவர் விட்டுச்சென்ற கேக் துண்டுகள், எரிந்து முடிந்த ஊதுபத்தி குச்சிகள் எல்லாம்  எடுத்து குப்பையில் போட்டபடி போய்க்கொண்டிருந்தார் மற்றொரு சீனத் தொழிலாளி.  கனத்த மனத்துடன் மீண்டும் என் வேலையை தொடர நான் வீட்டிற்குள் சென்றேன்.  ஜாம், வெண்ணெய் தடவிய பிரட்டை சாப்பிட பிடிக்காமல் சலித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற மகன் கண் முன் தோன்றினான்.  வரட்டு ரொட்டிகளை திருப்தியுடன் சாப்பிடப்போகும் அந்த ஆடவரும் கண் முன் தோன்றினார். “I don't like to eat the crust" என்று என் மகன் கூறியது மீண்டும் என் காதுகளில் ஒலித்தது.  மனதின் ஒரு ஓரத்தில் ஏனென்று தெரியாத ஒரு குற்ற உணர்வு தலை தூக்கியது.  ஆம் பசி பலவிதம் தான்.

Tuesday, August 24, 2010

பாகம் 3---வாங்கி வந்த வரம்

      பொழுது விடிந்தது.  பசி என்பது என்ன என்று நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.  ஒன்பது மணி இருக்கும்.  குழந்தை நல மருத்துவர் வந்தார்.  அவரிடம் என்னால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.  இரத்த பரிசோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் கூற இயலும் என்று கூறிவிட்டுச் சென்றார்.  இரத்த பரிசோதனை முடிவு மூன்று நாட்கள் கழித்துத்தான் தெரியும் என்றும் கூறினார்.  ஆயிரம் கடப்பாறைகளை கொண்டு என் தலையை தாக்குவது போல் இருந்தது.  என் மகனின் பிஞ்சு கைகளில் இருந்து இரத்தம் எடுக்க ஒரு நர்ஸ் வந்தார். அவர் வைத்திருந்த ஊசி என் மகனின் கை அளவு இருந்தது. 


மூன்று நாட்கள் என்ன என்று தெரியாமலேயே கழிந்தது.  மருத்துவர் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தது.  அன்று காலை வந்த மருத்துவர் இரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டதாக கூறினார்.  கடவுளே ஒன்றும் இல்லை என்று கூறவேண்டும் என்று எல்லா கடவுள்களையும் மத வேறுபாடு இன்றி மனதுக்குள் மன்றாடினேன்.  ஆனால் மருத்துவரோ இரத்தத்தில் கிருமி இருப்பதாகவும் அதற்காக பதினைந்து நாட்களுக்கு நரம்பில் ஊசி போடவேண்டும் என்றும் கூறினார்.  இதை மட்டும் கூறியிருந்தால் கூட நான் ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருப்பேன்.  அதன் பின் அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சை பிழிந்தது.  குழந்தையின் முதுகுத்தண்டில் இருந்து நீர் எடுத்து கிருமி மூளையை தாக்கி இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.  இதை கேட்ட என் மனம் சுக்கு நூறாகியது.  ஆனால் கண்ணீர் மட்டும் இம்முறை என் கண்களில் இருந்து வழியவில்லை.  நான் தான் ஜடமாகிவிட்டேனே!  கல்லாகி விட்டேனே. பின் எங்கிருந்து என் உணர்ச்சிகள் வெளியேறும்?  அன்று மதியம் வந்த நர்ஸ் முதுகுத்தண்டில் நீர் எடுக்க என் ஆசை மகனின் முகம்  அவன் பாதம் தொடுமாறு வளைத்து வைத்து ஓர் ஊசியை குத்தி நீர் எடுத்தார்.  பாவம் என் ராஜா வலி பொறுக்க மாட்டாமல் வீல் என்று கத்தினான்.  தொடர்ந்து கத்தக்கூட அவனிடம் தெம்பில்லை.  அந்த கொடூர காட்சியை பார்க்க என்னிடம் தைரியம் இருக்கவில்லை.  இம்முறை பரிசோதனை முடிவிற்காக இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.  மீண்டும் யாவரும் மெளன விருதம்.  இரண்டு நாட்கள் கழித்து வந்த முடிவில் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் கிருமி இல்லை என்ற நற்செய்தியை கூறினார்கள்.  இரண்டு வாரங்கள் நரம்பு ஊசி போட்டால் முற்றிலும் குணம் அடைந்து விடுவான் என்று கூறினார் மருத்துவர்.  இதை கேட்ட உடனேயே எல்லா தெய்வங்களுக்கும் என் நன்றியை மனதுக்குள் கூறினேன்.  பல நாட்களுக்கு பிறகு பசி என்ற உண்ர்ச்சியை உணர்ந்தேன். 

     வெண்டைக்காய் அளவில் இருந்த அவனின் கைகளிலும் கால்களிலும் நரம்பு கண்டு பிடித்து மருந்தை ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றானது.  பார்க்கவே பயமாக இருந்தது.  உடம்பெங்கும் ப்ளாஸ்திரியும் ,டியூபுமாக கோழிக்குஞ்சை போல் படுத்திருந்தான்.  கை கால்களை அவனால் அசைக்க முடியாமல் அவ்வப்பொழுது சினுங்கினான்.  கடவுள் சோதித்தாலும் கைவிட மாட்டார் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை.  என் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகள் வேலூரில் இருந்தார்.  அவர் எங்களுக்கு பேருதவியாக இருந்தார்.  தினமும் எங்களுக்கு உணவு சமைத்து எடுத்து வருவார் அந்த சுட்டெரிக்கும் வெய்யிலில்.  குழந்தைக்கும் எனக்கும் வேண்டியதை வாங்கி வந்து கொடுப்பார்.  கடவுள் நேராக வர இயலாவிட்டால் யார் மூலமாவது வருவாராம்.  அவர்களை நான் அப்படித்தான் பார்த்தேன்.  இரண்டு வாரங்கள் பின் குழந்த நன்றாக இருப்பதாகவும் நாங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவர் கூறினார்.  இனி பயப்படும்படி ஏதும் இல்லை என்றார்.  அன்றுதான் என் உதட்டோரத்தில் ஓர் சிறிய புன்னகை மலர்ந்தது.   ஆனாலும் என் மூளைக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என் மகனின் உடல் நிலையைப்பற்றி. மருத்துவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு தஞ்சையை நோக்கி புறப்பட்டோம். 


     தஞ்சையில் வீட்டை அடைந்ததும் தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.  மருத்துவரின் அறிவுரைப்படி யாரையும் குழந்தையை பார்க்க நாங்கள் அனுமதிக்கவில்லை.  இடையை அதிகரிக்க செய்வதே என் தலையாய கடமை என்று மருத்துவர் கூறியிருந்ததால் இரவு பகல் பாராது பால் ஊட்ட காத்திருப்பேன்.  அவனுக்கு செலுத்தப்பட்ட மருந்து கொஞ்சமா நஞ்சமா?  எனவே அவன் தூங்கி கொண்டே இருந்தான்.  எழுப்பி எழுப்பி பால் அருந்த செய்வேன்.  குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்று பல உறவினர்களுக்கு கோபம்.  சிலருக்கு குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற சந்தேகம்.  நான் எதையும் பொருட்படுத்தாமல் என் குழந்தை உடனேயே என் நேரத்தை கழித்தேன்.  இப்பொழுது மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டது.  பகலில் தூக்கம் இரவினில் ஆட்டம் என்று அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறேன்.  முகம் பார்க்கிறானா?  சிரிக்கின்றானா?  நகர்கின்றானா? என்ற கேள்விக் கணைகள் நாலாபுரமிருந்தும்.  ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் எனக்கு தூபம் போடுவது போல் இந்த கேள்விக் கணைகள் தாக்கும்.  இங்கிதம் தெரியாத சிலர் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி சென்றார்கள்.   மருத்துவரை கேட்ட பொழுது பொருமை மிக அவசியம்.  மற்ற குழந்தைகள் போல் அல்ல குறை பிரசவ குழந்தைகள்.   அவை எல்லாவற்றையுமே காலம் தாழ்த்தித் தான் செய்யும்.  யார் சொல்வதையும் கேட்காதீர்கள் என்றார்.  ஆனாலும் தாய் மனசல்லவா?? என் குழந்தை எப்பொழுது என் முகம் பார்த்து “அம்மா” என்று அறிந்து என்னை அழைப்பான் என்று என் மனம் ஏங்குகின்றது.  காத்திருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் அத்திரு நாளுக்காக......        

Monday, August 23, 2010

பாகம் 2--வாங்கி வந்த வரம்

     ஐந்தாம் நாள் வந்தது.  ”இன்று நீ அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு வரலாம்” என்று என் தந்தை கூறினார்.  முதன் முதலில் என் குழந்தையை பார்க்க போகும் மகிழ்ச்சியில் எனக்கு பசியே எடுக்கவில்லை.  மனம் பட்டாம் பூச்சியென படபடத்தது.  நான் இருந்த ஆஸ்பத்திரிக்கும் என் குழந்தை இருந்த ஆஸ்பத்திரிக்கும் பத்து நிமிடங்கள் தான்.  அச்சிறிய தூரம் கூட எனக்கு கடலளவாக தெரிந்தது.   காரை நிறுத்துவதற்குள் கதவை திறந்து இறங்கினேன்.  ஓடிப்போய் என் மகனை வாரி அணைத்து கொஞ்ச வேண்டும் என்று மனம் துடித்தது.  அவன் இருந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.


 கண்ணாடி கதவிற்கு பின் இருந்து பார்த்த எனக்கு கண்ணீர் பெருகியது.  பட்டுத்துணியில் போர்த்த நினைத்திருந்த என் மகன் ஒரு துணி கூட இன்றி ஒரு பூனைக்குட்டியைப் போல் கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருந்தான்.  ஒரு சிறு துண்டு அவன் இடுப்பிலிருந்து போர்த்தப் பட்டிருந்தது.  செவிலியர் அவனை தூக்கி வந்து என்னிடம் கொடுத்தார்கள்.  என் கைகளில் அவனை வாங்கி விட்டேனா என்ற சந்தேகம். வெறும் துணியை கையில் வைத்திருந்ததை போல் உணர்ந்தேன்.  அவ்வளவு சிறிதாக எடை குறைவாக இருந்தான்.  வாரி அணைத்து கொஞ்சக்கூட பயமாக இருந்தது.  எங்கே அவனுக்கு வலிக்குமோ என்று பயந்து மெதுவாக தூக்கினேன்.  கண் விழித்து அவன் பார்த்த பொழுது அவன் இமைகளில் கூட முடி வளராதிருப்பதை கண்டு பயந்தேன்.  எலும்பை தோல் மூடியது போன்ற உடம்பு.  தலையில் கை வைத்தால் நொலு,நொலு என்ற உணர்வு.  கை, கால்களில் விரல்கள் எல்லாம் தொல தொல என்று இருந்தது.  எப்படி அடா இக்குழந்தையை வளர்க்கப் போகிறோம் என்ற சிந்தனையுடன் பால் கொடுத்தேன்.  பின் அவனை அங்கேயே ஒப்படைத்துவிட்டு நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு திரும்பிச்சென்றேன்.  உடல் தான் திரும்பியது.  மனம் அங்கேயே சுற்றியது.  தனிமையில் அழுதேன்.


 ஏழாவது நாள் காலை என் தந்தை வந்து ,”இன்று மதியம் குழந்தையை வீட்டிற்கு தூக்கிச் செல்லலாம் “ என்ற நல்ல செய்தியை கூறினார்கள்.  அப்பாடா என்று இருந்தது.  நம் வீட்டிற்கு போய்விட்டால் எப்படியாவது குழந்தையை தேற்றிவிடலாம் என்ற நிணைப்பு.  தயாராக காத்திருந்தேன் அந்த நொடி பொழுதிற்காக.    மணி பதினொன்றரை இருக்கும்.  என் கைதொலைபேசி ஒலித்தது.  என் தந்தை அழைத்திருந்தார்.  குழந்தை இருந்த மருத்துவமணையில் இருந்து அழைப்பு வந்ததாகவும் உடனே குழந்தையை வேலூருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று கூறினார்.  என் செவிகளில் விழுந்த வார்த்தைகள் மூளையை அடையும் முன் மயங்கி விழுந்தேன்.  மயக்கப் தெளிந்து எழுந்த பின்   என் தாய் நடந்தவற்றை கூறினார்கள். குழந்தைக்கு சிறுநீரில் இரத்தம் வருவதாகவும் உடனடியாக வேலூர் சி.யெம்.சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.  கடவுள் என்னை ஏன் இப்படி சோதிக்கிறார் என்று அழுது புலம்பினேன்.  போட்டு இருந்த உடையுடன் உடனே கிளம்பி குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வாங்கிக் கொண்டு வேலுருக்கு காரில் கிளம்பினோம்.


  தஞ்சையில் இருந்து வேலூருக்கு செல்ல எட்டு மணி நேரம் ஆகும்.  எப்படி இந்த பச்சிளம் சிசுவை கையில் ஏந்திக் கொண்டு செல்லப்போகிறோம் என்ற பதைபதைப்பு.  மடியில் ஓர் தலையணையை வைத்து அதன் மேல் துண்டு விரித்து குழந்தையை அதில் கிடத்தி அணைத்தவாறு உட்கார்ந்து கொண்டேன்.  என் தாய்,தந்தை, என் கணவர் எல்லோருமாக புறப்பட்டோம்.  வழி எங்கும் இங்க் பில்லரில் பாலை புகட்டினோம்.  கார் கரடு முரடான சாலையில் செல்லும் போதெல்லாம் என் வயிற்றில் போடப்பட்ட தையலின் வலியை கூட உணராமல் என் செல்வத்தை பத்திரமாக அணைத்தபடி கண் இமைக்காமல் அமர்ந்திருந்தேன்.  காரில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் எந்த உரையாடலும் இன்றி பயணித்தோம்.  எல்லோருக்கும் மனம் முழுதும் வலி.  வாயை திறந்தால் கதறி விடுவோம் என்ற பயத்தில் மெளன விருதம் போல் வாய் மூடிச் சென்றோம்.


 வேலூர் ஆஸ்பத்திரியை நாங்கள் அடைந்த பொழுது மாலை மணி 6.45.  அவசரப்பிரிவில் சென்று எங்கள் நிலையை விளக்கினோம்.  ஆயினும் பயனில்லை.  இரவு பணி பார்க்கும் மருத்துவர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அந்த வெராண்டாவில் அமர்ந்திருந்தோம்.  அங்கிருந்த பலதரப்பட்ட நோயாளிகளை பார்த்த பொழுது என்னையும் அறியாமல் ஒரு பயம் கவ்விக்கொண்டது.  என் மகன் குணமடைவானா என்ற கேள்விக் குறி.  அறை ஏதும் காலியாக இல்லாததால் எங்களை இரவு ஒரு மணி வரை காக்க வைத்தார்கள்.  பின் அறை ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டோம்.  டியூட்டி மருத்துவர் வந்து பார்த்துவிட்டு காலை குழந்தை நல மருத்துவர் வந்து பார்ப்பார், இப்பொழுது கூறுவதற்கு ஒன்றும் இல்லை  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.   பயணக்களைப்பை விட  மனவேதனை மிகுதியாக இருந்ததால் எங்களால் இரவு முழுதும் கண் மூட  முடியவில்லை. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என் மகனை இரவு முழுதும் கைகளில் ஏந்திய படி   விடிவதற்காக காத்திருந்தோம்.....

மீண்டும் நாளை தொடரும் என் ஒலி..........

Friday, August 20, 2010

வாங்கி வந்த வரம்--ஒரு தாயின் ஒலி

     குழந்தை வரம் வேண்டி ஏறாத கோவில் இல்லை வணங்காத தெய்வம் இல்லை.  கிடைத்தது வரம் ஒன்பது வருடங்கள் கழித்து.  பத்து மாதங்கள் நீண்ட பயணம் என்று நினைத்தோ என்னவோ எட்டு மாதங்களிலேயே இவ்வுலகை காண பிறந்துவிட்டான் என் மகன்.  குழந்தை பிறக்கப்போகிறது என்று அறிந்த நான் என் மகனின் முகத்தை பார்க்கவில்லை.  அறுவை சிகிச்சைக்கு பின் மயக்க ஊசி போட்டு மயக்கமடைய செய்து விட்டார்கள் என்னை.  விழிக்காத கண்களை விரித்து மறுநாள் தேடினேன் என் மகனை.  காணவில்லை என்னருகில் அவனை.  குழந்தை எங்கே என்று கேட்கக்கூடத் திரணியில்லை என்னிடம்.  “எங்கு குழந்தை , என்ன குழந்தை?” என்று திக்கித்திக்கி கேட்டேன்.  வரண்ட நாக்கும் உலர்ந்த உதடுகளும் வார்த்தைகளை வெளியில் விட மறுத்தன.  அருகில் இருந்த என் தாய் “ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது” என்று கண்ணீர் மல்க கூறினாள்.  அது ஆனந்தக் கண்ணீர் என்று தான் நான் உடன் நினைத்தேன்.


    என் கதகதப்பு போதவில்லை என்று மின்சார வெளிச்ச கதகதப்பில்(இன்குபேட்டரில்) வைத்திருக்கிறார்களாம்.  மன பாரம் , பால் பாரம் தாங்காமல் தனி அறையில் நான் உறங்க, அங்கே இங்க் பில்லரில் பால் அருந்தி , ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் தனியாக உறங்குகிறான் என் மகன்.  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல் ஒன்பது வருடங்கள் கழித்து எனக்கு கிடைத்த வரம் இன்னும் வந்து சேரவில்லை என் கைகளுக்கு.  பார்க்க வந்தோர் யாவரும் குழந்தை எங்கே என்று கேட்டனர்.  பெற்ற நானே என் குழந்தையை பார்க்க இயலாத அவலத்தை யாரிடம் கூறுவது என்று  கண்களை மூடிக்கொண்டு உறங்குவதாக நடித்தேன்.


    உள்ளுக்குள் குமுறினேன்.  என்ன பாவம் செய்தேனோ நான் அறியவில்லை.  நான்கு நாட்கள் ஆகியும் நான் என் குழந்தையை பார்க்கவில்லை.  என்னை பார்க்க வந்தோர் மீது வந்தது எனக்கு கோபம்.  வந்தோம், பார்த்தோம் என்றில்லாமல் என் அறையில் உட்கார்ந்து கொண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருந்தனர்---குழந்தையை பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர்.  “யாரும் என் அறையில் இருக்க வேண்டாம்” என்று அறுவை சிகிச்சை வலியையும் தாங்கிக்கொண்டு அடி வயிற்றில் இருந்து கத்தினேன். 

       வந்தவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று என்னை என் தாய் அடக்கினார்.  என் தவிப்பும் வேதனையும் யாருக்கும் புரியவில்லை.  தனிமையை நான் விரும்பினேன்.  காலை,மதியம், மாலை இரவு என்று என் கணவரும் என் தந்தையும் போய் என் மகன் இருந்த மருத்துவமனையில் அவனை கண்ணாடி தடுப்புக்கு வெளியில் இருந்து பார்த்து விட்டு வந்தார்கள்.  குழந்தை எப்படி இருக்கிறான் என்று கேட்கக்கூட எனக்கு பயம்.  நான் சென்று பார்க்கும் நாளுக்காக காத்திருந்தேன்.  இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது.  

 நாளை தொடரும் என் ஒலி..............

Thursday, August 19, 2010

எதிர்காலம்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா--அன்று
தலை குணிந்து நில்லடா--இன்று
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழிப்போம் அன்று
எம் குலமே பசிப்பட்டினியில் அழிந்தாலும்
எங்களுக்கு வார இறுதியில்
‘யார் வீட்ல பார்ட்டி அட
நம்ம வீட்ல பார்ட்டி”


எம் நாட்டில் கோடையின்
தாக்கம் தாங்கவில்லை
எனவே நாங்கள் போகிறோம்
குடும்பத்துடன் கடற்கரைக்கு
மணல் வீடு கட்டி மகிழ
ஆனால் நீங்களோ குண்டடி காயத்திற்கு
மருந்தின்றி மணலை வைத்து
பூசிக்கொள்கிறீர்கள்.


தாயின் தாலாட்டில் துயில வேண்டிய
பச்சிளங் குழந்தைகள்
பீரங்கியின் ஓசையிடையே
திறந்த விழிகளுடன்.
ஆசிரியரின் போதனையை கேட்க வேண்டிய
மாணவ சிறார்கள் செவியில்
விழுவதெல்லாம்
ராணுவ அரக்கர்களின்
கட்டளைகள்,வெடிச்சத்தங்கள்.
பள்ளியின் மணி ஓசை வீட்டிற்குச் செல்ல
வெடியின் ஓசை பதுங்கு குழிக்குள் செல்ல.


யாவரும் ஒரு நாள் பூமிக்குள் போவோம் உறுதியாக
இதற்கு ஏன் இத்தனை முறை
செய்கிறீர்கள் ஒத்திகை?
நிலத்தின் மேல் வீடு கட்ட இடமில்லையோ
உங்களுக்கு?
அதனால் தான்
நிலத்தின் கீழ் நீங்கள்
வீடு கட்டுகிறீர்களா?

ஆடை விளம்பரத்திற்கு
பூனை நடை இங்கே.
மானத்தை காக்க
உடை தேடுகிறீர்கள் அங்கே.
நாங்கள் கண்டு மகிழ்கிறோம்
ஐபிஎல் போட்டியை.
அங்கு ராணுவத்திற்கும்
புலிகளுக்கும் நடக்கும் போட்டியில்
பந்தாடுகிறார்கள்
உங்கள் உயிர்களை.
அதை பார்த்து மகிழ்கிறார்கள்
உலக தலைவர்கள் யாவரும்.

பணத்தின் மேல் புரள்கிறார்கள் பலர் இங்கே
நீங்கள் பிணத்தின் ஊடே
புதைகிறீர்கள் உங்கள் உயிர்காத்திட.
உங்களை காக்க எங்களுக்கு
தெரிந்ததெல்லாம்
கடை அடைப்பு, பஸ் எரிப்பு,தீக்குளிப்பு
இதனால் என்ன பயன் உங்களுக்கு?

இத்தனை பேருக்குமா எழுதினான்
இறைவன் ஒரே விதியை?
என்னால் நம்ப முடியவில்லை
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதி எழுத அவனுக்கு சோம்பல் போலும்
அவனும் எடுத்தானோ ஒரே
விதியின் நகலை பலருக்கு?
எப்படி கிடைத்தது எமனுக்கு
அத்துனை பாசக்கயிறு ஒரே சமயத்தில்?

எது கிழக்கு என்று தெரியாமலேயே
விடியலை தேடுகிறீர்கள்.
எட்டு திக்கும் பரவியும்
உங்கள் மரண ஓலங்கள்
யார் செவியிலும் விழாதது ஏன்?
சத்தமிலா ஓசையையா எழுப்புகிறீர்கள்?
அல்லது யாவரும் செவிடாகிப் போனோமா அறியேன்.
பலர் உங்கள் ஓலங்கள்
உங்கள் தேசிய கீதமென நினைத்து
எழுந்து நின்று மரியாதை மட்டுமே
செய்கிறார்கள்.
அவர்களுக்கு கூறுங்கள்
தேசமே இல்லாத உங்களுக்கு
ஏது தேசிய கீதம் என்ற ஒன்று??

உயிரற்ற சடலங்கள் மீதுதான்
ஈக்கள் மொய்க்குமென்று
யார் சொன்னது?
உங்கள் மீது அடிக்கும்
ரத்த வாடைக்கும்
உயிர் மட்டுமே ஊசலாடும்
உங்கள் உடலிலும் அவை
நடைபயிலும்.

தாயற்று, தந்தையற்று,
சேயற்று, அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை என்று
எல்லா உறவுகளையும் இழந்து
தனிக்தனி தீவுகளாக
ஒரு தீவுக்குள்ளேயே வாழும்
நீங்கள்
சேரப்போவது யாருடனோ?

தாய் காக்கவில்லை என்றால்
தாய் நாடு காக்கும் என்பர்
இரண்டும் இல்லா உங்களுக்கு
செவிலித்தாயாகப் போவது யாரோ?
வாரி அணைத்து,
ஆறுதல் கூறி
உறவொன்று அளித்து
உங்களை தழுவப்போகும்
கரங்கள் யாருடையதோ?
 கிடைக்குமா உங்களுக்கு
ஓர் தாயின் மடி?


இழக்கப்பட்ட இழப்புக்கள்
இழக்கப்பட்டவையே!
மன்னிக்க இயலுமே தவிர
மறக்க முடியாது.
எந்த மனித உரிமைப் மீறல் சட்டம்
ஈடு செய்யும் இதனை?
எதிர்காலத்திலாவது
முட்கள் இல்லா பூக்கள்
மலரட்டும் உங்கள் வாழ்வில்
என கடவுளை வேண்டுகிறேன்.
வேண்டுவதை தவிர
வேறேதும் தெரியவில்லை
இந்த பேதைக்கு.
மன்னிக்கவும் வழக்கம் போல்
என் இயலாமையை.

Thursday, August 12, 2010

அனுபவம் புதுமை

     அனுபவம் என்பது நாம் ஒவ்வொருவரும் சுயமாக அனுபவிக்க வேண்டியது. சிறு வயது முதல் நாம் அனுபவத்தின் மூலம் கற்கும் பாடமே வாழ்க்கை முழுதும் கை கொடுக்கும். நம்முடைய பெற்றோர் நமக்கு செய்த அதே தவறுகளை இன்று நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம். “உனக்கு அனுபவம் பத்தாது நான் சொல்வதை கேள்” என்கிறோம். அடுத்தவர் அனுபவங்களைக் கொண்டு கற்கும் பாடங்கள் மனதில் காலந்தோறும் நிற்பதில்லை. “பட்டால் தான் புத்தி வரும்” என்பது தான் பல நேரங்களில் உண்மையாகிறது. பிறரின் அனுபவங்கள் நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாமே ஒழிய அதுவே நாம் பின்பற்றக்கூடிய வழியாக இருக்க முடியாது.

     நான் என் மகனின் பின்னால் இருந்துகொண்டு “படி படி” என்று கூவியபடி இருப்பேன். என் சத்தத்திற்கு பயந்து அவனும் ஓர் அளவிற்கு படித்தான். ஓர் நாள் நான் யோசித்துப்பார்த்தேன். எதற்காக நான் என் தொண்டை தண்ணீர் வற்றும் அளவிற்கு கத்த வேண்டும்? ஓரு முறை விட்டுப் பார்ப்போம், என்று நினைத்து   தலை தூக்கிய கடமை உணர்வை ஒரு தட்டு தட்டி பல்லை கடித்துக்கொண்டு இருந்து விட்டேன். ஒன்று மட்டும் கூறினேன். “இம்முறை நான் ஏதும் கூறப்போவது இல்லை. படித்தால் படி இல்லையென்றால் “மெக்டோனாடில்” வேலைக்கு சேர்ந்து விடலாம் கூடிய விரைவில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன மதிப்பென் வாங்குவாய் என்று.” (நான் சிறுமியாக இருந்த பொழுது என் தந்தை படிக்கலைனா மாடு மேய்க்கலாம்” என்பார்.) Now we have a kind of sophisticated approach even in assigning a job for them!! அவனும் “விடுதலை,விடுதலை” என்று கத்தியவாறு சந்தோஷமாக விளையாடி திரிந்தான். பரீட்ச்சைக்குப் பின் மதிப்பென்னும் வந்தது. நான் கூறியது போல மிக குறைவான மதிப்பென்கள் எடுத்திருந்தான். கூனி குறுகிப் போனான். நான் எதுவும் கூறாமல் “அப்படியா சரி” என்றதோடு விட்டு விட்டேன். “அம்மா சாரி அம்மா. ப்ளீஸ் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கேட்கிறேன்,” என்று என் வழிக்கு வந்தான்.   நான் கிணற்றுத் தவளையாய் கத்திய பொழுது உணராதவன் தானாக உணர்ந்தான்.


எல்லாவற்றையும் இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று இருந்து விட முடியாது. அது நமக்கே விணையாக முடிந்துவிடும்.  என் நண்பரின் மகளுக்கு 15 வயது.  பெற்றோர் எதிரியாக கண்களுக்கு தெரியும் பருவம். “அடங்கு” என்பதற்கு எதிர்மறையாகவே எல்லாவற்றையும் மனது செய்யத்தூண்டும் வயது.  தகாத நண்பர்கள், செயல்கள். சொல்லி சொல்லி பார்த்துவிட்டு “எக்கேடாவது கெட்டுப்போ” என்று விட்டு விட்டார். ஆனால் அவர் மனைவி அப்படி விட்டுவிட்டால் பின்னாளில் துன்பப்படப்போவது அவள் மட்டும் அல்ல நாமும் தான் என்று கூறி கண்டிப்பாக இருந்து மகளை நல்வழிப்படுத்தினார். அடிபட்டுத் திருந்துவாள் என்று அவர்கள் விட்டு இருந்தால்  பிற்காலத்தில் எல்லாமே  கண்கெட்டப்பின் செய்யும் சூரிய நமஸ்காரமாக இருந்து இருக்கும்.


     நம் அனுபவங்களை கொண்டு எங்கு கற்க வேண்டும், பிறரது அனுபவங்களை கொண்டு எங்கெல்லாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒரு தனி கலை. ஆயிரம் சமையல் நிகழ்ச்சிகள் பார்த்தாலும் நாமாக சமைக்கும் பொழுதுதான் நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். விளையாட்டு, சினிமா என்று எதுவானாலும் ஆயிரம் விமர்சனம் செய்யும் (அதிலும் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று குற்றம் மட்டுமே கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்) நாம் களத்தில் இறங்கி கோதாவில் பங்கெடுத்தால் தான் தெரியும் நாம் வீட்டிலே புலி வெளியிலே எலியா என்று. அடுத்தவர் பிரச்சினைக்கு வெளியில் இருந்து நாம் பல பல அறிவுரைகளை அள்ளி வீசலாம். But we cannot step into other's shoes. அவர்கள் நிலைமையில் இருப்பதாக கற்பனை மட்டுமே செய்ய இயலும். நாவ் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழ்நிலையில் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளே ஓர் அனுபவம் தான். சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதை முடிவு செய்யும்.


     அனுபவங்களை பெறுவதே ஓர் அனுபவம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள் எப்பொழுதும் ஓர் வட்டத்துக்குள் வாழ கற்றுக்கொள்கிறார்கள். என் தந்தை எப்பொழுதும் கூறுவார்,” சைக்கிள்ள போக தெரியனும், பஸ்ல போக தெரியனும், கார்ல போக தெரியனும் எதுவுமே இல்லையென்றால் நடந்தும் போக கற்றுக்கொள்ள வேண்டும் “ என்று. இவை எல்லாமே அனுபவங்களே. சிலருக்கு சில விஷயங்களை அனுபவித்து பார்க்க ஆசை இருந்தாலும் பயம் மேலோங்கும். பாத் டப்பில் குளிக்கும் குழந்தைக்கு ஆற்றில் குளிக்க ஆசை. ஆற்றில்  குளிக்கும் குழந்தைக்கு பாத் டப்பில் குளிக்க ஆசை. முதலானவருக்கு வாய்ப்பு கிட்டினாலும் பயம். இரண்டாமவருக்கு வாய்ப்பு கிட்டுமா என்ற ஏக்கம்.


    நல்லதோ கெட்டதோ ஒன்றை அனுபவித்து பார்க்க துணிச்சல் தேவை. இந்த துணிச்சல் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். Experience is what is left when you don't achieve what you tried to achieve என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எத்துனை பயணக்கட்டுரைகள் படித்து மகிழ்ந்தாலும் நாமே அந்த இடங்களுக்குச் சென்று மகிழ்வதைப் போல் வராது. குற்றாலத்தில் குளித்தவர்களின் அனுபவத்தை கேட்டு அறிவதைவிட சில்லென்ற அந்த கொட்டும் அருவியில் கண் மூடி கண்ணங்களை கை வைத்து பொத்தி நாமே நணைவதே அலாதி இன்பம். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் அனுபவமாக எடுத்து ரசிக்க வேண்டும். ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை மட்டுமே படித்து அறிந்து கொள்வதைவிட நாமே அப்புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். சில விஷயங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை கொடுக்கும். புதுபுது அர்த்தங்கள் தோன்றும். ஒரே விஷயத்தை பல கோணல்களில் பார்க்கத்துண்டும். நான் முதன் முதலில் “விருமாண்டி” படம் பார்த்த பொழுது எனக்கு பிடிக்கவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் புரியவேயில்லை. அப்பொழுது என் அறிவு வளர்ச்சி அவ்வளவுதான். அதே படத்தை ஆறு ஏழு வருடங்கள் கழித்து பார்த்தபொழுது மிகவும் பிடித்திருந்தது. பார்வை வேறுபட்டது. அதற்காக அறிவு வெகுவாக நிரம்பி வழிந்துவிட்டது என்று கூறவில்லை. ஓரளவிற்கு வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியடைந்திருந்தது. வயது ஆக ஆக (ரொம்ப வயதானவளாக கற்பனை செய்யாதீர்கள்) சூழ்நிலைக்கேற்ப சரி தவறாகும், சில சமயங்களில் தவறுகூட சரியாகும். அனுபவங்கள் நம்மை பக்குவப்பட வைக்கின்றன.


     திருமணம் என்பது எப்படிபட்ட இடியாப்பச் சிக்கல் என்பதை நாம் அனைவரும் உணர்வோம். ஒவ்வொரு திருமணமானவரும் கூறுவது, “என் திருமண நாள் தான் என் சுதந்திரம் பறிபோன நாள் “ என்று-என் கணவரையும் சேர்த்துக்தான். எத்துனை பேர் இந்த உண்மையை கூறினாலும் நாம் ஒவ்வொருவரும் அதை அனுபவித்து பார்ப்போமே என்று துணிச்சலாக அந்த ஆழ்கடலில் குதிக்க துணிகிறோம். நாம் பெற்ற இன்பத்தை (துன்பத்தை) நம் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் , அனுபவிக்க ஆசை படுகிறோம். அப்படி துணிந்து குதிப்பதால் தான் குடும்பம், குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள், எள்ளுப்பேரப்பிள்ளைகள், கொளுந்தன், அண்ணி, மச்சினி  என்ற அழகான பிணைப்புகள் உருவாகிறது.  இந்த நேரத்தில் என் தோழி கூறுயது என் நினைவிற்கு வருகிறது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவள் ,”முதல் குழந்தை பிறந்து அதை வளர்க்க பாடுபட்ட போதே பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கடினமானது என்று தெரிந்தது. ஆனாலும் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொள்வதைப்போல் இரண்டாவதையும் பெற்றுக்கொண்டு இப்பொழுது குத்துது, குடையுது என்றால் அது என் தப்புத்தானே” என்று விளையாட்டாக கூறுவாள். அவள் குழந்தைகள் அவளிடம் காட்டும் அன்பை நினைத்து இப்பொழுது ஆனந்தமாக இருக்கிறாள். இதுவும் ஒரு அனுபவமே.


     சில விஷயங்களில் நான் அனுபவப்பட்டுத்தான் திருந்துவேன் என்று பிடிவாதம் கூடாது. தண்ணி அடிப்பது (தெரு முணை அடி பம்ப் அல்ல) ,புகை பிடிப்பது உடலுக்கு கேடு என தெரிந்தும் அனுபவப்பட்டு தெரிந்து கொள்வது என்பது சுயமாக சூடு வைத்துக்கொள்வதைப் போன்ற முட்டாள்தனம். இவ்வுலகில் மரணம் ஒன்றைப் பற்றித் தான் யாரும் அனுபவித்து பிறருக்கு தன் அனுபவங்களை கூறியது கிடையாது, கூறவும் முடியாது. அதில் கூட “மனதளவில் செத்துவிட்டேன்” என்று மனதால் நொந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மரண வாயிலை எட்டிப்பார்த்தவர்கள் “மரண வேதனையை “ விவரிக்க கேட்டு இருக்கிறோம். மரணத்துக்குப் பின் யாரேனும் அப்படி கூற நேர்ந்தால் அது பேய் பிசாசுகளின் கூற்றாகிவிடும். எப்பேர்பட்ட மகானுக்கும் அந்த சக்தி இல்லை.


     நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன், ரசித்து, அனுபவித்து செய்ய வேண்டும். என் தாய் ,”உணவை ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிடு. நாளைக்கு இன்று போல் உணவின் சுவை இருக்குமா அல்லது அதை உட்கார்ந்து உண்ண உனக்கு நேரம் கிடைக்குமா என்று தெரியாது” என்று கூறுவார்கள். இதில் உள்ள உண்மை அறிந்திருந்தும் நான் என் தந்தையின் ”வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக்கூடாது” கோட்பாட்டை பின்பற்றுபவள். என்ன செய்வது ஊருக்குதான் உபதேசம். எந்த ஒரு படைப்பாளியின் படைப்பாக இருந்தாலும் அது புத்தகமாயிருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், சிற்பமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், நகைசுவையாக இருக்கட்டும், சமையலாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் நம் மனதை தொடுமானால் நாம் முதலில் கூறுவது,”அனுபவித்து படைத்து இருக்கிறார்” என்று தான். அனுபவத்திற்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது.


     எத்தகைய அனுபவமாயினும் அதில் இருக்கும் அழகையும், ஆழத்தையும், சுவையையும்,சுகத்தையும், எடுத்துக்கொண்டு அதில் உள்ள சோகத்தையும், வலியையும், வேதனையையும், சோர்வையும், தூர வீசி விட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் வலியும், வேதனையும் கூட சுகமே!! அனுபவம் என்பது பாடம் புகட்ட மட்டுமெ அல்ல. It can just be a plain nice experience. அது நம் மனதுக்கு பிடித்தமானதாக, இதமளிப்பதாக, இனிமையானதாக, வானவில்லைப் போன்றதாக கூட இருக்கலாம். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. எனவே அனுபவங்களை அனுபவித்துப் பாருங்கள் உங்கள் வானம் விரிவடையும்.

Tuesday, August 10, 2010

உரிமை

உன்னை காதலிக்க
எனக்கு உரிமை இருப்பதைப்போல்
என் காதலை மறுக்க
உனக்கு உரிமை உண்டு
என்னை காதலிக்க
வேண்டும் என்று சொல்ல
எனக்கு உரிமை இல்லை
என்னை காதலிக்காதே
என்று சொல்ல உனக்கும்
உரிமை இல்லை.
இந்த சுதந்திரம் போதுமடி
உன் நிணைவை சாகும் வரை
என் மனதில் சுமக்க.
என் நிழலில் நீ இல்லை
உன் நினைவில் நான் இல்லை
உனக்கென்று ஓர் வாழ்க்கை
எனக்கென்று ஓர் வாழ்க்கை
நிஜவுலகில்.
நமக்கென்று ஓர் வாழ்க்கை
என் கனவுலகில்.
எத்துனை முறை கண்டாலும்
பலிக்க போவதில்லை இக்கனவு
அறிந்திருந்தும் காண்கின்றேன்
தினந்தோறும் பகல்கனவு.

Friday, July 30, 2010

அழகு

சிறியது என்றும் அழகே!
சிறு சிறு தூரல்கள்,
பாதி இதழ் விரித்த சிறு சிறு மொட்டுக்கள்,
தாயின் பாதுகாப்பில் உணவு தேடும்
பஞ்சு பந்து போன்ற  சிறு கோழிக் குஞ்சுகள்,
பால் அருந்தி களைப்பில் உறங்கும்
சின்னஞ் சிறு குழந்தை,
பார்த்தும் பார்க்காதது போல் கடந்துபோகும்
காதலியின் உதட்டோர சிறு புன்னகை,
வாணில் கண் சிமிட்டும் சின்னச் சின்ன நட்சத்திரங்கள்,
அடர்ந்த காட்டுக்குள் நடக்கையில்
நம் கால் நணைக்கும் சிறு ஓடை,
பச்சை விரிப்பு விரித்தது போல்
சிறிதாக வளர்ந்திருக்கும் சிறு நெற்கதிர்கள்,
ரோட்டோரத்தில் சுதந்திரமாய் விளையாடும்
சிறிய காவி நிற நாய்க்குட்டி,
ஆழ்கடலில் பதுங்கியிருக்கும்
சின்ன சின்ன முத்துக்கள்,
அலையேறி கடற்கரையை
வந்தடையும் சிறு சிறு சிப்பிக்கள்,
இரண்டு வரியானாலும்
கோடி தத்துவம் கூறும்  திருக்குறள்,
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரியது போல்
அழகாய் சிறு தொட்டியில் வீற்றிருக்கும்
“போன்சாய்” ஆலமரம்,
சிறு பிள்ளை ஆனந்தமாய்
சமைத்து பழகும் சின்னச் சின்ன சொப்புச் சாமாண்கள்,
புத்தக சுமையின்றி ஒரே சீறுடையில்
பள்ளி செல்லும் பாலர் பள்ளிச் சிறார்கள்,
பேசப்பழகும் முன் குழந்தை
சொல்லும் “ங்கா” என்ற சிறு வார்த்தை,
”நீயே என் உலகமென” கண்சிமிட்டி
மனைவிடம் கணவன் சொல்லும் சிறு பொய் ,
இவையெல்லாம் கொள்ளை அழகு தான்.
ஆனால் ஒன்றுமட்டும் அழகாயிராது
சிறிதாக இருந்துவிட்டால்.
இதயம் கைப்பிடி அளவென்றாலும்
உள்ளிருக்கும் மனம்
கடலினும் பெரிதாய்
வானைவிட அகன்றதாய்,
காற்றைவிட பரந்ததாய்,
இவ்வுலகை விட விசாலமாய்
நம் யாவர்க்கும் இருக்குமானால்
வாழ்வாங்கு வாழும் நம் குலம்.

Tuesday, July 27, 2010

என் மனம் களவாண்ட “களவாணி”


வழக்கம் போல் வெள்ளி இரவு என்ன படம் பார்ப்பது என்று எங்கள் வீட்டில் வாக்குவாதம் எழுந்தது. மகளுக்கு ஹிந்தி, மகனுக்கு ஆங்கிலம், தந்தைக்கு தமிழ், இதில் எதுவாக இருந்தாலும் சரி என்று நான்...ஏனென்றால் எப்படமாயினும் பாதிப்படம் பார்ப்பது தான் என் நியதி—காரணம் பதினோறு மணிக்கு மேல் என்னால் விழித்து இருந்து படம் பார்க்க இயலாது. ஒரு வழியாக ஒரு முடிவிற்கு வருவதற்குள் மணி பத்தடித்தது. “களவாணி” என்ற படம் பார்க்கலாம் என்று வீட்டு மன்றத்தில் முடிவானது. கிடைத்த ஓட்டுக்கள் மூன்று.


அரைமனதாக என் மகள் ஒத்துக்கொண்டாள். அவளுக்கு பரீச்சயமில்லா நடிகர்,நடிகையர். கிராமத்து கதை வேறு. இதை பார்க்கவில்லை என்றால் எப்படியும் தூங்க சொல்லிவிடுவார்கள். அதற்கு ஏதோ ஒன்றைப் பார்ப்பது நல்லது என்று நினைத்தாள் போல்..ஒன்றும் இல்லாததற்கு ஒரு ஆண் பிள்ளை என்பதைப் போல். என் மகனுக்கு தமிழ் படங்கள் மீது பெரிய ஈடுபாடு இல்லை. எனவே அவன் தன் அறையில் விளையாட சென்று விட்டான். வழக்கம் போல் ஏ.சியை போட்டுக்கொண்டு ஆளுக்கொரு போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சோபாவில் அமர்ந்த படி படம் பார்க்க ஆரம்பித்தோம்.

முதல் மூன்று நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. அதைக் கேட்ட என் மகளை என் கணவர், “பேசாமல் உட்கார்ந்து பார் புரியும்”, என்று வாயடைத்துவிட்டார். அவர் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் மூழ்கிவிடுவார். சரி சிறிது நேரம் பார்ப்போம், பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு நானும் பேசாமல் இருந்துவிட்டேன். பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குப்பின் படம் மிக விருவிருப்பாக நகர்ந்தது. அங்கங்கே கிராமத்து சம்பாஷணைகள் புரியவில்லை என்றாலும் கூட என் மகள் படத்தை ரசித்து பார்த்தாள். இரண்டரை மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஏன் தான் படம் முடிவுற்றதோ என்ற ஒரு தவிப்பு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் முழுதாக ஒரே நாளில் பார்த்த படம். கதையை நான் இங்கு அலசப்போவது இல்லை. ஏனென்றால் படம் பார்க்காதவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. நான் ரசித்த விஷயங்களையெ பகிர்ந்துள்ளேன். படம் எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் பரீட்சயமான இடங்கள் என்பதால் படம் பார்த்த பொழுது செலவு ஏதுமின்றி ஊருக்கே சென்று வந்ததைப் போல் இருந்தது. ஓலை சீவுவது, குயில் பிடிப்பது, கிண்டல் அடித்து பேசுவது போன்ற காட்சிகள் சிறு வயதில் கிராமத்திற்கு செல்லும் போது பார்த்த காட்சிகளை மீண்டும் பார்த்ததை போன்ற உணர்வு. என் மகளிடம்,”இவையெல்லாம் நாங்கள் சிறு வயதில் அனுபவித்துள்ளோம். உங்களுக்கு கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் தவிர என்ன தெரியும்?” இயற்கையை ரசிக்க உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியுள்ளது. மனிதர்களுடன் பழகவைக்க பாடுபட வேண்டியுள்ளது.” என்று கூறினேன். அதற்கு அவள் ,”உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.இவர்கள் எல்லாம் வளர்ந்தப் பின் நினைத்துப்பார்க்க எந்த இயற்கை வளம் இருக்கும் என்பது கேள்விக்குறியே? அப்படியே இருந்தாலும் அதை ரசிக்க இவர்களுக்கு நேரம் தான் இருக்குமோ நான் அறியேன் பராபரமே!!

நடித்தவர்கள் யாருடைய நடிப்பிலும் செயற்கைத்தனம் துளி கூட இல்லை. எதார்த்தமான வசனங்கள்,அழகானபடப்பிடிப்பு,மனதைகொள்ளை கொண்டன.  இரட்டை அர்த்தம் இல்லாத மண்ணுக்கே உரிய வசனங்கள் கேட்க இனிமையாக இருந்தது. செயற்கையான, அனாவசிய சண்டை காட்சிகள் இல்லை.நாங்கள் வழக்கமாக படம் பார்க்கும் பொழுது பாட்டு, சண்டை காட்சிகள் யாவற்றையும் “ஓட்டி” விடுவோம். ஆனால் இப்படத்தை பொருத்தமட்டில் ஒரு காட்சியை கூட அப்படி “ஓட்ட” வேண்டும் என்று தோன்றவில்லை. விறு விறு என்று கதை நகர்ந்தபடியால் “பாத்ரூம்” போனபோது கூட என் மகள் “அப்பா நிறுத்தி வையுங்கள்” என்று அன்பு கட்டளையிட்டாள்...ஒரு சில நிமிடங்கள் கூட கதையின் போக்கை தவற விட மனமில்லாமல்.

அன்றாடும் நம் கிராமங்களில் பார்க்கும் துடுக்கான, அழகான, தறுதலைத்தனமான, நாயகன். அயல் நாட்டில் தந்தை சம்பாதித்து அனுப்ப இங்கு ஒரு மைனரைப்போல், தான்தோன்றித்தனமாக குறிக்கோள் ஏதுமின்றி, ரவுடித்தனம் செய்து கொண்டு திரியும் மகனாக தன் பங்கை பாங்குடன் அளவாக செய்திருக்கிறார் நாயகன். அவருக்கு ஈடு கொடுப்பது போன்ற கள்ளம் கபடமில்லா நாயகி. நாயகனின் தாய், தந்தை, தங்கை, நாயகனின் அண்ணன் என்று எல்லா கதாபாத்திரங்களும் கணகச்சிதமாக தங்கள் பங்கை அழகாக நூல் பிடித்ததைப்போன்று செய்திருந்தனர். பெரியப்பா, சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர் ,என்று சிறு சிறு பாத்திரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.படம் முழுதும் கிண்டலும் கேலியும் என்று நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி பிண்ணப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் சிரிப்பொலி கேட்டு அவ்வப்பொழுது என் மகன் “என்ன என்ன?” என்று கேட்டுச் சென்றான். அவனின் பொறுமை அவ்வளவு தான். அவனின் ரசிகத்தன்மை வடிவேலு காமெடியை இன்னும் தாண்டவில்லை. அவன் வயது எட்டுதானே!

ஆழமான, துடுக்கான, இளமையான, எல்லா வயதினரும் ரசிக்கக்கூடிய காதல் காட்சிகள். ஆபாசம் என்பது காட்சிகளிளோ, வசனங்களிளோ சிறிதும் தலை காட்டவில்லை. தாய்--மகன் பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை சரண்யா-விமல் பாத்திரங்கள் ஆழமாக உணர்த்துகின்றன. சான்பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று அவன் மேல் அவள் பொழியும் பாசத்திற்கு அளவுகோல் இல்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அதிகம் செலவில்லாமல் ஓர் அழகான திரைஓவியத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் நல்ல ஓர் எடுத்துக்காட்டு. கௌரவக் கொலைகள் நடந்தேறும் சமூகத்தில் இறுதியில் பாசமும், காதலும் தான் வெல்கிறது. இது குடும்ப கௌரவம் என்ற குடிமியைப் பிடித்துக்கொண்டு கொலைகாரர்களாக திரிபவர்களுக்கு நல்ல பாடம். இனியாவது கௌரவம் கருதி மிருகங்களாவதை விடுவோம்.

படம் பார்த்து முடித்த பின்னரும் இரண்டு நாட்களுக்கு மண்வாசனை வீசிக்கொண்டே இருந்தது.. என்னதான் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் வசித்தாலும் நமக்கு பரீச்சயமான நம் வயல்களையும், மக்களையும், அவர்களின் பேச்சுவழக்கையும் கேட்கும் போது மனதில் சிலு சிலு சாரல் வீசத்தான் செய்கிறது. “We feel at home" என்பது இதுதானோ?? நம் மண்ணில் வாழும் நாள் என்று வருமோ என்ற தவிப்பும் தொற்றிக்கொண்டது. அன்று பார்த்த பசுமை இன்று இல்லை, மக்களும் மாறிவிட்டார்கள்,காலம் மாறிவிட்டது என்று ஆயிரம் சமாதானம் நமக்குள் கூறிக்கொண்டாலும், நம் ஊரை விட்டு வந்த நாமும் மாறிவிட்டோம் என்பது தான் “நிதர்சன உண்மை”.

சொந்த பந்தங்கள் சூழ வாழும் வாழ்வுக்கும், யாருமின்றி என் குடும்பம்,என் மனைவி,என் குழந்தை என்று வாழும் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்? குடும்ப சூழல் நிறைந்த இம்மாதிரியான திரைப்படங்கள் மனதில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரிமையுடன் உற்றார் உறவினர் அறிவுரை கூறும் காட்சிகளும், பிரச்சினை எனும் பொழுது ஊர் கூடி தோள் கொடுக்கும் காட்சிகளும் நெஞ்சை வருடுகின்றன. உடையிலும்,.நடையிலும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை நம் கிராமத்து வீடுகளுக்கே இட்டுச்செல்கின்றன. காதுக்கு இனிமையான ,மனதுக்கு மென்மையான, ரம்மியமான இசை படம் முழுதும். மொத்தத்தில் மீண்டும் பார்க்க வைத்துவிட்டது என் மனதை களவாண்ட “களவானி”. நிச்சயமாக உங்கள் மனதையும் களவாடிவிடும்.

பி.கு.: படத்தில் சரண்யா சொல்வதைப் போல் நானும்,”ஆடி போய் ஆவணி வந்தால் என் மகன் டாப்ல போய்ருவான். என்று சொல்ல அதற்கு என் மகள்” நினைப்பு பொலப்ப கெடுத்துச்சாம்” என்றாள். பெத்த மனம் பித்தல்லவோ????

Saturday, July 24, 2010

சிறப்பு குடியுரிமை

இங்கே, உண்ண உணவும் இல்லை
உடுத்த உடையும் இல்லை
படுத்துறங்க இடமும் இல்லை
தலை சாய்த்து அழ ஒரு தோளும் இல்லை
தனதென்று கூற தாய் நாடும் இல்லை
அகதிகளாய் திரிகின்றோம் தினந்தோறும்.
அங்கே, நல் ஆரூடம் சொன்ன
“பால் ஆக்டோபசுக்கோ“
சிறப்பு குடியுரிமை.

தொலைதூரம் இட்டுச் செல்லும் சிறு அடிகள்.....

நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்க முயன்றிருக்கிறேன். இது ஒரு கன்னி முயற்சி.... உங்கள் நல்லாதரவை நம்பி நான் களத்தில் குதித்துள்ளேன்.  

                தொலைதூரம் இட்டுச் செல்லும் சிறு அடிகள்.....


சிறு சிறு விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைப் பற்றிய பார்வையை எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். நாம் காலையில் படுக்கையை விட்டு எழும் நொடி முதல் இரவு படுக்கைக்கு செல்லும் நொடிவரை நம்மைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்முடைய ஒவ்வொருநாளும் ஒளி மயமானதாக மாறிவிடாதா ?

காலையில் மிகவும் ’பிசியாக’ இருக்கும் தாய் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு படுக்கை அறைக்கு சென்று பார்க்கும் பொழுது தன் கணவர் ஏற்கனவே படுக்கையை அழகாக தட்டிப்போட்டிருப்பதை பார்த்தால் எண்ணில் அடங்கா மகிழ்ச்சியல்லவா அடைவாள்!. வானத்தில் சிறகு விரித்து பறப்பதை போன்று உணர்ந்து தன்னுடைய காலை காப்பியை அமைதியாக உட்கார்ந்து ரசித்து ருசித்து பருகுவாள்.... பல வேலைகள் பட்டியல் போட்டு அவளுக்காக காத்திருந்தாலும். இந்த பேருதவிக்காக ( அவளைபொருத்தவரை ) மனதுக்குள் தன் கணவரை பாராட்டுகிறாள். அவனுக்கென்னவோ ஐந்து நிமிட வேலை தான். ஆனால் அவளுடைய இந்த உதவியின் பலன் நாள் முழுதும் அவளின் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கிறது. அவளுக்கு புத்துணர்ச்சியைஊட்டுகிறது. தன் வேலையை பங்கிட்டுச் செய்ய கணவன் தோள் கொடுக்க
இருக்கிறான் என்ற சந்தோஷம்.

"உன் குடும்பம் உனக்கு ஏன் மிக முக்கியமானது?” என்று என் மூன்றாம் வகுப்பு பயிலும் மகனின் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் எழுதியிருந்த பதில் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா? “எங்கள் குடும்பத்தில் நாங்கள் யாவரும் ஒன்றாக உணவு உண்போம், சேர்ந்தே வெளியில் செல்வோம். ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு செய்வோம். எங்களுக்குள் பாசம் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக வீட்டில் சினிமா பார்போம்,” என்றெல்லாம் எழுதி இருந்தான். நாம் எவ்வித முயற்சியும் இன்றி தினமும் செய்யும் அன்றாட செயல்கள் தான் இவை. ஆனால் அந்த சிறிய உள்ளத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் ஒருவரை ஒருவர் இணைக்கும்
இணைப்புச் சங்கிலி (bonding chains).  இவையே அவனுக்கு வாழ்கையில் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்துள்ளது.  நம்முடைய முழு ஈடுபாடு இல்லாத சில செயல்கள் சில சமயங்களில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிறு வயது முதலே என் மகளுக்கு அவள் தூங்கும் முன் நான் போர்த்திவிட்டு “குட் நைட்” சொல்ல வேண்டும்.  இப்பொழுது அவளுக்கு வயது பன்னிரெண்டு.இன்றும் தினமும், ”அம்மா போர்த்தி விட வாருங்கள்“என்பாள்.  அடுப்படி வேலையை எப்படா முடித்துவிட்டு நாமும் படுப்பது என்று இருக்கும் எனக்கு, சமயத்தில் அவளின் அழைப்பு எரிச்சலை ஏற்படுத்தும். “நீயே போர்த்திக்கொண்டு தூங்கு.  நான் வேலையாக இருக்கிறேன்....  இந்த வயசிலும்
உன்னால் தானாக போர்த்திக் கொள்ளமுடியாதா?” என்று கத்துவேன். அவளும்
முணுமுணுத்துக்கொண்டே தூங்கி விடுவாள்.  தூங்கும் அவள் முகத்தில் ஓர் அதிர்ப்தி நிழலாடும்.

நிதானமாக யோசித்தால் அவளை திருப்திப்படுத்த இரண்டேநிமிடங்கள்தான் ஆகும். என் வேலையை பாதியில் நிறுத்த மனமில்லாமல்தான் நான் அதை செய்ய மறுக்கிறேன்.நான் அலுப்பு பாராமல் செய்யும் நாட்களில் அவள், ” நான் தூங்கும்பொழுது கூட என் தாய் என்னை பார்த்துக்கொள்வாள்,” என்ற நம்பிக்கையுடன் ஆனந்தமாகவும், அமைதியாகவும் தூங்கச் செல்கிறாள். என்னைப் பொருத்தமட்டில் போர்வையை போர்த்துவது ஓர் செயல். ஆனால் அவளை பொருத்தமட்டில் ஒவ்வொரு இரவும் அம்மாவின் அன்பும்,பாசமும் தன்னை போர்த்துவதாக கருதுகிறாள்.

நான் என் நண்பர்களை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசமாட்டேன். ஆனால் அவர்கள் பிறந்த நாளன்று தவறாமல் அழைத்து வாழ்த்துவேன். இச்சிறிய செயல் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் என்பது என் நம்பிக்கை. மற்றவர்களை மகிழ்விக்க ஒரு சில நிமிடங்களே போதுமானது. நம் வாழ்க்கையின் ஓர் சிறு பகுதியை இதற்கு செலவிட்டால் தவறில்லை. ஆமாம் சிறு அடிகள் நம்மை எல்லையில்லா சந்தோஷப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

இன்றே எடுத்து வைப்போம் சிறு அடிகளை.....

Friday, July 23, 2010

இயல்பு

மூன்று வயதில்
பொம்மை பற்றி பேசினேன்
ஏழு வயதில்
தோழியைப் பற்றி பேசினேன்
பத்து வயதில்
சினிமா பற்றி பேசினேன்
பதிமூன்று வயதில்
காதலை பற்றி
பேச ஆரம்பித்தேன்
இருபது வயதில்
திருமணம் பற்றி பேசினேன்
இருபத்தைந்தில்
குழந்தை பற்றி பேசினேன்
முப்பதில்
அழகைப் பற்றிப் பேசினேன்
நாற்பதில்
கணவனைப் பற்றி பேசினேன்
ஐம்பதில்
மருமகளைப் பற்றி பேசினேன்
அறுபதில்
பேரக்குழந்தைகளைப் பற்றி பேசினேன்
எழுபதில்
சாவைப் பற்றி பேசினேன்
பெண்ணென்றால்
பேசவே பிறந்தது போல்..

Thursday, July 22, 2010

வேலி

தாலி வேலியாம்
பெண்களுக்கு
ஒரு வேளை
இரும்பில் போட்டிருந்தால்.

இன்று தங்க தாலிக்கே
தேவையாய் இருக்கிறது
“லாக்கர்” எனும் வேலி.

காதல்...

காதல்--- உணர்வு ஒன்றுதான்
அது வரும் காலத்துக்கேற்ப
பெயர் சூட்டு விழா.
பள்ளிப் பருவத்தில் வந்தால்
“பருவக் கோளாறு”
கல்லூரிப் போகும் போது வந்தால்
“காதல்”
திருமணத்திற்குப் பின்
வாழ்கை துணையின்பால் வந்தால்
“அன்பு”
பிறர் மீது வந்தால்
“காமம்”
நாற்பதில் வந்தால்
“நேசம்”
அறுபதில் வந்தால்
“பாசம்”.

குழந்தையின் சிரிப்பில்.....

குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
என்றவர்கள் ஏன்
கூறவில்லை
குழந்தையின் அழுகையில்
யாரைக் காண்பது
என்று???

தன்னிலை மறந்து......

தன்னிலை மறந்து.....

வாழவும் தெரியவில்லை
சாகவும் தெரியவில்லை
புறக்கண்ணும் திறக்கவில்லை
அகக்கண்ணும் திறக்கவில்லை
போதை அரக்கனின்
பிடியில்
மயங்கி கிடக்கின்றேன்
தன்னிலை மறந்து.

சிற்றன்னை

சிற்றன்னை




என்னை வளர்க்க
என் தாய் ஒருத்தி
போதவில்லையாம்,
சப்தகன்னிகளும் கிடைக்கவில்லையாம்
எனவே அழைத்து வந்தார்
என் தந்தை
சிற்றன்னை என்றொருத்தி
வந்தவள் நன்றாக பார்த்துக்கொண்டாள்
என் தந்தையை
விரட்டி அடித்தாள்
என்னையும் என் தாயையும்.

Thursday, July 15, 2010

பெருந்தன்மை

பக்கத்து வீட்டு
மர இலைகள்
என் வீட்டு காம்பவுண்டுக்குள்
விழுந்தால்
வாறிக்கொண்டு சண்டைக்குச் செல்வேன்.

மற்ற நாடுகளில் இருந்து
என் நாட்டுக்குள் கொட்டப்படும்
கழிவுகளை வரவேற்பேன்
காரணம்
“பாரின் திங்ஸ்”
* * *

Sunday, February 28, 2010

Test-1

Testing Thamizmanam.