Saturday, October 28, 2017

Mom and Rishi

Mom was all excited about her betterhalf's birthday . She expected the same excitement in her son too. The reason being if it was his birthday Rishi would start the announcement three months ahead and list his wishlist items. Sometimes the next year birthday of his would be announced rather reminded on the the current year's birthday itself. Gen x ! Think ahead!!
Mom: Rishi , do you remember that tomorrow is Papa's birthday?
Rishi: Mamaaaa,(with a long stretch on aaaaa) how can I forget his birthday mama?
Mom was very happy that he remembered his dad's birthday without her reminding. She could have stopped with this happiness but the woman inquisitiveness in her made her throw the next question.
Mom: Rishi , how come you remembered Papa's birthday without me reminding?
Rishi: I remembered it mama, because it is my friend Aman's birthday today and obviously Papa's birthday would be the next day.
Mom : So as long as you remember Aman's birthday you would remember Papa's birthday.........
Rishi with a sly smile on his face : Maybeeee..... But anyways you will remind me right?
Mom didn't want to post anymore questions and get intimidated and get proved that she is the emotional idiot queen of the house.
Day of the birthday: Morning 7.45am. Rishi was getting ready for school.
Mom: Rishi, did you wish papa happy birthday?
Rishi: Oh no I forgot . Let me do it!
He went inside the room to wake up the birthday baby and wished his dad. Dad in his sleep reciprocated with the thank you not knowing that the prompt was there in the kitchen .
Mom had already sent a message to her daughter to remind about the birthday.The reply was "LOL! I do remember" . Mom didn't know whether to feel happy about her daughter's memory or not. She did'nt want to ask the daughter also the same question ,"How come you remember?" . ..... Once a day only she can voluntarily get her nose cut........
.

Thursday, October 26, 2017

மனிதம் மடியாது......

அதிகாலை நான்கு மணி இருக்கும். வானம் ஒரே கும்மிருட்டு. முந்தின நாள் இரவு மழை பெய்து இருந்ததால் வானம் கருநிறமாகவே இருந்தது. சூரியன் எழ மனமில்லாமல் சற்றே இளைப்பாறிக்கொண்டிருந்தான். அந்த கிராமத்தில் ஒரே நிசப்தம். ஊரே உறங்கிக்கொண்டிருந்தது. தன் கடமையை ஆற்ற பால்காரர் மட்டும் ஒரு கடா கடா மிதிவண்டியில் மணியை அடித்தபடி போய்கொண்டிருந்தார். அவரின் மணிஓசையை கேட்டு பால் கறக்க மாடுகளை பால் பண்ணைக்கு ஓட்டிச்செல்ல பல வீட்டு பெண்மணிகள் எழுந்தார்கள். கால தாமதம் ஆகிவிட்டால் பின் கறந்த பால் வீனாகிவிடும். அவர் கிடைத்த பாலை வாங்கிக் கொண்டு நேரத்திற்கு கிளம்பிவிடுவார்.  ஓட்டல் ஏதும் அக் கிராமத்தில் இல்லாததால் பாலை எங்கும் விற்கக்கூட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் குடித்தது போக பாக்கியை உறை ஊற்றித்தான்  வைக்கவேண்டும். முடிந்தமட்டும் வீட்டுப் பெண்மணிகள் பால்காரரின் சைக்கிள் மணிச்சத்தம் கேட்ட உடன் எழுந்துவிடுவார்கள். அக்கம்பக்கத்தில் யாராவது எழ தாமதமானால் மாட்டை ஓட்டிக்கொண்டு போகும் போதே, “அக்கா பால் காரர் வந்துட்டாரு”, என்று குரல் கொடுப்பார்கள்.

அன்றும் அப்படி பால் காரர் சைக்கிள் மணிச்சத்தம் கேட்டவுடன் திறக்காத விழிகளை தேய்த்துக்கொண்டு வள்ளி எழுந்தாள். படுத்திருந்த பாய், தலையனையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கொல்லப்புர கதவை திறந்துகொண்டு சத்தமில்லாமல் பின் பக்கம் சென்றாள். காலை எடுத்து வெளியில் வைத்தவுடனேயே காலில் சேறும் சகதியும் ஒற்றிக்கொண்டது. சிகப்பு மண் என்பதால் மழைநீரில் கொழ கொழ என்று இருந்தது. இருட்டு வேறு. பத்திரமாக காலை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கிணற்று அடிக்குச் சென்றாள். அங்கு வாளியில் இறைத்து வைத்திருந்த தண்ணீர் கொண்டு முகம், கை, கால் கழுவி, புடவை முந்தாணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, ஒரு வாளியில் தண்ணீர் முகர்ந்து கொண்டு வாசல் தெளிக்க சென்றாள்.

அவளின் வீட்டு வாசல் விஸ்தாரமான வாசல். வீடு சிறியதாக இருக்குமே தவிர வாசல் மிகப்பெரியது. சிறிய, ஓடு வேயப்பட்ட வீடு தான். அதிலேயே தன் நான்கு குழந்தைகளையும் வளர்த்து பெரியவர்களாக்கி விட்டாள்.  பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பேரக்குழந்தையும் பார்த்துவிட்டாள். வீட்டுத்திண்ணையில் அரிசி மூட்டை, நெல்மூட்டை, உரமூட்டை என்று மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பூச்சிபட்டு வந்து மறைந்து இருந்தால் கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டிற்குள் சாமானும் செட்டுமாக இருந்தாலும் வீட்டு வாசல் மட்டும் அழகாக சாணம் தெளிக்கப்பட்டு எப்பொழுதும் சுத்தமாக கூட்டப்பட்டு, கோலம் போடப்பட்டிருக்கும். சிறுவர்கள் கிரிகெட் விளையாட ஏதுவாக சுத்தமாக இருக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் வீட்டு வாசலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது.

வாளி நிறைய தண்ணீரை வீட்டை ஒட்டிய சந்து வழியாக எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள். அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாத்தப்பட்ட வாசல் கூட்ட என்பதற்காகவே இருக்கும்  கட்டைவிளக்குமாரை எடுத்துக் கொண்டு அதனை வலக் கையால் பிடித்துக்கொண்டு இடக்கை உள்ளங்கையில் ஒன்றிரண்டு அடி அடித்து ஒழுங்கு செய்து வாசலை கூட்ட ஆயத்தமானாள். கையில் துடைப்பத்துடன் குனிந்தவள் தான். “ஆஆஆ, “என்று அலறினாள். “கையில் வைத்து இருந்த துடைப்பத்தை தூக்கி எரிந்துவிட்டு,” பாம்பு கொத்திடுச்சு யாராவது வாங்க” என்று அலறியபடி கீழே சாய்ந்தாள். அவளை காலில் கொத்திய அந்த நல்ல பாம்பு வந்த சுவடு தெரியாமல் பக்கத்தில் இருந்த புதருக்கு  நளினமாக நெளிந்து சென்றது.


இவளின் அலறல் சத்தம் கேட்டு, மாட்டுக் கொட்டகையில் மாட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த  பக்கத்து வீட்டு அமுதா மாட்டை விட்டு விட்டு ஓடோடி வந்தாள். அவர்கள் வீட்டிற்கும் இவர்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பங்காளி தான் ஆனால் ஏதோ மனஸ்தாபம். ஒரு காலத்தில் ஒன்றாக கூடி கொண்டாடியவர்கள் தான். பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன்,உன் மகனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டது, என் மகன் வேலை இல்லாமல் இருக்கிறான் என்பதை போன்ற ஒருவித பொறாமை  உணர்வு வள்ளியின் மனதில் . அமுதா குடும்பத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். சத்தம் கேட்டு   ஓடி வந்து பார்த்த அமுதா உடனே தன் புடவை முந்தானியை கிழித்து பாம்பு கடித்த இடத்திற்கு மேல் கட்டிவிட்டு, ஓடிச்சென்று தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனையும், மகனையும் எழுப்பிக் கொண்டு வந்தாள். அது வரையில் முதல் நாள் குடித்த சாராயத்தின் போதையில் உறங்கிக்கொண்டிருந்த வள்ளியின் கணவர் மெதுவாக எழுந்து வந்து செய்வதறியாது திகைத்து நின்றார்.

அக்கிராமத்தில் மருத்துவ வசதி எதுவும் கிடையாது. பக்கத்து கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும். உடனே ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து காரில் வள்ளியை தூக்கி போட்டுக்கொண்டு மன்னார்குடிக்கு சென்றார்கள். அங்கு முதல் உதவி செய்த அங்கிருந்த மருத்துவர்கள்,”உடனே தஞ்சாவூருக்கு பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க, இவ்வளவு தான் எங்கலால இங்க செய்ய முடியும் ,” என்று கைவிரித்துவிட்டார்கள். உடனே அங்கிருந்து தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரிக்கு வள்ளியை கொண்டு சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அரசாங்க மருத்துவமணை ஆகையால் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு இருக்கவில்லை. நல்ல வேலையாக அவர்களின் உறவினர் ஒருவர் அங்கு மருத்துவராக வேலைப்பார்த்தார். அவர் வள்ளியை பார்த்துவிட்டு,” நீங்க இனி தாமதிக்காம பிரைவட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. இங்க இவங்களுக்கு கொடுக்கற மருந்து வீரியமில்லாத மருந்து. இந்த பாம்பு கடிக்கு இன்னும் ஸ்டார்ங்கா மருந்து தேவைப்படும். கால் வேற அழுகற மாதிரி இருக்கு.” என்று அறிவுரை வழங்கினார். அதை கேட்ட வள்ளியின் மகன்களும், கணவரும், அவளை ஒரு தனியார் மருத்துவமணையில் கொண்டு சேர்த்தார்கள். அங்கு தான் அவளின் திருமணமான மகள் அக்கெளண்டண்டாக வேலைப் பார்க்கிறாள். இதுவரை கூடவே இருந்து அமுதாவின் கணவர் ராசா எல்லா உதவிகளையும் செய்தார். வள்ளி கண்முழித்து பார்க்கும் வரை கூடவே இருந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கண் விழித்து பார்த்த வள்ளியின் விழி ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. தான் இன்று உயிரோடு இருப்பது அமுதாவின் குடும்பத்தினால் தான் என்பதை  உணர்ந்த அவள் ஏதும் பேசாமல் படுத்திருந்தாள் . மறுநாள் அவள் நலம் விசாரிக்க வந்த அமுதாவை பார்த்தவுடன் மீண்டும் அவள் கண்களில் தண்ணீர் ததும்பியது. அவளால் பேச முடியவில்லை. ஆனால் அவளின் கண்ணீர் ஆயிரம் வார்த்தைகளை , நன்றிகளை, மன்னிப்புக்களை உணர்த்தியது. அவளின் அருகில் சென்ற அமுதா அவளின் கைகளை இருக்க பிடித்துக் கொண்டு ,” அழாதக்கா, நீ பொழச்சுட்ட, கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒன்னும் ஆகல. கவலப்படாத சீக்கிரமா சரியாகி வீட்டுக்கு வந்துடுவ,” என்று ஆறுதல் கூறினாள். அவளின் மனதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் எஞ்சி இருக்கவில்லை. சமைத்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு,”சரிக்கா, சாயங்காலம் பால்காரர் வந்துடுவார், நான் கிளம்பறேன். உங்க வீட்டு மாட்டையும் பால் கறக்க நான் கூட்டிட்டு போறேன். நீ நல்லா தூங்கு ,”என்று கூறிவிட்டு,வள்ளியின் கணவரிடமும், மகளிடமும்,”அம்மாவ பத்திரமா பாத்துக்குங்க. ஏதாவது வேனும்னா சொல்லி அனுப்புங்க,”என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றாள். அறையை விட்டுச் சென்ற அவளை அக்குடும்பமே நன்றியுடன் பார்த்தது. வள்ளிக்கு மறு ஜென்மம் கொடுத்த அமுதாவும் அவளின் குடும்பமும் கடவுளாக தெரிந்தார்கள்.பகையும் , வெறுப்பும் இருந்த இடம் தெரியாமல் போனது.

வீட்டுக்குச் சென்ற அமுதாவிடம் அவள் வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த கடலையை காக்கா கோழி கொத்தாமல் இருக்க அமர்ந்தபடியே ஒரு குச்சியை கொண்டு விரட்டிக்கொண்டிருந்த அவளின் எழுபத்தி ஐந்து மாமியார் கிழவி,” என்ன அமுதா, வள்ளிக்கு இப்போ தேவலையா, நல்லா இருக்காளா?” என்று நலன் விசாரித்தாள். ”என்னா வீராப்பா இருந்தா, இப்ப யாரு அவ உசிர காப்பாத்தினது. தான் ஆடாட்னாலும் தசை ஆடும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. இதுக்குத்தான் எல்லாரும் ஒத்து ஒணந்து, விட்டு கொடுத்து வாழணும்னு சொல்றது. அந்த காலத்துல நாங்க ஒத்த ஓர்ப்படியா எல்லாரும் ஒத்துமையா இருப்போம். இப்போ எங்க ? நீங்கல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே காசு கேக்கறீங்க. என்னமோ போங்க எல்லாரும் புள்ள குட்டியோட ஒத்துமையா நல்லா இருந்தா சரி. யாரு எதை அள்ளிக்கிட்டு போகப்போறோம்>” என்று தனியாக புலம்பியபடி காக்கா விரட்டுதலை தொடர்ந்தாள்.
வீட்டிற்குள் சாமி விளக்கு ஏற்றிய அமுதா , வள்ளி சீக்கிரமே குணமடைய அந்த மதுரைவீரனிடம் வேண்டிக்கொண்டாள்.

Monday, October 23, 2017

வார்த்தைக் கண்ணாடி

தீபாவளி அன்று காலை! வீட்டில் சாமி கும்பிட்டு கங்கா ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு சுட்டு வைத்திருந்த வடை, சுழியனையும் ஒரு கைப்பார்த்துவிட்டு உண்ட களைப்பில் சோபாவில் சாய்ந்திருந்த நேரம் , சரி ஊருக்கு பேசி தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிவிடலாமே என்று முடிவு செய்தேன். ஒன்று ,இரண்டு சொந்தங்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி முடித்துவிட்டு சிம் கார்ட் டாப் அப் செய்வது போல் வயிற்றில் சிறிது இடம் காலியானவுடன் மீண்டும் முறுக்கு, லட்டு என்று டாப் அப் செய்து விட்டு அடுத்து யார் யாருக்கெல்லாம் போன் செய்வது என்று யோசித்து போன் செய்தேன்.

பேசிய முக்கால் வாசிப்பேர் கேட்ட கேள்வி ,”என்ன என்ன பலகாரம் செஞ்ச நீ?” என்பது தான். நானும் பதிலுக்கு நான் செய்தவற்றை கூறிவிட்டு ”நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்?” என்று கேட்டறிந்து கொண்டேன். எல்லோருடனும் ஒன்றாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. மகளும் வேறு ஒரு நாட்டில் படிப்பின் காரணமாக, கணவரும் வேலை நிமித்தமாக வேறு ஒரு நாட்டில். நானும் மகனும் தனியாக தீபாவளி கொண்டாடியது ஏதோ ஒரு வித ஈடுபாடில்லாமல் தான் இருந்தது. அதை மறக்கத்தான் எல்லோரிடமும் போன் செய்து பேசினேன். மகனுக்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அதுவும் எந்நாள் போன்ற ஒரு நாளாகவே இருந்தது. புது துணி உடுத்தி யாரிடம் காண்பிப்பது என்பது கூட தெரியாமல் அதனை உடுத்தாமலேயே இருந்துவிட்டேன்.

வயதான ஒரு உறவினரிடம் பேசி வாழ்த்து தெரிவிக்கலாமே என்று அவருக்கு போன் செய்தேன். போனை முதலில் எடுத்த மாமா,” என்ன கீதா தீபாவளி எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? “, என்றார். நானும் பதிலுக்கு,”நானும் , ரிஷியும் நன்றாக கொண்டாடினோம்,”என்றேன். அதற்கு அவர்,”ஏன் ரவி ஊரில் இல்லையா?” என்றார். “இல்லை, வேலை நிமித்தமாக வெளியூர் சென்று இருக்கிறார், அவர் தனியாக அங்கே கொண்டாடுகிறார், நாங்கள் இங்கே தனியாக கொண்டாடுகிறோம்,”என்றேன். என் குரலில் ஒரு சுனக்கத்தை உணர்ந்த அவர்,” சரி விடு உங்களுக்காகத்தானே இப்படி அலைகிறார் ,”என்றார். ஆம் அவர் கூறியதில் உண்மை இருந்தது.

”தீபாவளி அதுவுமா எப்படி அவர் வெளியூர் போனார், நீங்க எதுக்கு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க?” என்று பலர் என்னை அன்று கேட்டுத்தீர்த்தார்கள். கேள்வி கேட்ட பலரிடம்,”இல்லை வேறு வழியில்லை , போக வேண்டிய கட்டாயம்,” என்றும், சிலரிடம் கொஞ்சம் ஆதங்கத்துடன்,” அது அவருக்கே தெரியவேண்டும்” என்றும் கூறினேன். தீபாவளி அதுவுமாக அவர்  ஒன்றும் ஆசையாக வெளியூர் போகவில்லை என்பது என் உள்மனதிற்கு தெரிந்தாலும் பலரது கேள்வியும், கேள்வி கேட்ட தோரணையும் எனக்கு அவர் மேல் சிறு கோபத்தை தூண்டியது. அக்கோபம் மனதுக்குள்ளேயே பூட்டப்பட்டு கிடந்தது.

அந்த மாமாவிடம் பேசிவிட்டு, அவரின் மனைவியிடம் பேசினேன். மாமாவிடம்  நான் பேசியதை அவர்கள் அருகில் இருந்து கேட்டிருப்பார்கள் போல்.  எடுத்த எடுப்பிலேயே,” கவலப்படாத கீதா, மாப்பிள்ளை நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு சென்று இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு செல்லவில்லை இல்லையா?” என்றார். நான் அவர் கூறியதை பெரிது படுத்தாமல்,” இல்லை இல்லை  நான் கவலை படவில்லை. கொஞ்சம் போர் அடிக்குது தனியாக கொண்டாட அவ்வளவு தான், நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள்? என்ன என்ன பலகாரம் செய்தீர்கள்?, என்று கேள்விகளைக் கேட்டு அவரின் பேச்சை திசை திருப்ப முயற்சித்தேன். ஆனால் அவர் விடாமல், மீண்டும் இரு முறை ,”நீ அதல்லாம் கவலப்படாத, அவர் நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு போய் இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு இல்லையே?” என்று அதே வார்த்தைகளை வீசினார். முதல் முறை கேட்ட பொழுதே எனக்கு அந்த வார்த்தைகள் இதமாக காதில் விழவில்லை. மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை கேட்ட பொழுது மனதிற்குள் சுருக் என்று இருந்தது. ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று நினைத்து ,”சரி நீங்கள் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுங்கள்”, என்று கூறினேன். அதற்கும் அவர்கள்,”எங்க சந்தோஷமாக கொண்டாறது?” என்று கூறியதுடன், அவர்களின் இறந்த சொந்தங்களை அடுக்கினார்கள். இதற்கு மேல் உரையாடலை தொடர்ந்தால் என் மனம் புண்படும் என்று நினைத்து போனை வைத்துவிட்டேன்.

போனை வைத்துவிட்டேனே தவிர அவரின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு பயத்தை உண்டு பண்ணியது. ஊருக்கு சென்று இருப்பவர் பத்திரமாக வரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஒரு புறம்.நாம் தனியாக இருக்கிறோமே என்று கூட நினையாமல் இப்படி எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்களே என்ற சங்கடம், கோபம். அவர்கள் என் மேல் கரிசனமாக இருப்பதானால் இதே வார்த்தைகளை வேறு விதமாக கோர்த்திருக்கலாம். அவரின் வார்த்தைகள் அவரின் மனதை , அவரின் ஆழ் எண்ணங்களை பிரதிபலித்தனவா என்று எனக்கு ஒரு சந்தேகம். அவர் நினைத்திருந்தால் இதமாக, பொதுவாக பேசி இருக்கலாம். ஒருவரது வார்த்தைகள் கண்ணாடியாய் எப்படி ஒருவரது எண்ணங்களை எடுத்துக்காட்டுகின்றன!அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டேன்.

அதையே நினைத்துக்கொண்டு நான் குழம்பினால் அவரின் எண்ணம் வெற்றிப் பெற்றுவிடும். அதனை தீபாவளி பட்டாசு குப்பையென மனதில் இருந்து கூட்டி வெளியில் கொட்டிவிட்டு சாயங்காலம் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆயத்தமானேன். நானும் மகனும் தனியாக இருக்கிறோம் என்று நினைத்து எங்களுக்காக ஆசையாக பலகாரம் எடுத்துவந்த என் இனிய தோழிகளை நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.  அவர்கள் எடுத்துவந்த பலகாரங்களை ஆசை ஆசையாக உண்டு மகிழ்ந்தேன். தீபாவளி இனிதே முடிந்தது.

வாயில் ஊறும் உமிழ்நீர் ஆயினும் உமிழும்  முன் நாவினால் உணர்ந்துவிட்டோமானால் பிறர் நலன் கருதி  கண்ட இடங்களில் உமிழ மாட்டோம். மீறி உமிழ்ந்தால் என்றாவது ஒரு நாள் பிறரது உமிழ்நீர் மீது நம் கால் பதியும்.