Wednesday, November 10, 2010

இழப்பு

  அன்று சனிக்கிழமை இரவு மணி பத்து இருக்கும்.  எப்பொழுதும் போல் அடுத்த வாரத்திற்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டை அடைந்திருந்தோம்.  குழந்தைகளை உடைமாற்றி, பல்துலக்கி விட்டு படுக்க சொல்லிவிட்டு வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.  வெளியில் போய்வந்த களைப்பில் என் கணவர் வழக்கம்போல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் ஆனந்தமாக லயித்து இருந்தார்.  எங்கு வெளியில் போய்விட்டு வந்தாலும் நான் மட்டும் போவதற்குமுன்பும் சரி, வந்த பின்பும் சரி வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று மனதில் நொந்துக்கொண்டு என் வேலையை 
தொடர்ந்தேன்.  அப்பொழுது தொலைபேசி மணி ஒலித்தது.  இந்த இரவு நேரத்தில் யார் கூப்பிடுகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் என் கணவர் தொலைப்பேசியை கையில் எடுத்து “ஹலோ” என்றார்.  பின்னர், “சொல்லுன்னே,எப்படி இருக்க?” என்றார்.  பின்னர் “அப்படியா, எப்போ? என்னாச்சு? என்று வெறும் கேள்விகளையே கேட்டார்.  இதை கேட்டவுடனேயே என் மனதில் திக்கென்று பயம் கவ்விக்கொண்டது.  யாருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லையே என்று மனம் படபடத்தது.  தூர தேசத்தில் இருக்கும் பொழுது நடு இரவில் அல்லது எதிர் பாராத நேரத்தில் ஊரில் இருந்து போன் வந்தாலே மனம் நடுங்கும்.  தந்தி என்றாலே கெட்ட செய்திதான் என்று ஒரு காலத்தில் இருந்ததை போன்று  இருக்கும் இரவில் வரும் தொலைபேசி அழைப்பு. 

என் கணவர் பேசிக்கொண்டிருக்கையில் நடுவில் குறுக்கிடவும் முடியாது.  ஆனால் அவருடைய பேச்சு தோரணையிலேயே ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்தேன்.  என்னால் வேலையை தொடரமுடியவில்லை. போட்டது போட்ட படி விட்டு விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தேன்.  அவர் பேசி முடித்தப்பின் யாருக்கு என்ன ஆனது என்று கேட்டேன்.  “கீழையூர் அக்காவின் கணவர் இறந்து விட்டாராம்.” என்றார்.  எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  “என்ன ஆனது, எப்படி என்று கேட்டேன்.  “உடம்பு சரியில்லாமல் திடீரென்று இறந்து விட்டாராம் “ என்றார்.  மனம் மிகவும் வலித்தது.  அவருக்கு ஐம்பத்து ஐந்து வயது தான் இருக்கும்.  அவரின் மனைவி எனக்கு நாத்தனார்.  மிகவும் பாசமாக இருப்பார்.  நான் ஊருக்கு போகும் பொழுது எனக்கு வத்தல், வடகம் எல்லாம் போட்டுக்கொடுப்பார்.  அவர்களுக்கு இரண்டு மகன்கள்.  ஒருவருக்குக் கூட திருமணம் ஆகவில்லை.  மனம் முழுதும் வேதனை கவ்விக்கொண்டது.  அந்த இரவு வேலையில் யாரிடம் இந்த சோகத்தை பகிர்ந்து கொள்வது?  நானும் என் கணவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம்.  கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட அகால துர்மரணங்கள் எங்களை மிகவும் பாதித்திருந்தது.  இதை எழுதும் பொழுது கூட என் கண்களில் நீர் தழும்புகிறது. தனிமையில் அழ மிகவும் பழகிப்போனது.  உடனே ஊருக்கு தொலைபேசியில் அழைப்பதால் என்ன பயன்?  யாரும் பேசும் நிலையில் இருக்க மாட்டார்கள்.  அப்படியே அழைத்தாலும் இரு முனையிலும் நிசப்தமும், விசும்பலும், அழுகையினால் மூக்கை உரிஞ்சும் சப்தமுமே மிஞ்சும்.  ஆறுதலாக பேசக்கூடிய மனநிலையில் நாங்களும் இல்லை.  சரி இரண்டு நாட்கள் கழித்து பேசிகொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.  எவ்வளவு தூரம் நம்மால் தொலைபேசியில் ஆறுதல் கூறமுடியும்?  உற்றார் உறவினர் சூழ தங்கள் துக்கத்தை அவர்கள் அங்கே பகிர்ந்துகொள்ள , இங்கே யாரும் இன்றி நாங்கள் மனதுக்குள் மட்டுமே அழ முடிந்தது.  உடனே ஊருக்கு போக முடியாத சூழ்நிலை.  யாரிடம் இதை கூறி புரியவைக்க முடியும்.  நம் மனதில் ஏற்படும் போராட்டங்கள் நமக்கு மட்டுமே தெரியும்.  இரவு படுத்தப்பின்னும் தூக்கம் வரவில்லை.  அழுகை ஓலங்கள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.  

மறுநாள் எல்லோரும், அலுவலகம், பள்ளி என்று சென்றப்பின் நான் தனியாக வீட்டில் இருந்தேன்.  அந்த தனிமை என்னை கொன்றது.  ஊரில் எப்படி இருக்கிறார்களோ? என்ன நடந்ததோ என்று மனம் ஊரை நோக்கி பறந்து கொண்டே இருந்தது.  மனதில் பட படப்பு இருந்து கொண்டே இருந்தது.  ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு நம் வேதனை புரிய வாய்ப்பில்லை.  நாம் இத்தகைய துக்கங்களை ஒரு தினசரியில் படிக்கும் செய்தியாகத்தான் எடுத்துக்கொள்வோம் என்று நினைக்கிறார்கள். இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?  நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை.  சந்தோஷமான விஷயங்களை எளிதாக நாம் மற்றவர்களுடன் தொலைபேசியில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பேசி பகிர்ந்து கொள்ளமுடியும்.  ஆனால் மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது  எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்  என்பதில் எனக்கு சந்தேகமே.  ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் பொழுது சென்ற முறை சந்தித்த யாராவது ஒருவர்  இம்முறை இல்லை எனும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே அது கொடுமையிலும் கொடுமை.  அவர்களின் நினைவுகள் நம்மை தாக்கி கொண்டே இருக்கும்.  மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். நேரில் சென்று உடலை பார்க்காதவரையிலும் மனம் உண்மையை ஏற்க மறுக்கும்.   ஆனால் அதனை தூரத்தில் இருந்து கேட்டும் பொழுது மனதின் ஓரத்தில் அது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கும்.  நேரில் பார்ப்பவர்கள் கூட சடங்குளை முடித்த பின் நிதர்சனத்தை நோக்கி நடக்கத்துவங்குகிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்து கொண்டு செய்தி மட்டுமே கேட்டறியும் நம் மனம் உண்மையை ஏற்கொள்ள மறுக்கிறது.  ஊருக்கு  சென்று பார்க்கும் வரை இது எதுவுமே நடக்கவில்லை என்று இறந்தவர் கண் முன் மீண்டும் தோன்றுவாரா என்று ஒரு நினைப்பு மனதின் ஓரத்தில்  தொற்றிக்கொண்டே இருக்கும்.  எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இழப்பு இழப்புதான்.  மனதில் ஏற்படும் துக்கமும், தாக்கமும் ஒன்றுதான்.    

Wednesday, November 3, 2010

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

  எல்லோரும் காலையில் பள்ளிக்கூடம், ஆபீஸ் என்று  சென்றப் பின் நான் என் அன்றாட வேலைகளை தொடங்க ஆரம்பித்தேன்.  இரவு சரியாக தூங்காததால் களைப்பு வேறு.  இருந்தும் இல் வேளைகளில் இருந்து தப்பிப்பதற்கு ஜாமீன் கிடைக்காதே.  திருமணம் என்ற குற்றத்தை ஒரே ஒரு முறை புரிந்ததற்காக இந்த தண்டனையா என்று என்னையே நொந்துக் கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.  வீட்டை கூட்டுவதற்கு முன் ஒவ்வொரு அறயாக சென்று அங்கு அலங்கோலமாக கிடக்கும் பொருட்களை முதலில் அடுக்கி வைப்பது என் வழக்கம்.  என் பெண்ணின் அறைக்கு நுழைந்த பொழுது அங்கு எதுவும் தரையில் கிடக்கவிலை.  அவளின் ஸ்டைல் என்ன தெரியுமா?  எந்த பொருளானாலும் அவள் மேசை மீது குவித்து வைத்து விடுவாள்.  அதை ஒழுங்காக அடுக்கி வாத்தால் என்ன என்று கேட்டால் “I Like it this way amma.  எனக்கு இப்படி இருந்தால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியும்”, என்று வேறு ஒரு பதில்.  அவள் அலமாரியை திறந்தால் துணிமணிகள் ஒரு சிறு எவரெஸ்ட் மலை போல் குவிந்து கிடக்கும்.  மாதம் ஒரு முறை அதை நான் அடுக்கினால் உண்டு.  மிகவும் கோபம் வந்துவிட்டால் நான் எல்லாவற்றையும் எடுத்து ஒரு நாள் தரையில் வீசுவேன்.  பின் அவளையே மடிக்கச் சொல்வேன்.  End of the day mission accomplish செய்வது அடியேனே.  பெத்த மனம் பித்து ஆயிற்றே.  இது இப்படி இருக்க, ”எனக்கு dressஏ இல்லை.   You never buy for me." என்ற குறைவேறு.  என் தந்தை சொல்வதை போல் நாண்கு துணியை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் மாற்றி மாற்றி துவைத்து மடித்து அடுக்கி அழகாக வைத்துக்கொள்ள தோன்றும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.  கேட்டதை வாங்கியும் கொடுத்து வாங்கிகட்டிக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது!!


    மகனின் அறைக்கு சென்றால் என் தலை எந்திரன் ரோபோ போல் சுற்றும்.  படுக்கையில் புத்தகம், தரையில் சாமான் என்று பொருட்கள் அறை முழுதும் இரைந்து கிடக்கும்.  ஒன்று நான் ரோபோவாக மாறவேண்டும் அல்லது உதவிக்கு நல்ல “சிட்டி ரோபோ” ஒன்று அவசியம் வேண்டும். அலங்கோலமான அறையை பார்த்தவுடனேயே கோபம் தலைக்கு ஏறும்.  ஆனால் யாரிடம் காண்பிப்பது.   மனதுக்குள் திட்டிக்கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து அவற்றுக்குரிய இடத்தில் அகுக்கி வைத்து விட்டு பின் மற்ற அறைகளை சுத்தம் செய்வேன்.   என்னிடம் ஒரு fridge magnet உள்ளது.  அதில் “I don't need a man to keep me happy but a maid is essential."  இவர்கள் அடிக்கும் கூத்திற்கு வேலை செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.  விடுமுறை நாட்கள் இன்னும் மோசம்.  தந்தையும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்.  சுத்தம் செய்து செய்து என் முதுகு கேள்விக்குறியாக இருக்கும்.  மீண்டும்  திங்கள் மதியம் தான் நிமிரும்.


     ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தம் செய்யும் போதுதான் எனக்கு less things more comfort என்று என் தந்தை கூறுவது ஞாபகத்திற்கு வரும்.  ஆனால் என்ன செய்வது பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடக்க வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில் நானும் பொருட்களை வாங்குவதை நிறுத்துவதில்லை.   அவற்றிற்கு ஒரு உபயோக காரணத்தை கண்டுபிடிக்க தவறுவதும் இல்லை.  ஏதொ உலக பொருளாதாரத்திற்கு என்னால் ஆன உதவி என்று வைத்துக்கொள்ளுங்கள். 


   ஒரு வழியாக என் வேலையை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்து உட்காருகையில் மணி நாண்காகிவிடும்.  பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டிற்கு வந்து விடுவார்கள்.  பின் மாலை கடன் தொடரும்.  வந்தவுடன் என் மகனின் புத்தகப்பை ஒரு புறம், சாப்பாட்டுப் பை ஒரு புறம் , uniform ஒரு புறம்  என்று பறக்கும்.  சிறு சுனாமி வந்தது போல் வீடு காட்சியளிக்கும்.  பின் என் ராக ஆலாபனையை தொடங்கினால் எல்லாம் அதன் அதன் இடத்திற்கு போகும்.  சரி வீட்டுப்பாடம் செய்ய வைக்கலாம் என்று புத்தகப்பையை திறந்தால் பென்சில் இருக்காது, இல்லை நோட்டு புத்தகங்கள் கசங்கி இருக்கும்.  அப்பாடா என்று ஆகிவிடும்.  எப்பொழுதுதான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதோ என்று வேண்டாத சாமி இல்லை.  “உன்னை திருமணம் செய்து கொள்பவள் என்ன பிள்ளை வளர்த்து வைத்து இருக்கிறார்கள் உங்கள் அம்மா. இப்படி ஒரு பொருப்பில்லாத பிள்ளையை  என் தலையில் கட்டி விட்டார்கள்.” என்று என்னை திட்டுவாள் என்றும் கூறியிருக்கிறேன்.  அதை புரிந்து கொள்ளும் வயசு இல்லை என்று தெரிந்தும் என் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன்.  ஒரு வேலை நானே என் மாமியாரை சில சமயங்களில் இப்படித்தான் மனதில் திட்டுகிறேனோ??  நானும் பல சாம பேத வழிகளை கையாண்டு பார்த்துவிட்டேன்.  பலன் இல்லை.  அடிக்கும் மசியவில்லை.  எந்த  ராஜா எந்த பட்டிணம் போனால் என்ன நான் செய்வது தான் செய்வேன் என்று அவன் உலகில் சந்தோஷமாக விளையாடி திரிந்தான்.  சரி ஹாஸ்டலில் போட்டு ஒரு வருடம் நிமிர்த்தலாம் என்று முடிவு செய்து ஒரு நல்ல ஹாஸ்டல் பார்க்க சொல்வதற்காக என் தந்தைக்கு போன் செய்தேன்.  எனக்கும் என் தந்தைக்கும் இடையே  நடந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு......

நான்:   அப்பா எப்படி இருக்கீங்க?

அப்பா:  நான் நல்லா இருக்கேம்மா.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. நேத்து தான் போன் பண்ண அப்புறம் என்ன இன்னைக்கு திடீற்னு காலையிலேயே போன்.  என்ன விஷயம்?

நான்:   ஒன்னுல்லை அப்பா. ரிஷி ரொம்ப விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கான்.  கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.  நல்ல ஹாஸ்டலா பாருங்க, போட்டுட்டு நா நிம்மதியா இருக்கேன்.

அப்பா:   ஏம்மா அப்படி சொல்ற?  போகப்போக திருந்திவிடுவான்.  கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்கொடு.

நான்:   சொல்லியும் பாத்துட்டேன், அடிச்சும் பாத்துட்டேன்.  திருந்தவே மாட்றாம்பா.  கத்தி கத்தி எனக்கு தான் B.P வந்தும் போல. 

இதை கேட்டு பதற்றமடைந்த என் தந்தை( எனக்கு B.P வந்துவிடும் என்பதால் பதற்றம் இல்லை. பேரனை அடித்து விட்டேன் என்பதற்கான பதற்றம்.):  என்னமா, அடிக்காதம்மா பாவம்.

நான்: பாவம் யாருப்பா? நான் தான் பாவம்.

அப்பா:   இல்லம்மா, அடிச்சீனா ரொம்ப feel பண்ணுவான்.  மனசுக்குள்ள வச்சுகிட்டு கஷ்டப்படுவான்.  நான் செஞ்ச தப்பை நீங்க உங்க பிள்ளைகளுக்கு செய்யாதீங்க.  நான் தான் சின்ன வயசில் உங்களை அடிச்சு வளத்தேன்.  நீங்க அப்படி செய்யாதீங்கம்மா.

நான்:   கம்பெடுத்தால் தான் சில சமயம் குரங்கு ஆடுதுப்பா.   நீங்க மட்டும் எங்களை அடிச்சீங்க.  ஏன் நாங்க மட்டும் செய்யக்கூடாதா?

அப்பா:   இல்லம்மா. நான் உங்கள அடிச்சது disciplined ஆ வளக்க.

நான்: நானும் அதுக்குத்தான் அப்பா அடிச்சேன்.

அப்பா:   NO, NO, அவன அடிகாதம்மா.  நான் அப்படி disciplinedஆ வளத்ததாலதான் இப்ப உங்க உங்க வீட்ல அதே ஒழுங்க எதிர்பார்கறீங்க.  சண்டை வருது.  என்ன செய்யறது.  ஏண்டா அப்படி அடிச்சோம்னு இப்ப நான் feel பண்றேம்மா.  இங்க எங்கிட்ட கொண்டுவந்து விடு.  நான் நல்லவிதமா பொருமையா சொல்லிக் கொடுத்து வளக்கறேன். 

நான்:   சரிப்பா நான் போனை வக்கறேன்.
போனை வைத்த பிறகு சிறுது நேரம் இந்த சம்பாஷணையை rewind செய்து பார்த்தேன். பெற்ற பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும்  இடையே இவ்வளவு வித்தியாசமா?
பேரப்பிள்ளைகள் மீதுதான் தாத்தா பாட்டிக்கு அளவிட முடியாத கண்மூடித்தனமான பாசம்.  வரையரையற்ற இந்த பாசத்தை அருகில் இருந்து அனுபவிக்க இயலாமல் நம் குழந்தைகளும் இந்த பொருள் தேடும் உலகில் நம்மோடு சேர்ந்து அலைகிறார்கள்.