Tuesday, November 21, 2017

காலை வேளை!

காலை வேளை!
வான் திரையில் இருந்து 
சிறு சிறு தூரல்கள்!
மடை திறந்த அணைபோல்
கொட்டித்தீர்க்க காத்திருக்கும்
திரண்டு நிற்கும் கருமேகம்!
விடிந்து விட்டதா இல்லையா
என்ற குழப்பத்தில்
விட்டு விட்டு
கவிபாடும் குருவிகளின்
குரலோசை!
சன்னல் திரைச்சீலையை
ஆடவிட்டு அழகு பார்க்கும்
சிலு சிலு காற்று!
தூரலில் நனைந்த
கருநிற உடை அணிந்த
சாலையில்,மெதுவாய்
ஊரும் சிறு, பெரு வாகனங்கள்!
அவை எழுப்பும் ஒலி!
இல்லவாசிகள் யாவரும்
கூட்டை விட்டு போனப்பின்
வீட்டில் நிலவும் அமைதி!
இஞ்சியும் ஏலமும்
மனம் கமகமக்கும்
டீ என் கையில் உள்ள
அழகிய சிகப்பு நிற கோப்பையில்!
மெல்லிய ஒலியில்
மனதைக் கவரும்
இளையராஜாவின் என்பதுகளில்
வந்த பாடல்கள்!
டீயை நா ருசிக்க,
இசையை காது ருசிக்க,
மழை சாரலை தேகம் ருசிக்க,
தரையில் நீர் கோலமிடும்
தூரலை கண்கள் ருசிக்க,
சன்னல் அருகே
தனிமையில் இனிமை
தேடும் நான்........

No comments: