Sunday, November 26, 2017

இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈஈ மரப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...........

இஞ்சி என்றாலே இஞ்சி இடுப்பழகி பாட்டு  ஞாபகத்திற்கு வராதவர்கள் இருக்க முடியாது. தினமும் இஞ்சியை உணவில் சேர்த்தால் இரத்தம் தூய்மை அடையும், தினம் இஞ்சி சாறு பருகினால் வாயுத்தொல்லை நீங்கும், கொழுப்பு கரையும் அது இது என்று எண்ணற்ற பயன்கள் இஞ்சிக்கு உண்டு . இதன் சாற்றை  எப்படி பருகினால் , எதனுடன் பருகினால், எப்பொழுது பருகினால் நன்மை என்ற பல வழிமுறைகளும்  உண்டு. நமக்கும் அதோ இதோ என்று பாதி கிணற்றை கடக்கும் வயது வந்தாகி விட்டது. கூடவே வயதிற்கான அத்தொல்லை, இத்தொல்லை என்று எல்லாம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.   நாமும் இஞ்சி சாறு பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று அதனை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது.

காய்கறி வாங்கும் பொழுது இஞ்சி வாங்க மறப்பதே இல்லை. நான் சிறுமியாக இருந்த பொழுது காய்கறி வாங்கச்சென்றால் தவறாமல் ஐம்பது காசுக்கு இஞ்சி, கொத்தமல்லி இலை வாங்கச் சொல்வாள் என் அம்மா. அந்த இஞ்சியும், கொத்தமல்லி தழையும் மண்ணில் தோய்ந்து இருக்கும். ஆனால் இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி சர்ப்ஃபில்  ஊறவைத்து கழுவியது போல் வழ வழ என்று சுத்தமாக கிடைக்கிறது. அது மண்ணின் அடியில் விளைந்ததற்கான அறிகுறியே இருப்பதில்லை.  சுத்தமான காய்கறிகளை வாங்கி பழக்கப்பட்டு போனதால் இப்பொழுதெல்லாம் மண் இருக்கும் காய்கறிகளைக் கண்டால் கொஞ்சம் அருவருப்பாக இருக்கிறது. இப்படி சுத்த சிகாமணியாகி போனது தான் வீட்டில் நடக்கும் பல பிரச்சணைகளுக்கு காரணம்.

காய்கறிகளை  எடுத்துக்கொண்டு பில் போடுவதற்காக க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். அப்பொழுது அங்கே ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றிய இஞ்சிமரப்பா மிட்டாயை பார்த்துவிட்டார் கணவர். உடனே இஞ்சிமரப்பா ஒரு நாலைந்து, எள்ளு மிட்டாய் நாலைந்து எடுத்து பில் போட்டார்.எள்ளு மிட்டாய் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது எப்படி இருக்குமோ என்ற தயக்கம். இஞ்சி மரப்பா பார்க்க அழகாக பொன் நிறத்தில் இருந்தது. எள்ளு மிட்டாயோ கருநிறத்தில் பார்க்க அவ்வளவு கவர்ச்சியாக இருக்கவில்லை. என்னதான் நிறபேதம் பார்ப்பதில்லை என்று நினைத்தாலும் மிட்டாய் வாங்கும் பொழுது கூட நம் ஆழ் மனதில் இருக்கும் அந்த பேதமை உணர்வு தலை எடுத்துவிடுவதைக் கண்டு எனக்கு வெட்கமாக இருந்தது. வெள்ளை சீனியின் விலை ஏற்றத்திற்கும், வெல்லத்திற்கான விலை இறக்கத்திற்கும் இந்த நிற வேற்றுமை ஒரு காரணமாக இருக்குமோ??

 இஞ்சி மரப்பாவை  பார்த்தவுடன் பல எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. அப்பொழுதெல்லாம் பேருந்து நிலையத்தில் தவறாமல் இஞ்சிமரப்பா விற்கப்படும். நாம் பேருந்தில் அமர்ந்திருக்கும் பொழுது பேருந்துக்குள்ளோ அல்லது வெளியிலோ அழுக்கு உடை அணிந்த ஒரு  சிறுவனோ அல்லது பெரியவரோ ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இஞ்சிமரப்பாவை, இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈ மரப்பாஆஆஆஆ என்று கத்திக் கொண்டே விற்பார்கள். கூடவே அதனை உண்பதனால் ஏற்படும் பலன்களையும் கூறி விற்பார்கள். ”அஜீரனமா, புளித்த ஏப்பமா, இத வாங்கி சாப்பிடுங்க நொடியில சரியாயிடும்”, என்று தங்களின் மார்க்கெட்டிங் டெக்னிக்கை கையாள்வார்கள். அவர்கள் அந்த இஞ்சிமரப்பாவை விற்பதில் ஒரு கலைநயம் இருக்கும்.

இஞ்சி மரப்பா விற்பவரே பெரும்பாலும் கமார்கெட் மிட்டாயும் விற்பார். பொதுவாக சிறுவர்கள் கமார்கெட்டும், பெரியவர்கள் இஞ்சி மரப்பாவும் வாங்கிக் கொள்வார்கள். இஞ்சி மரப்பா விற்கப்படாத பேருந்து நிலையமே இருந்ததாக எனக்கு நினைவில்லை. பெட்டிக்கடைகளில் கூட இஞ்சி மரப்பா விற்கப்படும். அது கண்ணாடி பாட்டிலில் , தேன்கூட்டின் உள் அறைகளைப்போல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா அல்லது பத்து பைசா என்பது தான் அதன் விலை. இப்பொழுது அழகாக ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி விற்பது போல விற்கப்படவில்லை. ஆனாலும் அதனை விற்பவரின் கை சுத்தமாக இருக்கிறதா, இல்லை அவர் மூடி விற்கிறாரா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அதில் பேருந்தின் புகை படிந்து இருக்கிறதா, புழுதி படிந்து இருக்கிறதா என்று அலைசி அராயப்படவில்லை. இஞ்சி மரப்பாவின் ருசி மட்டுமே  கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் காரம் கருதி நான் அதனை சீண்டிப்பார்த்ததே இல்லை. எங்கள் பாட்டி எப்பொழுது வந்தாலும் வாங்கி வருவார்கள். அவர்கள் வைத்திருப்பதில் ஒரு சிறு துண்டு வாங்கி நக்கி பார்ப்பதுண்டு எப்பொழுதாவது. அதன் ருசி எனக்கு பரிட்ச்சயமான ஒன்று தான்.

ஒரு முழு இஞ்சி மரப்பாவை அப்படியே வாயில் போட்டு சப்பி சாப்பிட ஒரு தைரியம் வேண்டும். அவ்வளவு காரம் இருக்கும் அதன் சுவையில். மதிய சாப்பாட்டிற்குப் பின் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. சாக்லெட் சாப்பிட்ட வயது கடந்து இப்பொழுது கடலை மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது. இப்பொழுது புதிதாக இஞ்சி மரப்பா ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்கிறேன். வயதாக வயதாக நாக்கின் சுவைக்கேற்ப சாப்பிடுவது போய் வயிற்றின் தேவை மற்றும் பலம் அறிந்து சாப்பிடுவது என்றாகிவிட்டது. வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளை நா இயல்பாகவே சுவைக்க மறுக்கிறது. மூளையும்”இதனை சுவைத்துப்பார்” என்ற எவ்வித சமிக்கையும் நாவிற்கு  அனுப்புவது இல்லை. இது காலத்தின்  கட்டாயம் போலும். சில நேரம் டீ போடும் போது இஞ்சிமரப்பாவை சிறிது பொடி செய்து அதனுடன் சேர்த்து பருகினால் சுவை கூடுதலாக தெரிகிறது.

இஞ்சியை தோல் சீவிதான் பயன் படுத்த வேண்டுமாம். இல்லையெனில் அது விஷமாகிவிடுமாம். ஆனால் இஞ்சியின் தோலை சீவுவதற்கு ஒரு தனி திறமை வேண்டும். அதன் ஏற்ற இறக்க நெளிவு சுழிவுளுக்குள் கத்தியை லாவகமாக வைத்து தோலை சீவவேண்டும். அப்படி சீவும் பொழுது தோலை மட்டுமே சீவவேண்டும். இஞ்சியின் சதைப்பகுதியைச் சேர்த்து சீவாமல் இருக்க வேண்டும். இஞ்சிக்கு நிறைய நெளிவு சுழிவுகள் இருப்பதால் தான் அதனை உணவில் நாம் நிறைய சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நாமும் நெளிவு சுழிவுகளுடன் அழகிய தோற்றம் பெறமுடியும் போல.

இப்பொழுதெல்லாம் எதை வேண்டுமானாலும் தண்ணீரில் காய்ச்சி அதற்கு டீ என்று பேர் வைத்து பருகலாம். இந்தோனேசியாவில் ஒரு முறை இஞ்சி டீ என்று ஒரு மசாஜ் பார்லரில் புத்துணர்ச்சி பெற கொடுத்தார்கள். அது அவ்வளவு சுவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து நானும் அதனை செய்து பார்க்க முயற்சித்தேன். அங்கு கொடுத்த டீயின் அதே சுவை வரவில்லையென்றாலும் கிட்டத்தட்ட அதன் சுவை கிடைத்தது. இப்படியாகத்தான் இஞ்சி டீக்கு அடிமையாகி போனேன்.


வீட்டில் இருந்த இஞ்சிமரப்பாவை ஒரு சிறு துண்டு நறுக்கி என் மகனுக்கு சுவைக்க கொடுத்து பார்த்தேன். வாயில் வைத்த மறுகணமே ”தூ” என்று துப்பிவிட்டான். நல்ல வேளை நான் அவன் முகத்திற்கு நேராக நிற்கவில்லை.  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அவனும் இஞ்சி டீ குடிப்பான். அப்பொழுது அவனுக்கும் அது எங்கேயோ பழக்கப்பட்ட சுவையாக தோன்றும் என நம்புகிறேன். இஞ்சி மரப்பாவை அக்காலகட்டத்தில் யாரும் செய்து விற்பார்களா என்பது கேள்விக்குறியே. மடிந்து கொண்டிருக்கும் பல உணவுகள் கொண்ட பட்டியலில்  இஞ்சி மரப்பாவும் அடங்கிவிடும். அதுவரையில் பிழைத்துக் கிடந்தால் நான் இஞ்சி மரப்பாவுடன் கூடிய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு  அது கிடைக்கும் காலம் வரை சுவைத்துக்கொண்டே இருப்பேன். பல நேரங்களில் உணவு கொடுக்கும் சுவையை விட அதனோடு தொடர்புடைய மனிதர்கள், நடந்த சம்பவங்கள், அதனை உண்ட இடங்கள், கொடுக்கும் நினைவுகளின் சுவையே ருசியானதாகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இஞ்சி மரப்பாவின் சுவையும் அத்தகைய ஒன்றே!

No comments: