Wednesday, November 14, 2018

நாம கர்ணம்




சமீபத்தில் டிவி செய்தியில் ஒரு பெண்மணியிடம் கேள்வி கேட்டார்கள். அவரின் பெயர் “போதும் பொண்ணு”. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்னடா இப்படி ஒரு பெயர் என்று! அந்த அளவிற்கு பெண் பிள்ளை போதும் போதும் என்று அவர்கள் பெற்றோர் பெற்று தள்ளி விட்டார்களா என்ன என்று எனக்குள் கேள்வி எழுந்தது. ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை எத்துனை பெண் பிள்ளைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் அத்துனை பாக்கியம் செய்தவர்கள் .ஆறாவதாக பிறந்த மகளுக்கு அழகாக அங்கையர்கன்னி என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோரும் இருக்கிறார்கள்.
போதும் பொன்னு எனும் பெயர் ஒரு புறம் இருக்க வேறொரு நிகழ்ச்சியில் ஒரு சிறு பெண்பிள்ளைக்கு பெயர் “வரப்பிரசாதம்” என்று பெற்றோர் கூறினர். அந்த பெயரை கூறும் பொழுதே அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. எவ்வளவு தவம் இருந்து அக்குழந்தையை அவர் பெற்று இப்படி பெயர் வைத்து இருப்பார் என்று தோன்றியது. எப்படி இந்த பெயரை சுருக்கி அழைப்பார்கள் என்று எனக்கு சந்தேகம் வேறு!
எனக்கு ஏன் கீதா என்று பெயர் வைத்தீர்கள் என்று பல முறை என் தாயிடம் நான் கோவித்துக் கொண்டது உண்டு. ஏனென்றால் , நான் சிறுமியாக இருந்த பொழுது மூலைக்கு ஒரு கீதா கஃபே, கீதா ஹோட்டல், கீதா டிராவல்ஸ், கீதா காப்பி கடை என்று கீதா என்ற பெயர் சிரிப்பாய் சிரிக்கும். ஒரு வகுப்பில் எப்படியும் ஒரு மூன்று கீதா என்ற பெயர் கொண்டவர்களாவது இருப்பார்கள். அவ்வளவு பிரசித்தி பெற்றப் பெயர் . இதில் எனக்கு இனிஷியல் ”த”(ஆங்கிலத்தில் D) வேறு. கூப்பிடும் பொதே ”டீ கீதா “ என்பார்கள். மரியாதை கொடிகட்டி பறக்கும். என் தாய் வழி தாத்தா தான் எனக்கு ஆசையாக பெயர் சூட்டினாராம். கீதா உபதேசத்தை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு கீதா என்று பெயர் சூட்டினாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நானே “கீதாஞ்சலி “ என்று சில காலம் கூறிக்கொண்டு அலைந்தேன். சப்பானி கதையாக யாரும் என்னை அப்பெயர் கொண்டு அழைக்கவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆங்கிலத்தில் அழைக்கும் போதாவது கீத்தா என்பார்கள். தமிழில் கீதா என்றால் எனக்கு அவ்வளவு கோபம் வரும். ”கீ” க்கு அழுத்தம் கொடுத்து” தா” வை அழுத்தம் இல்லாமல் கூறுவார்கள். “கீ”(சாவி) ”தா” என்று சிலர் பரிகசித்ததும் உண்டு. எப்படியோ சாகும் வரை கீதா தான் என் பெயர் என்று ஆகிவிட்டது.
சமீபத்தில் ஒரு தோழி அவரது வீட்டில் நடந்த நவராத்திரி பூஜைக்கு என்னை அழைத்திருந்தார். அவரின் பெயர் “அழகு நிலா”. பெயருக்கு ஏற்றவாறு பளீர் என்ற சிரிப்புடன் அழகாக இருப்பார். நிலாவே அழகு தான் அதற்கும் மேலே அவரின் பெற்றோர் அவருக்கு அழகு நிலா என்று பெயர் சூட்டி இருந்தார்கள். எப்படியெல்லாம் பெண் பிள்ளை பிறந்ததை கொண்டாடி இருந்தால் இப்படி ஒரு அழகான பெயரை சூட்டி இருப்பார்கள். எப்பொழுதும் தங்களின் மகள் பெளர்ணமி நிலவாய் ஜொலிக்க வேண்டும் என்று இப்படி பெயர் வைத்து இருப்பார்கள் போல.
அவர்கள் வீட்டிற்கு இன்னும் பல பேர் அன்று பூஜைக்காக வந்திருந்தார்கள். பூஜை முடிந்து போகும் போது ஒரு பெண்மணி அவரின் மகளை,”மஹாலக்‌ஷ்மி வா வீட்டுக்கு போலாம்” என்று அழைத்தார்கள். அக்குழந்தைக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். பட்டு பாவாடை உடுத்தி, அழகாக இரு பின்னல்கள் போட்டுக்கொண்டு அதில் மல்லிகை பூ வைத்துகொண்டு , கை நிறைய வளையல் அணிந்து கொண்டு, காலில் கொலுசு போட்டுக்கொண்டு ஒரு குட்டி மஹாலக்‌ஷ்மியாகவே இருந்தாள். . தாய் அழைத்ததை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் ஒரு ஐந்து முறையாவது அப்பெண்மணி அக்குழந்தையை,”மஹாலக்‌ஷ்மி, மஹாலக்‌ஷ்மி,” என்று அழைத்தார்கள். நான் உடனே அவரிடம்,”ஏங்க உங்க பொண்ண நீங்க மஹாலக்‌ஷ்மினு தான் கூப்பிடுவீங்களா? மஹா இல்லை லக்‌ஷ்மினு கூப்பிட மாட்டீங்களா,?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,”இல்லைங்க ஆசையா சாமி பேர வச்சோம் அதனால எப்ப கூப்பிட்டாலும் மஹாலக்‌ஷ்மினு தான் கூப்பிடுவோம்,”என்றார். கேட்கவே ஆசையாக இருந்தது. நம்மில் எத்துனை பேர் ஆசையாக வைத்த பெயரை முழுவதுமாக் சொல்லி அழைக்கின்றோம்? பாப்பா, புஜ்ஜி, பாப்பு, அம்மு, கன்னு, தங்கம்... இப்படி பல செல்லப் பெயர்கள் கூறியே அழைக்கின்றோம். எங்கள் அத்தைகள் இருவரையும் இன்று வரை என் தந்தை, பெரிய பாப்பா, சின்ன பாப்பா என்றே அழைப்பார்கள். மலர்கொடி, விஜயா என்ற அழகான பெயர்கள் அவர்களுக்கு உண்டு . ஆனால் கூப்பிடுவது எல்லாம் பெரிய பாப்பா ,சின்ன பாப்பா என்று தான். ஆண் பிள்ளை என்றால் தம்பி என்று கூப்பிடும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. தம்பி என்றே அழைப்பார்கள்.
இப்பொழுது இன்னொரு பழக்கம் நடைமுறையில் உள்ளது. கீதா என்றால் கீத்ஸ், ராம் என்றால் ராம்ஸ், இப்படி ஒரு ”ஸ்” போட்டு அழைப்பது. அது உரிமையோடு , செல்லமாக அழைப்பது என்பதே பொருள் . நண்பர்கள் இடையே நம் இயர் பெயர் சில சமயங்களில் மறைந்தே போகிறது. என் தோழி கூறுவாள், “ என் முழு பெயரைக் கூறி என் கணவர் என்னை அழைத்தால் அவர் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்,” பல வீடுகளில் இதை நாம் கேட்க முடியும். முழு பெயர் கூறி அழைக்கப்பட்டால் ஏதோ எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. மாட்டிக்கொண்டோம் என்றே அடித்து பிடித்து ஓடி வருவார்கள். ”ரிஷி கணேஷ்” என்று என் மகனை நான் கூப்பிட்டால், ”என்ன அம்மா?” என்று கேட்க மாட்டான்,”What did I do wrong?" என்றே பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவான். வெறும் ரிஷி ரிஷி என்று பத்து முறை கூவினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குமாதிரி தான்.
ஒரு குழந்தையை பெற்று அதற்கு ஆசை ஆசையாக சொந்த பந்தங்களைக்கூட்டி பெயர் சூட்டி மகிழ்ந்து பின்னர் அப்பெயரை கொண்டு அழைக்காமல் ,ஒன்று அப்பெயரை சுருக்கியோ அல்லது செல்லமாக கூப்பிடுகிறேன் என்று வேறு பெயரைக் கொண்டு அழைப்பதும் எவ்வளவு சரியான செயல் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. ”மஹாலக்‌ஷ்மி “ என்று வாய் நிறைய சலிப்பு இல்லாமல் இன்புற்று அழைத்த அந்த தாயை நான் வணங்குகின்றேன். எதிர்காலத்தில் என் பேரன் பேத்திகளை முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று முடிவிற்கு வந்துவிட்டேன்.

Monday, October 8, 2018

பவளமல்லி

Image result for pavalamalli flower



பவளமல்லி பல அழகிய நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் சுற்றுச்சுவர் பக்கத்தில் வீட்டுக்கு முன் புறம் அழகிய பவளமல்லி மரம் ஒன்று இருந்தது. அதற்கு என்னை விட கனமான , தூக்க முடியாமல் ஒரு இரும்பு வாளியில் தண்ணீர் தூக்கி ஊற்றுவேன். நெடிய மரம். என்னை விட எது உயரம் என்றாலும் அது எனக்கு நெடியதாகவே தோன்றும். விடியற்காலை பார்த்தால் பூத்துக்குலுங்கும் பவளமல்லி பூக்களை பார்க்கலாம். இதழ்களுக்கு நடுவேயும் அதன் காம்பும் பவள நிறத்தில் இருப்பதால் அதற்கு பவளமல்லி என்று பெயராம். தமிழ்க் கடவுள் முருகனுக்கும் பவளநிறத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக அம்மா கூறி கேட்டு இருக்கிறேன். முருகன் பவள நிறம் கொண்டவனாம்.

வெயில் வர வர பூக்கள் எல்லாம் உதிர்ந்து மரத்தடியில் வெள்லை விரிப்பில் செந்நிற பூ தையற் வேலைப்பாடு செய்தது போல் ஒரே அளவில் அழக்காக படர்ந்திருக்கும். பவளமல்லி மரம் இல்லா கோவில் நந்தவனவே இருக்காது. ரம்மியமான அதன் வாசத்திற்கு பாம்பு வரும் என்று சொல்லி அம்மா சாயங்கால வேளைகளில் அந்த மரம் இருக்கும் இடத்திற்கு போக விட மாட்டாள். பூக்களை பறிக்க எட்டவில்லை என்றால் கீழே உதிர்ந்து கிடக்கும் பூக்களை எடுத்து தண்ணீரில் அலசி நூலில் கோர்த்து மாலையாக்கி சாமிக்கு போடுவோம்.  மரத்தை குலுக்கி பூமழை பெய்யச்செய்ததும் உண்டு. என் தோழி ஒருத்தி மரத்தை குலுக்கி நூறு பூக்களை பொறுக்கி மாலையாக கட்டி சாமிக்கு போடுவாளாம்.அவள் கணக்கில் நூறு மதிப்பெண் பெற்ற ரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். காலம் கடந்து நானும் யோசித்ததுண்டு,”ஆஹா நாமும் மரத்தை குலுக்கி இருக்கலாமே என்று!”

பவளமல்லியின் விதையை எடுத்து பொட்டாக வைத்துக்கொண்ட தோழியரும் உண்டு. நம்மை சுற்று இருந்த இயற்கையே அப்பொழுதெல்லாம் விளையாட்டுப் பொருட்கள். சில சமயங்களில் கோவிலுக்கு போகும் பொழுது அர்ச்சனைக்கூடையில் உதிரி பூக்களை அப்படியே எடுத்துப் போவதும் உண்டு. கூடையில் இருக்கும் பவளமல்லி நம்மை பார்த்து செவ்விதழ் விரித்து சிரிப்பது போன்றே தோன்றும். அதற்கு அவ்வளவு மகிழ்ச்சி , தான் அந்த இறைவனை அலங்கரிக்கப்போகிறோம் என்று. கொஞ்சம் கர்வத்துடனும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அர்ச்சனைக்கூடையில், தேங்காய் , பழம், ஊதுபத்தி, சூடம், வெற்றிலை பாக்கு இவற்றிற்கு இடையில் பவளமல்லி அழகாய் புன் சிரிப்பு பூத்தப்படி மலர்ந்திருக்கும். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் கூட மனதிற்குள் சொல்ல முடியாத ஒருவித பூரிப்பு.

மார்கழி மாத மூடு பனி! காலை வேளையில் கோலம் போட எழுந்திருக்கும் போது இரவு முழுதும் தூங்க அந்த  நட்சத்திரங்கள் மரம் முழுதும் வந்து இறங்கியது போல பவளமல்லி மரம் காட்சி அளிக்கும். அந்த மூடு மனியும், எங்கயோ தூரத்தில் கேட்கும் ஐயப்பன் பாடலும், அந்த குளிர் காற்றும், பூத்துக்குலுங்கும் பவளமல்லி மரமும் , பூவாசமும், வாசல் நிறைய அழகிய வண்ணக் கோலம் போடும் பெண்களும், நேரம் ஆக ஆக பவளமல்லி மரத்தின் இலைகளின் ஊடே ஊடுறுவும் காலை கன்னி வெய்யிலின் ஒளிக்கீற்றும்....... ஆஹா என்ன ஒரு ரம்மியம் மனதிற்குள்ளே!! மூக்கு நுனியில் அதன் வாசம் உரசிவிட்டு கடந்து செல்கிறது........

Wednesday, September 26, 2018

தொட்டாச்சிணுங்கி




தொட்டாச்சிணுங்கி
துழாவும் பார்வை
அனு அனுவாய்
துளைக்கும் போதும்,
சுடச் சுடச்
தீயினை கக்கும்
வார்த்தையினை
காதினிலே
கேட்கும் போது,
தேவையான நேரத்தில்
தேவையில்லா
அர்த்தமற்ற
மெளனம்
நிலவும் போதும்,
உரிமையில்லா
விரல் நுனி
உரிமையேந்தி
உரசும் போதும்,
கூனிக் குருகி
கூட்டுக்குள் நத்தையாய்
தன்னை சுருக்கிக் கொள்ளும்
ஒவ்வொரு பெண்ணும்
தொட்டாச்சிணுங்கி தான்.

Sunday, September 16, 2018

ஓவர் வெட்டி



இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் காலை கணவரை மீன் வாங்க அனுப்பிவிட்டு மீன் குழம்பு வைக்க தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தேன். சின்ன வெங்காயம் குழம்புக்கு வேண்டும் என்று உரித்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு ஞானோதயம் வந்தது. மேலே இருக்கும் வீடியோவை எடுத்தேன். ”ஓவர் வெட்டி” என்ற தலைப்பில் அதை ஒரு பத்து நண்பர்களுக்கு மேல் அனுப்பி வைத்தேன். எப்படித்தான் react செய்கிறார்கள் என்று பார்ப்போமே என்று. எவ்வளவு மொக்கை forward எல்லாம் நமக்கு வருகிறது. நாம் அடையும் இ(து)ன்பத்தை மற்றவரும் பெறட்டுமே என்ற அல்ப சந்தோஷம். என் விடியோவை பார்த்துவிட்டு ஒரு நாலு பேராவது கோபப்படுவார்கள் என்று பார்த்தால் எனக்கு ஏமாற்றமே. முக்கால்வாசிப் பேர் கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிப்பது போல் emoticon அனுப்பி இருந்தார்கள். விடியோவை ரசித்ததால் அதை அனுப்பினார்களா இல்லை, தாங்கள் ஏமாந்ததன் அடையாளமாக அனுப்பினார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு மொக்கையான வீடியோ என்று எனக்கே தெரியும். சிலர் சூப்பர் என்று வேறு அனுப்பி இருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

சைவ நண்பர்கள்,”சட்னி செய்ய உரிக்கிறாயா?” என்று கேட்டார்கள்.அசைவ நண்பர்களோ,”மீனாட்சியா, காமாட்சியா?”என்று கேட்டார்கள். நாளை வேறு புரட்டாசி மாதம் பிறக்கிறது இல்லையா? நம் ஊரில் கறிக்கடை, மீன்கடைகள் கலைகட்டும். என்னவோ இன்று ஒரு நாள் சாப்பிடப்போகும் அசைவம் அடுத்த ஒரு மாத காலம் வரை அவர்கள் வயிற்றிலேயே தங்கிவிடப்போவது போலவும், அந்த ருசி ஒரு மாதத்திற்கு நாக்கிலேயே இருப்பது போலவும் ஒரு நினைப்பு.

ஒரு சில அப்பாவி நண்பர்கள்,”வெங்காயத்தை நீ உறிக்கும் முன்பே தண்ணீரில் போட்டு எடுத்து உறித்தால் கண்களில் கண்ணீர் வராது,”என்று tips கொடுத்தார்கள். என் அம்மா அப்படித்தான் செய்வார்கள். எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. உறிக்கும் பொழுது அந்த தோல் என் விரல்களில் ஒட்டிக்கொள்வது எனக்கு பிடிக்காது. என் அம்மாவிடம்,”ஏம்மா வெங்காயத்த உரிச்சுட்டு தண்ணில கழுவலாம்ல எதுக்கு தண்ணில போட்டு உறிக்க சொல்ற,”என்று கேட்டால் அதற்கு அவர்,”அத எங்க எங்க கொட்டி அள்ளிட்டு வராங்களோ? அந்த திருவள்ளுவர் தியேட்டருக்கு பின்னாடி எல்லாம் அந்த அழுக்குள கொட்டி வச்சு இருக்கறத பாத்து இருக்கேன், கருமம். நீ நான் சொல்ற மாதிரி செய், “என்பார்கள். அந்த காலத்தில் நம் ஊர் திரையரங்குகளுக்கு பின் இருக்கும் சுவர் எதற்கு என்று உங்களுக்கே தெரியும். இன்றும் வெட்டவெளி கழிப்பிடம் என்பது நமது நாட்டின் பிறப்புரிமை மாதிரி. காய்கற்களின் சுத்தம் பற்றி நமக்கு இப்போ அந்த கவலையே இல்லை . எங்கு கொட்டி எப்படி அள்ளுகிறார்களோ நமக்கு எல்லா காய்கற்களும் makeup போட்டு தான் கடைகளில் கிடைக்கிறது. அந்த makeup நஞ்சா இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை. அந்த பளபள makeupற்கு நாம் மயங்கி விடுகிறோம்.

என் மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது நான் கோழிக்கறியை கழுவுவதை பார்த்துவிட்டு,”அம்மா என் தோழிகள் எல்லாம் இப்படி கழுவவே மாட்டாங்க. அப்படியே packet la இருக்கற chicken எடுத்து சமைப்பாங்க. நான் கேட்டப்ப அந்த chicken எல்லாம் நல்லா கழுவி pack பண்ணது கழுவவேண்டிய அவசியம் இல்ல. அப்படி கழுவுனா kitchen sink எல்லாம் bacteria ஒட்டிக்கும்னு சொன்னாங்க,”என்றாள். அது என்ன logic என்று எனக்கு புரியவில்லை. எனக்கு அதை கேட்டவுடன் குமட்டிக்கொண்டு வந்துவிட்டது.”நீ சமைக்கும் போது ஒழுங்கா கழுவிட்டு சம சரியா,”என்றேன். என் அம்மா மீன் கழுவுவதை பார்த்துவிட்டு என் அப்பா,”உங்க அம்மா மீன கழுவு கழுவுனு கழுவி அதோட வாசத்தையே எடுத்துட்டு கத்திரிக்கா மாதிரி ஆக்கிடுவா,”என்பார். பாட்டி அப்படி, பேத்தி இப்படி!!

சில நண்பர்கள்,”சைனாவிலிருந்து வரும் genetically modified வெங்காயத்தை உறிக்கும் பொழுது கண்ணீரே வராது,”என்றார்கள். ஒருவர் கூட “உனக்கு வேற வேலையே இல்லையா, இப்படி வெட்டியா ஒரு வெங்காயத்த உறிக்கறத வீடியோ எடுத்து போடுறியே போடீ வெங்காயம்,”என்று என்னை திட்டவே இல்லை.

என் நெருங்கிய தோழியிடம் “சுஜா, ஒருத்தர் கூட வீடியோவை பாத்துட்டு திட்டலடி, எல்லாரும் சிரிக்கற மாதிரி emoticon அனுப்பி இருக்காங்கடி. அவ்வளவு வெட்டியாவா இருக்காங்க எல்லோரும்?” என்றேன். அதற்கு அவள்,”நீ வெட்டியா அனுப்பின வீடியோவ பாத்துட்டு ஒனக்கு பதில் அனுப்பினவங்கள வெட்டியா இருக்காங்களானு கேக்கறியே, அவங்க அனுப்பின பதில பத்தி இப்போ இவ்ளோ நேரம் discussion பண்ற நானும் நீயும் எப்படிப்பட்ட வெட்டியோ வெட்டி ராணிகள்னு ஒனக்கு புரியுதா? இப்படிதான் பல பேர் திரியராங்க. கவலப்படாத. ,”என்று நச்சென்று நடுமண்டையில் வார்த்தைகளால் கொட்டினாள்.

எப்படி உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்னும் இல்லாமல் போகிறதோ அப்படித்தான் வேண்டாத பல விஷயங்களை கைதொலைபேசியிலும், சமூக வளைதளங்களிலும் பார்க்க பார்க்க நம் மூளைக்கும் சிந்திக்கும் திறன் இல்லாமல் போகிறது. அதோடு இல்லாமல் நாம் தேவையில்லாமல் உரித்து உரித்து போடும் நேரமும் விரயமாகிறது.......கடைசியில் நமக்கே தெரியாமல் காலாவதியான காலத்தை நினைத்து நமக்கு மிஞ்சுவது கண்ணீரே....

Friday, September 14, 2018

ஆசை 1


Image result for pottery making pics

ஆசை 1
பிள்ளையார் சதுர்த்தியும் வந்து போய்விட்டது. பிள்ளையாருக்கு வீடு தோறும் இன்னும் இரண்டு நாட்களுக்கு ராஜ உபசாரம் நடக்கும். பிறகு அவரையும் கரைத்து விடுவார்கள். கரையாதவர்கள் மனிதர்கள் தான்--மனதளவில் .
களிமண் பிள்ளையாரை பார்க்கும் பொழுது என் நீண்ட நாள் ஆசை ஞாபகத்திற்கு வந்தது. சிறு வயதில் கிராமத்திற்கு போகும் பொழுது குளத்தில் இருந்து களிமண்ணை எடுத்து வந்து சட்டி , பாணை செய்து விளையாடியதுண்டு. களிமண்ணிலேயே தோசை கல், இட்லி தட்டு, டம்ளர், என்று செய்து காயவைத்து அழகு பார்ப்போம். இட்லி தட்டில் வைக்க களிமண் இட்லி கூட செய்வோம். அப்பொழுதிலிருந்தே எனக்கு குயவர்கள் வீட்டிற்கு சென்று பானை செய்யவேண்டும் என்று ஒரு ஆசை.
பானை செய்வதை விட அந்த மண்ணில் முழங்காலுக்கு கீழ்வரை மூழ்குமளவிற்கு மிதித்து பார்க்க ஆசை. அந்த மண்னை இரண்டு கை கொண்டும் குழைய குழைய பிசைய ஆசை. முழங்கை அளவிற்கு பூசிய களிமண்ணை மறுகை கொண்டு வழித்து போட ஆசை. இப்பொழுது தான் எங்கு பார்த்தாலும் களிமண் face pack, களிமண் soap, களிமண் paste, என்று விற்க கிளம்பிவிட்டார்களே. அதுமட்டுமா அடுப்பு கரித்துண்டுக்கும் அதே மெளசு. charcoal face pack, charcoal paste என்று விற்கிறார்கள். அழகிய ஓவியம் கூட இப்பொழுது charcoal painting, drawing என்று வந்துவிட்டது.
அது மட்டுமா பத்து விரல்களை அந்த குயவரின் சக்கரத்தில் பதித்து பானை வடிவமைக்கவும் ஆசை. நம் கைகளை வைத்து அழுத்தி பிடிக்கும் பொழுது அந்த சக்கரம் அழகாக சுத்துவதை பார்ப்பதில் ஓர் ஈர்ப்பு. பிள்ளையார் பிடிக்க அது குரங்கானது போல் ஆனாலும் பரவாயில்லை. இதை என்றாவது ஒரு நாள் என் வாழ்நாளில் செய்து பார்த்தே ஆகவேண்டும். முன்பெல்லாம் வடிவம் இழந்த பானைகளை மீண்டும் அழகிய பானை வடிவம் வரும் வரை வடிவமைப்பார்கள். இப்பொழுது அப்படி இல்லை. எந்த வடிவம் ஆனாலும் அதற்கு அழகாக வண்ணம் பூசி கார் விற்பனைக்கூடத்தில் இடுப்பை நெளித்துக்கொண்டு நிற்கும் பெண்ணைப்போல் அழகாக நிற்கவைத்து விடுகிறார்கள். எனவே எனக்கு அழகான பானைதான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கூடிய விரைவில் என் ஆசையை தீர்த்துக்கொள்வேன்.
இந்த கால பிள்ளைகளுக்கு இப்படி எல்லாம் ஆசை இருப்பதாக தெரியவில்லை. இல்லை நாம் தான் அதை எல்லாம் அவர்களுக்கு காண்பித்து கொடுப்பது இல்லையா? எல்லோர் கைகளிலும் தான்
கைத்தொலைபேசி தவழ்கிறதே. அவர்கள் இரண்டு கட்டைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி விளையாடுகிறார்கள். மண்னை பிசைந்து விளையாடி செலவில்லாமல் நம் motor skills வளர்த்துக் கொண்டோம். இன்றோ motor skill development என்பதற்காக பிரத்தியேக விளையாட்டுப் பொருட்களையும், அதற்கான தேர்ச்சி மையங்களுக்கும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அலைகிறோம். மீண்டும் மீண்டு வருமா அக்கால விளையாட்டுகளும், அந்த குழந்தை பருவமும்???

Saturday, September 8, 2018

The trail on my face!!

The trail on my face!!
Dark clouds spread across the sky.
Small droplets of rain falling on the ground.
Pleasant smell of grass mixed in the breeze.
Unfolded Umbrella held tight in one hand,
not to let it fly away.
A black handbag hanging from the shoulder,
held with the other hand to control its swing.
Footsteps kept with caution and care,
not to slip a bit or have a fall.
Same clouds , same rain, same smell of grass,
did I experience many many years back,
some time while cycling back home from school.
with one hand holding the hand bar
and the other hand wiping away the rain drops
that fell on my eyebrows and slid into my eyes.
The rain drops did wet my cheeks and chin.
Ran through my neck and wet me deep within.
Chatting along the way,
unmindful of the rain I cycled back home
with ease and no pain.
No fear of slipping or falling.
Same clouds, same rain, same smell of grass
did I experience ,
sometime while walking back home from school.
Books hugged tight and close to my chest
like when holding your loved ones with love and care.
Not to let them get wet and tear apart.
Where they held tight to keep them safe
Or to keep myself safe from prowling eyes?
Never did I care of getting wet or falling sick.
Walked along with friends joking and laughing.
Today When the floor is wet
My toes hold my slippers tight.
My eyes looks for non skid floors and tiles.
Each step is taken after much calculation.
My pace is slow and each step leaves a deep foot print.
My eyes look for pits and holes.
Wet leaves and flowers grab my attention,
warning me to walk with caution.
Is this some natural instinct or the over precaution
that comes with age?
My pace may be slow,
My steps may be deep,
But still I enjoy the trail that rain leaves on my face.........

Thursday, September 6, 2018

காலச் சக்கரம்

........





காலச் சக்கரம்
அரிசியில் கல் இருக்கிறதா என்று பார்க்க கண்களுக்கு கண்ணாடியின் உதவி வேண்டும் வயது வந்தாகிவிட்டது. நினைத்துக் கூட பார்க்கவில்லை இது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று. இப்பொழுதுதான் அம்மா அரிசியில் கல் பொறுக்க கண்ணாடியை எடுத்து வா என்று கூறியது போல் உள்ளது. அதற்குள் நான் என் கண்ணாடியை தேடும் நேரம் வந்துவிட்டது. அம்மா கண்ணாடி போட்டு அரிசியை துழாவியதை ஒவ்வொரு முறை பார்த்த பொழுதும் மனதுக்குள் ஒரு திக் வந்து மறைந்ததுண்டு. இன்று என் மகளும் அதே அதிர்ச்சியில் உரைகிறாள். காலச் சக்கரம் வேகமாகவே சுழல்கிறது. என் தாய் கடந்து வந்ததை நான் கடப்பதைப் போன்று அவளும் நான் கடந்து வந்ததை கடக்கும் நாள் வரும். அக்காலத்திற்குள் என்னால் முடிந்த கற்களை நான் பொறுக்கியாக வேண்டும் விரைவாக..













Mom and Rishi

Mom and Rishi #
Mom made momos for dinner and with much excitement called Sruthi and Rishi to enjoy them. When she tried to take it out of the steamer she had some difficulty in doing it .Still she managed to get it out.She served for both of them and waited for the feedback.
Mom: Sruthi how does the momos taste? only thing is it got stuck a little bit in the steamer.
Sruthi: It's ok mama. It tastes good.
Mom: Rishi , how about you? do you like them?
Rishi: Ya mama it tastes good but I have a doubt. why are the MOMOS BOTTOMLESS?
Mom stared at him for a second and shook her head with disappointment.
Mom: That's because I tried making them with spring roll sheets and not wanton sheets. May be I should have used some butter paper .
Rishi: It is ok mama. Though they are bottomless I can scoop it and eat . Just one suggestion.
Thinking that Rishi was going to give her a tip about how to make better momos,
Mom: What is it Rishi?
Rishi: Next time when you try to make momos and if they turn out to be bottomless just dont call them momos. Name them as CHINESE CHAPATHY. Anyways we are going to scoop them and eat right?????
Mom just sat there for few second as if in meditation. Rishi walked away with his empty plate. Anyways mom was in a way happy that the bottomless momos were enjoyed by her kids.

Tuesday, August 28, 2018

ஆற்றின் அழுகுரல்!

ஆற்றின் அழுகுரல்!
மணலை 
அள்ளி அள்ளி
மலடாக்கி விட்டாய்
எங்களை,
நாங்கள் விடும்
கண்ணீரே இன்று
செந்நீராய்
ஓடுதிங்கே
எங்கள் கண்ணீரில்
உப்பு இல்லையென்றா
கடல் நீரில்
கலக்கவிட்டாய்??
எங்கள் கண்ணீரும்
வற்றிபோகும்
நாள் வெகுதூரம்
இல்லையடா
மானிடா!
இதை உணர்ந்தாவது
எங்களை
மாணபங்கம் படுத்தாமல்
விட்டுவிடடா
மானிடா!!!!

Friday, August 17, 2018

விட்டில் பூச்சி

சந்தோஷங்கள் 
விட்டில் பூச்சியாய்
சில மணித்துளிகளில்
மறைந்துவிடுகின்றது!
சங்கடங்களோ
சாகும் வரை
புற்றீசல் போல்
பெருகி நம்மை
வாட்டி வதைக்கின்றன......

சுதந்திர விற்பனை......

சுதந்திர விற்பனை......
அடிமையாய்
வாழ்ந்த போதும்
அடக்குமுறையில்
அடிப்பட்ட போதும்
உணரவில்லை!
கையடக்க கருவி
ஒன்று வந்தபின்னே
யாவரின் அந்தரங்கம்
வலைஉலக அரங்கினிலே
அணு அணுவாய்
ஆராயப்பட,
எம் தனிமனித சுதந்திரம்
நித்தம் இங்கே
ஓர் சந்தையில்
விற்பனையாகுதய்யா!!!!!

மழையே!!

மழையே!!
மனித மனதின்
வக்கிரத்தை சுத்தமாக
துடைத்து எடுக்கவா
இப்படி ஆத்திரமாய்
ஆர்பரிக்கிறாய்?
தடம் மாறிய எங்கள்
வாழ்வை
நன்னெறி பிறவாமல் தடுக்கவா
நீ பிரவாகமாகி
வழி மாறி ஆக்ரோஷமாய்
தலைவிரித்தாடுகிறாய்?
உன்னை வேண்டி
விரும்பியவர்களை
வேரறுத்து வெறுக்கச்
செய்துவிட்டு
நீ ஏன் இப்படி
போகும் திசையறியாது
அல்லாடுகிறாய்????
படித்த பாடத்தில்
படிப்பினை கற்றோம்.
இனி உன் வழி
நாங்கள் குறிக்கிடமாட்டோம்
அமைதியாய் நீயும்
உன் தாய் மடி சேர்ந்து
கண்ணுறங்கு மழையே!!

Sunday, August 12, 2018

கலைஞர் வாழ்த்து மடல்

வள்ளுவனை நாங்கள்
கண் கொண்டு கண்டதில்லை!
நீயே வள்ளுவனாய் 
எங்களுக்கு காட்சியளித்தாய்!
வள்ளுவனும் உன்னுருவில்
மறுபிறவி எடுத்தானோ ?
தமிழாண்ட வள்ளுவனுக்கோர்
கோட்டைக் கட்டி
அழகு பார்த்தாய்!
எம்மொழியை செம்மொழி ஆக்கினாய்!
ஊனமுற்றோர் என்ற ஓர்வார்த்தை அகற்றி
மாற்று திறனாளிகளாய்
மறுபிறவியளித்தாய்!
பிறப்பால் எப்பால் என்று குழம்பியவருக்கு
திருநங்கை என்று பெயர் சூட்டி
மதிப்பளித்தாய்!
தமிழ்மொழியும் வள்ளுவனும்
வாழும் நாள் வரை
நீயும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டே இருப்பாய்!!

Friday, August 10, 2018

சிறு அடி!

சிறு அடி!
ஒரு வித்தையை கற்கயில்
நான் ஒர் குழந்தை!
முதல் அடி பயம் கலந்த தடுமாற்றமே!
இரண்டாமடி எடுக்கையில்
விழவும் செய்கிறேன்!
மூன்றாம் அடி எடுக்கையில்
காயப்படுகிறேன்!
என்னை கைப்பிடித்து, தட்டிக்கொடுத்து
அன்பாய் அரவனைத்து
வழிநடத்துவோர் பலர்.
சிலரோ குட்டி குட்டி
எழவிடாமல் கால் டற செய்கின்றார்.
அன்பு மொழி பேசி ஊக்குவிப்பார் பலர்.
செம்மொழியாம் எம்மொழியில்
தேடித் தேடி அலைந்து
தீஞ்சொற்கள் சில பொருக்கி
வீசி எறிந்து சுடப்பார்ப்பார் சிலர்.
என் அடி வலி அறியாதார்
எள்ளி நகையாடுகின்றார்!
அதை தூக்கி எறிந்துவிட்டு
என்வழி நான் நடக்கின்றேன்!


நான் ஒரே இடத்தில் நின்றுவிட்டால்
பாசிபடர்ந்த குட்டைநீர் ஆவேன்.
மலையையும், காட்டையும் தாண்டி
கற்களிலும், முற்களிலும் உரசி
ஓடிக்கொண்டே இருந்தால்
தெளிந்த ஆறாவேன்!

நான் கடல் சேறும் ஆற்று நீர்!
என்றைக்காவது ஓர் நாள்
அப்பெரும் கடல் சேறுவேன்.
என் ஓட்டம் மெதுவாக இருக்கலாம்
ஆனால் அதன் உயிரோட்டம் நின்றுவிடாது!
நான் இடறி விழுகையில்
கரம் நீட்டி தூக்கும்
தாய் மடி சேர்வேனேத் தவிர
முகமூடி அணிந்து
உலாவரும் பேயிடம்
தஞ்சம் புகமாட்டேன்!
கால் ஆட்டி தூங்காவிட்டால்
சவமென்று குழிசேர்க்கும்
மாந்தர் தம் மத்தியிலே
மனிதம் தேடுவது மடமை!
பயம் என்று இல்லையெனில்
இடர் என்பதும் மறைந்தே போகும்!
நான் ஒன்றும்
தடம்பதிக்க விரும்பவில்லை,
தடமாக ஆசையில்லை!
எத்துனை முறை
விழுந்தாலும் வீழ்ந்தாலும்
ஓய்வெடுக்க மனமில்லை!
வாழும் நாள் வரை
சிறு அடி
எடுத்து வைத்துக்கொண்டே இருப்பேன்
வாழ்தலின் நினைவாக!!

Wednesday, May 16, 2018

Mom and Rishi

Mom and Rishi
Rishi was getting ready for his exams. He could smell pasta being cooked. He wanted to make sure that his sense of smell would not fool him. He enters the kitchen.
Mom: Rishi are you ready to leave?
Rishi: Yes ma. BTW what are you making?
Mom: I am making Pasta.
Rishi: Make sure you add extra cheese ok
Mom:I have added enough cheese Rishi.
Rishi: Whenever you say you have added enough cheese I always ask you to add "more cheese".
Mom: I have already dumped the whole cheese into it Rishi.
Rishi: Mama please add more cheese. Make sure you don't spoil the relationship between me and Pasta.
Mom: WHAAAAT????????
He could have told straight on her face that Pasta would not taste good without extra cheese. Or that her pasta tasted bad with less cheese. Mom never knew about the relationship between Rishi and Pasta. Two days back on Mother's day she shamelessly went around the house informing that it was mother's day. She went to the extent of asking him to surprise her to prove that the mother son relationship was too strong. That ship capsized instantly. But today the relationship between Rishi and Pasta was made strong by the binding cheese. mmmmmmmmm.

Monday, May 14, 2018

ரசித்து கேட்டது:

ரசித்து கேட்டது:
“எங்க அம்மாச்சி ஒன்னு கீதா, சளி புடிச்சா வித்தியாசமா ஒரு வைத்தியம் பண்ணுண்டீ. நல்லா திக்க்க்கா, கெட்ட்டியா தேங்காப் பால எடுத்து வச்சுக்கும். நல்லா திக்க்க்கா காப்பி டிக்காக்‌ஷன் போடும். அந்த கெட்ட்டி தேங்காப்பாலுல இந்த திக்க்க்கா போட்ட காப்பி டிக்காஷன சுட சுட சுட ஊத்தி கலந்து குடிக்க சொல்லும் பாத்துக்க. நெஞ்சு சளி முழுசா வெளில வந்துடும். அப்புறம் இன்னொரு வைத்தியம் பண்ணும் பாரு. நல்லா காஞ்ச செகப்பு மொளகாவ ஒரு அஞ்சாரு எடுத்து நல்ல கொர கொர கொரனு அம்மில வச்சு அரைரைக்கும். சுட சுட வடிச்ச சாதத்துல அத போட்டு ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணய ஊத்தி பெசஞ்சி உருட்டி குடுத்து முழுங்க வைக்கும் பாரு. அத்துன சளியும் மூக்கு, வாய் வழியா வெளில வந்துடும். “தோழி சொல்ல கேட்டது.
. கேட்க கேட்க அந்த தேங்காய்ப்பாலின் கொழ கொழ தன்மை நாக்கில் ஒட்டியது. திக்கான காப்பி டிக்காக்‌ஷன் கருப்பாய் பயமுறுத்தியது.கொர கொர என்று அரைத்த மிளகாய் என் கைகளை எரியச் செய்தது.சுட சுட வடித்த சோற்றின் ஆவி என் கை விரள்களை சுட்டுத் தீர்த்தது. மொத்தத்தில் அவள் சொல்லி முடித்த போது எனக்கு உடல் முழுதும் வேர்த்து ஜுரம் விட்டது போல் இருந்தது.

ரசித்து பார்த்தது:

ரசித்து பார்த்தது:
நேற்றும் சாங்கி ராமர் அழகாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தார். என்றைக்குமே அவரின் அழகிற்கு குறைவில்லைதான். நேற்று பிரதோஷம் ! பிள்ளையார் , உயர்ந்து நிற்கும் ஹனுமன், சிவன், பார்வதி, என்று எல்லோருக்கும் அழகான அலங்காரம். ஒவ்வொரு சந்நிதியாக கும்பிட்டபடி ராமர் சந்நிதிக்கு வந்தேன். அங்கு கண் மூடி ஓரிரு நிமிடங்கள் என் பிராத்தனையை முடித்து விட்டு கண் திறந்து பார்த்த பொழுது என் எதிரில் ஒரு முப்பது , முப்பத்தி மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவர் பார்க்க சிரித்த முகமாக , அழகாக இருந்தார். மேல் பாதி உடம்பு சற்றே முன்னோக்கி குனிந்தும் , குனியாதாது மாதிரியும், இரு கரங்களையும் குவித்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. அது அவரின் கண்களில் பிரபலித்தது. உதடுகள் ஏதோ முனுமுனுத்தபடி இருந்தன. அருகில் அவரின் கணவர் அவர்களின் இரண்டு வயது குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
இந்த பெண்மணி சிரித்தபடியே ராமரை பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் ஏதும் கோரிக்கை வைக்கவில்லை. அவரின் கண்களில் ஒரு பரவச நிலை தெரிந்தது. ராமரை அவர் ஆசையாக பார்த்தார். அவர் ராமரிடம், “ராமா உன் கண்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது? உன் உதடுகள் எப்படி இப்படி ஒரு வசீகரிக்கும் புன்முறுவல் பூக்கின்றது? உன் உடையின் நிறம் மிக அழகாக உள்ளது, உன் பூ மாலையும், பூ அலங்காரமும் கண்களுக்கு விருந்தாய் இருக்கிறது’” என்று ராமரின் அழகை அவருக்கே வர்ணித்தது போல் இருந்தது. அப்பெண்மணியின் உதட்டில் தவழ்ந்த புன்னகை சிறிதளவு கூட மாறவில்லை. அருகில் யார் இருக்கிறார்கள், தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலை இல்லை. அவர் பார்வையில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் சிரித்த முகத்துடனே ராமரை கண்கொட்டாமல் பார்த்து , ராமர், சீதா, லக்ஷ்மனன், ஹனுமன் சகிதமாக அனைவரின் அழகையும் தனக்குள் உள்வாங்கி மனதில் நிறுத்திக்கொண்டு மகிழ்வாக அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.அவருக்கும் , அந்த ராமருக்கும் இடையே இருந்த உறவை என்னால் காணமுடிந்தது. நானும் அவரைப்போலவே சில நிமிடங்கள் மனதில் இருந்த எல்லா எண்ணங்களையும் துடைத்துவிட்டு ராமரின் அழகை ரசித்தேன்.
எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் பலர் , நான் உட்பட ஒரு வித கோரிக்கையுடனேயோ அல்லது பிராத்தனை பலித்ததுக்கான நன்றியை தெரிவிப்பதற்காகவோதான் செல்கிறோம். சில நேரங்களில் கடவுளிடம் சண்டைப் போடுவதற்கும், கோபித்துக் கொள்வதற்கும் கூட கோவிலுக்கு செல்பவர்கள் இருக்கிறார்கள்..சந்நிதியில் அழுபவர்களை பார்த்து இருக்கிறேன்.சாமி வந்து ஆடியவர்களை பார்த்து இருக்கிறேன். சாமியை பார்த்து மனம் உருகி பாடுபவர்களை பார்த்து இருக்கிறேன் . ஆனால் சத்தமின்றி மெளனமும் இன்றி ஒருவித ரகசிய உடன்படிக்கையில் கடவுளுடன் உறவாடிஅந்த அழகிய உடல் மொழியை யாரிடத்திலும் நான் கண்டதில்லை .நான் சில கோவில்களில் நூற்றியெட்டு சுற்று சுற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன். மாரதானில் ஓடுபவர்களைப்போல் கடமைக்காக சுற்றுவார்கள். பக்கத்து வீட்டுக்காரன் விரதம் இருக்கிறார் என்று விரதம் இருக்கிறவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். என் குடும்பத்தாருடன் நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் எனக்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தான் கொடுப்பார்கள். அதற்குள் நான் ஜெட் வேகத்தில் என் “டெம்பிள் விசிட்டை” முடித்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் இன்று நான் பார்த்த அந்த பெண்மணி அமைதியாக , எந்த வித வேண்டுதலும் இன்றி ராமரின் அழகை ரசிப்பதற்காகவே கோவிலுக்கு வந்தது போல் இருந்தது. ”சாமி கும்பிடும்போது கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். நன்றாக கண் திறந்து சாமியை பார்த்து கும்பிடுங்கள்”’ என்று நான் எங்கோ படித்திருந்தேன். நான் பொதுவாகவே சாமி கும்பிடும்பொழுது கண்களை மூடிக்கொள்வேன். அப்பொழுது தான் மனம் ஒரு நிலையில் இருக்கும் . வேறு எங்கும் வேடிக்கை பார்க்காது என்பதற்காக அப்படி செய்வேன். இப்பொழுதெல்லாம் ஒரிரு நிமிடங்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டே சாமி கும்பிடுகிறேன். அப்படி செய்யும் பொழுது ஒருவித நிறைவு. அந்த பெண்மணியைப் போல் அமைதியாக கடவுளின் அழகை பார்த்து ரசித்து , அதை அவரிடமே பகிர்ந்து கொண்டது கிடையாது. இனி கோவிலுக்கு போகும் பொழுது கடவுளை அங்குலம் அங்குலமாக ரசித்து பார்க்க வேண்டும் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன். மனிதன் மட்டுமல்ல கடவுளும் அவரின் அழகை வர்ணித்து “நீ அழகாய் இருக்கிறாய்”, என்று கூறினால் மயங்காமல் இருக்க வாய்ப்பில்லை!! ராமரின் உருவம் மனதில் அன்று பதியவில்லை. அந்த பெண்மணியின் அமைதியான தோற்றமும், ரசிக்கும் கண்களும், புன்முறுவல் பூத்த இதழ்களும், கூப்பிய கரங்களுமே என் மனதில் அன்று பதிந்தது!!

Saturday, May 5, 2018

வாசிப்புப் பயணம்


ஒரு வழியாக இன்று நூலகம் சென்று வந்தேன். எனக்காக நூலகம் சென்று எத்துனை வருடங்கள் ஆகின்றன என ஞாபகம் இல்லை. வாசித்தல் பொருத்த வரை என் வாழ்வில் திமு , திபி என இரண்டு காலமாகப்  பிரிக்கலாம். இந்நேரம் நீங்கள் திமு, திபி க்கு அர்த்தம் கண்டு பிடித்திருப்பீர்கள். ஆமாம், திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் தான். திருமணத்திற்கு முன் பொட்டலம் கட்டி வரும் காகிதம் கூட விடமாட்டேன். எல்லாவற்றையும் படித்துவிட்டுத் தான் கிழிப்பேன்.திருமணத்திற்குப் பின் எந்த காகிதம் கிடைத்தாலும் கிழித்து துடைப்பதோடு சரி.

குழந்தைகள் என்று ஆனப்பின் அவர்களை நூலகம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். அவர்களோடு சேர்ந்து Fairy tales  முதல், bedtime  கதைகள், தாமஸ் எஞ்சின் கதைகள், Barbie கதைகள் , விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், குழந்தைகளுக்கான, இராமயணம், மகாபாரதம் என்று அவர்களுக்கு பிடித்தமான புத்தகங்களுடனே என் பயணமும் தொடர்ந்தது. எனக்கென்ற விருப்பு வெறுப்பு இல்லாமல் போனது. அவர்களுக்கு படித்து காண்பிப்பதிலேயே என் வாசித்தல் ஆசை நிறைவேறியது. ஒரு சில வருடங்களில் அவர்களாகவே படிக்க ஆரம்பித்தப் பின் என் வாசித்தல் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கணவரும், குழந்தைகளும் புத்தகப் புழுக்கள். குழந்தைகளை புத்தக உலகிற்கு அறிமுகப்படுத்தி அதில் அவர்களுடன் சில வருடங்கள் பயணித்த என்னால் அவர்களைப்போல் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக முடியவில்லை. காரணம் அவர்களுக்கு நினைத்த பொழுது சாப்பாடும் மற்ற பிற தேவைகளும் தானாக நடந்தது. எனக்கு அப்படி இல்லை. கணவர் கூறுவார், “வீட்ல இவ்ளோ புக்ஸ் இருக்கு இல்ல படிச்சா என்ன?” என்று. அதற்கு நான்,” நான் படிக்க ஆரம்பிச்சா வீட்டு வேலையை யார் செய்வாங்க? நீங்கல்லாம் போடுற குப்பையை யார் சுத்தம் செய்யறது? யார் சமைப்பா, துணி துவைப்பா, பாத்திரம் கழுவா?”என்று  என் இராமயணத்தை  ஆரம்பிப்பேன். ஏண்டா இவளை வாசிக்க சொன்னோம் என்று அவரும் பேசாமல் இருந்து விடுவார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் ஒரு புத்தகப் புழு. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது. பல நாட்கள் வேலை முடிந்து வீடு வரும் அப்பா கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு,”கீதா நீ வந்து சாப்பாடு எடுத்து வைமா. உன் அம்மா IAS examக்கு  படிக்கிறா,” என்று கிண்டலும் கோபமுமாக கூறுவார். பல நாட்கள் பால் பொங்கியதும், சட்டி காய்ந்து தீய்ந்த கதைகளும் உண்டு. என் அம்மாவால் அப்படி புத்தகத்துள் லயித்து போய்விட முடியும். எங்கள் வீட்டுக்கு இப்பொழுது வந்தாலும் என் கணவர் அம்மாவிற்கென்று புத்தகங்களை எடுத்து கொடுப்பார். இருவரும் பேசும் ஒரே பொது விஷயம் புத்தகங்களைப் பற்றியதே. ஆனால் என்னால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. என்னை ஒரு பெரிய குடும்ப இஸ்திரியாக நான் காட்டிக்கொள்ள முற்படுகிறேனா??அப்பொழுதெல்லாம் புத்தகம் ஒன்றே பிரதான பொழுது போக்கு அம்சமாக இருந்தது. இப்பொழுதுதான் ஆயிரம் பொழுது போக்கு அம்சங்கள் கொட்டி கிடக்கின்றதே!


என் உள் மனதிற்கு தெரியும் இதெல்லாம் ஒரு சப்பக்கட்டு காரணம் தான் என்று. உண்மையில் எனக்கு வாசித்தலில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அக்கடா என்று எந்தவித சிந்தைனையும் இன்றி உட்காரவே பிடித்திருந்தது. வருடங்கள் உருண்டோடின. வீட்டில் ஒரு சிறு நூலகமே உருவானது. என் வேலை புத்தகங்களை துடைத்து வைப்பதும், ”எதற்கு இத்துனை புத்தகங்களை வாங்கி இடத்தை அடைக்கிறீர்கள்”, என்று ஆதங்கப்படுவது மட்டும் தான்.

எங்காவது பயணம் செய்யும் போதெல்லாம் நானும் ஒரு புத்தகத்தை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். ஆனால் ஒரு பக்கம் கூட படிக்காமல் பத்திரமாக திரும்பி எடுத்து வந்துவிடுவேன். அது எனக்கு ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி அல்லது security blanket  மாதிரி என்று கூட கூறலாம்.  நாள் தவறாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தேன் . ஆனால் அதில் வரும் செய்திகள்  முக்கால்வாசி மனதிற்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், எது உண்மை எது பொய் என்று தெரியாததாலும் அதை வாசிப்பதையும் விட்டு விட்டேன்.

வயது ஆக ஆக கண்ணாடி இல்லாமல் படிப்பதும் சிரமமாக ஆனது. வாட்ஸ் ஆப் வந்ததிலிருந்து கண் இன்னும் மோசமானது தான் மிச்சம். சில வரிகளே படிக்கும் பொறுமை. அதிகமாக இருந்தால் வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நான் ஏதோ இப்படி எல்லாம் கிறுக்குவதால் சிலர் நான் வாசிக்கும் பழக்கம் உள்ளவள் என்று தவறாக நினைத்துக்கொண்டு கேட்பார்கள். அவர்களிடம், “ நான் எழுதுவது என் உணர்வுகளை , என் எண்ணங்களை வெளி கொணர்வதற்கே. மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று நான் ஒன்றும் நிறைய புத்தகங்கள் வாசிப்பவள் அல்ல. நான் ஒரு காலி பெருங்காய டப்பா,”என்று உண்மையை ஒத்துக் கொள்வேன். சிறு வயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை என் குழந்தைகளுக்குள் கடத்தியப்பின் நான் அதைப்பற்றி மறந்தே போனேன்.

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடைய என் தோழிகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் கூட இருக்கும். இவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று நினைப்பேன். நான் சோம்பேறி என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் இடம் தராது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நான் எழுதுவதையே நான் திரும்பி படிக்க மாட்டேன். பல தோழிகள் நல்ல புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பார்கள். நான் படிக்காமல் அவர்களிடம் அதைப்பற்றி கேட்டே தெரிந்து கொள்வேன். புத்தகங்களைப் பற்றி ரொம்ப பேசுபவர்கள் மத்தியில் நான் மெளன சாமியாரினி ஆகி விடுவேன். Silence is the best response  என்று கடைப்பிடிப்பேன்.

முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது எங்காவது mallக்கு சென்று சுத்திவிட்டு வருவேன். இப்பொழுது அதிலும் நாட்டம் இல்லை. பேசாமல் வீட்டில் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. சரி வீட்டில் இருந்து கொண்டு என்னதான் செய்வது என்று தோன்றியது. தொலைகாட்சியில் வரும் தொடர்களைப் பார்க்கவும் இப்பொழுது பொறுமை இல்லை. இருக்கும் நேரம் வாட்ஸ் ஆப்பில் மூழ்கி போவதாகவே இருந்தது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவ்வப்பொழுது வரைய ஆரம்பித்தேன். அதையும் எவ்வளவு நேரம் தான் செய்வது. பேசாமல் நாம் மீண்டும்  வாசித்தல் பழக்கத்தை பழக்கிக் கொண்டால் என்ன என்று தோன்றியது.

என் பள்ளித்தோழிகளிடம் யாருக்கெல்லாம் வாசிக்க ஆசை என்று கேட்டேன். என்னைப் போலவே நிறைய பேருக்கு அந்த பழக்கம் விட்டுப் போயிருந்தது. ஒரு சிலர் அதை விடாமல் செய்து கொண்டு இருந்தார்கள். முதலில் சிறு கதையில் ஆரம்பிப்போம் என்று நானும் என் தோழிகள் சிலரும் முடிவு செய்தோம். எடுத்த உடனே நாவல் படிக்க ஆரம்பித்துவிட்டால் ஒழுங்காக செய்ய மாட்டோம். தினம் ஒரு சிறு கதையாவது படிக்க ஆரம்பிப்போம் என்று நினைத்து சுஜாதாவின் சிறு கதைகள் படிக்க முடிவு செய்தோம். ஆன்லைனில் படிக்கலாம் என்றால் அந்த வெளிச்சம் கண்ணுக்கு எரிச்சலைத் தந்தது. முப்பது நாட்கள் தினம் ஒரு கதை என்று படித்துவிட்டோமேயானால் பின்னர் நமக்கு வாசிக்கும் பழக்கம் மீண்டும் வந்துவிடும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். சில தோழிகள் நல்ல கதைகளை பரிந்துரை செய்தார்கள். படிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சிலர் புல்லெட் ட்ரெயின் வேகத்தில் போனார்கள். நான் மட்டும் கூட்ஸ் வண்டி வேகத்திலேயே இருந்தேன்.

முதல் மூன்று நாட்கள் நான் தினம் ஒரு கதை என்று படுக்க போகுமுன் Ipadல்  வாசித்தேன். நான்காம் நாள் என் வேதாளம் முருங்கைமரம் ஏறி விட்டது. Ipadயை கையில் பிடித்துக் கொண்டு படிப்பது கடினமாக இருப்பது போல் தோன்றியது. மேலும் அதில் scroll செய்து செய்து படிப்பது வேறு பிடிக்கவில்லை. எனவே நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம் என்று நினைத்து இன்று காலை முதல் புறப்பட ஆரம்பித்தேன். “வீட்ல இவ்வளவு புக்ஸ் இருக்கறப்ப எதுக்கு நீ லைப்ரரி போற,” என்றார் கணவர். ”வீட்டில் இருக்கும் புத்தகம் என்றால் இரண்டு நாட்கள் புரட்டிவிட்டு தூக்கி போட்டு விடுவேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்தால்  படித்து முடிக்க வேண்டுமே என்ற ஒரு  commitment இருக்கும் ”,என்றேன். எத்துனையோ முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை பையில் இருந்து கூட எடுக்காமல் திருப்பி கொடுத்ததுண்டு. இம்முறை அப்படி செய்யக்கூடாது என்று ஒரு சபதம் எடுத்து இருக்கிறேன்.வழக்கமாக ஓரிரு பக்கங்கள் புரட்டிய உடனேயே தூங்கிப் போவேன். சில நேரம் தூக்கம் வராவிட்டால் ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு சில வரிகள் படித்தால் போதும் , உடனே தூங்கி போவேன்.   என் கணவர் எனக்கு நேர் எதிர். நல்ல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டார்.

காலை வேலையை முடித்து விட்டு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் மதிய உணவு வேளை வந்துவிட்டது. மதிய உணவு முடித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன். அது முடிந்தவுடன், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று உறக்கம் வந்தது. சாயங்காலம் போகலாம் என்றால் டீ நேரம். அதோடு அக்னி நட்சத்திரம் முதல் நாள் வேறா வெயில் பின்னி எடுத்தது. வெயில் தாழ்ந்து போகலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் தோழியிடம் இருந்து போன் வந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அந்த போன் கச்சேரி ஒரு மணி நேரம் நடந்தேறியது. மனதிற்குள் ஒரு வைராக்கியம். இன்று எந்நேரம் ஆனாலும் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வரவேண்டும் என்று. அப்படி இப்படி ஒரு ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்.

நூலகம் அடைந்த பொழுது மணி ஏழரை இருக்கும். உள்ளே நுழைந்த எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எந்த புத்தகத்தை எடுப்பது என்றே பிடிபட வில்லை. சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு அங்கு இருக்க வில்லை. நூலகத்தில் பலர் புத்தகங்களில் மூழ்கி கிடந்ததை பார்க்கையில் எனக்கு என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. பலர் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் புத்தகத்தில் ஊன்றி இருந்தார்கள். எனக்கு  வாசிக்கும் பொழுது concentration இருப்பதே இல்லை. படிக்கும் போதே ஆயிரத்தெட்டு சிந்தனைகள்- என்ன சமைப்பது, மகள் சாப்பிட்டு இருப்பாளா, காய்கறி வாங்க எப்போது போவது என்று மூளைக்குள் ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். . சில நேரம் என்ன வாசித்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வராது. கதையை மறந்து விடுவேன். கதாபாத்திரங்களை மறந்து போவேன்.   நான் சிறிது நேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். பின் எனக்கு பரிச்சயமான வைரமுத்து, மற்றும் ஜெயமோகனின் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் ஆங்கில புத்தகம் ஒன்றையும், இரண்டு சமையல் புத்தங்களையும் எடுத்துக் கொண்டேன். நூலகத்தின் உள் இருக்கும் பொழுது அப்படி ஒரு அமைதியான மன நிலை. அந்த புத்தகங்களை தொட்டு பார்க்கும் பொழுதே அப்படி ஒரு சுகம். பக்கங்களை புரட்டிய பொழுது நானும் புத்திசாலி என்ற ஒரு எண்ணம் தோன்றியது. இதை எப்படி இத்துனை வருடங்கள் அனுபவிக்காமல் விட்டுவிட்டேன்?

எப்படியோ இன்றைக்கு என் mission accomplished. வெற்றிகரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்தாகி விட்டது. புத்தகங்கள் பையில் இருந்து வெளியில் வந்தாகி விட்டன. என் நூலகப் பயணம் பற்றி பதிவும் எழுதியாகிவிட்டது. . இத்தோடு இல்லாமல் ஒழுங்காக இந்த புத்தகங்களை  படித்து முடிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்தித்து என் வாசிப்பு பயணத்தை புதிதாய் தொடங்க இருக்கின்றேன்.

 காலையில் இருந்து “நான் லைப்ரரி போறேன் நான் லைப்ரரி போறேன் என்று தண்டோரா வேறு  அடித்து விட்டேன்.  மகன் வேறு, “ லைப்ரரிக்கு  volunteering செய்ய போறியாமா,”என்று வேறு கேட்டு மானத்தை வாங்கி விட்டான். அவனைப் பொறுத்த வரை நூலகத்திற்கு நான் சென்றாலும் அது  புத்தகங்களை அடுக்கி வைக்கும் வேலைக்குத்
தான்  என்று  முடிவு செய்து இருந்தான். “இல்லை , நான் வாசிக்க புத்தகங்களை எடுத்து வந்து இருக்கிறேன்,”என்று கூறியவுடன் அவனுக்கு ஒரே ஆச்சரியம். “எங்கே காட்டு,” என்று நான் எடுத்து வந்த புத்தகங்களை பார்த்து நான் சொல்வது உண்மை என்று உறுதி செய்து கொண்டான். எடுத்து வந்த புத்தகங்களை படிக்கா விட்டால் மகனின் கிண்டலுக்கு நான் ஆளாகி விடுவேன். அதற்காகவாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் படிப்பது போன்று நடிக்கவாவது செய்ய வேண்டும்!!!

Wednesday, May 2, 2018

என் கடன் பணி செய்து கிடப்பதே !






நேற்று உழைப்பாளர் தினத்திற்காக நான் உழைபாளர் சிலையின் படத்தை வரைந்து என் தோழிக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவள்,”நான் உனக்கு ஒரு டாக்குமெண்டரி வீடியோ அனுப்பி வைக்கிறேன். அதைப் பார்த்தப் பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அனுப்பு,” என்றாள். கூடவே,”முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உனக்கு அது எதைப்பற்றியது என்பதை தெரிந்து கொள்ள ஆகாது. அதற்கு மேல் உன்னால் அந்த வீடியோவை பார்க்க முடியாது,”என்றாள்.

சரி அப்படி என்னதான் வீடியோ அது என்று பார்க்க ஆவலாக இருந்தேன். அவளும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தாள். அந்த டாக்குமெண்டரியின் பெயர்,”கக்கூஸ்”. இந்த வார்த்தையை என் வாயால் உச்சரிக்கக்கூட நான் கூச்சப்படுவேன். டாய்லெட், ரெஸ்ட் ரூம் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது.  இதை பார்ப்பதா இல்லை வேண்டாமா என்ற ஒரு குழப்பம் . சரி, இவ்வளவு சொல்லி இருக்கிறாளே பார்த்துவிடுவோம் என்று அந்த லிங்கை திறந்து பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியே என் வயிற்றை குமட்டச்செய்தது. அந்த டாக்குமெண்டரி துப்புறவு பணி செய்பவர்களைப் பற்றியும், அவர்களின் அவல நிலை பற்றியும், கழிப்பிடங்கள் பற்றியும், குப்பைக்கூளங்கள் பற்றியும், துப்புறவு பணி செய்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதார பிரச்சனைகள், வேலையிலும், வேலை இடத்திலும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகள்  மற்றும் அபாயகரங்கள் பற்றியும்  எடுக்கப்பட்டிருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்தப் பின் என்னால் அதில் வரும் காட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. முழுவதுமாக பார்க்க நம்மால் முடியுமா ? என்ற சந்தேகம். பார்க்க முடியாவிட்டால், கேட்டாவது  மட்டும் பார்ப்போம் , அதில் அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று முடிவு செய்து எதையோ வரைந்த படி கேட்க ஆரம்பித்தேன். அப்பப்பா, என்ன கொடுமை, என்ன கொடுமை!இந்த வாழ்க்கையில் நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்பதை  அந்த நொடி உணர்ந்தேன். பல எண்ண ஓட்டங்கள் எனக்குள் ஓட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல்  ஒடிய அந்த முழு டாக்குமெண்டரியை அவ்வப்போது பார்த்தும்,  கேட்டும் முடித்தேன். அதற்குள் நடு ராத்திரி பன்னிரண்டரை  ஆகிவிட்டது. தூங்க சென்ற என்னால் கண்களை மூடிக்கொள்ள முடிந்ததே தவிர தூங்க முடியவில்லை. அந்த காட்சிகள் சம்மட்டியை வைத்து என் தலையில் அடிப்பது போன்று மீண்டும் மீண்டும் என் கண்களுக்குள்ளும், மூளைக்குள்ளும்  விவரிக்க முடியாத ஒரு வித அவஸ்தயை உண்டு பண்ணியது. கனத்த மனத்தோடு சில மணி நேரத்திற்குப் பின் தூங்கி விட்டேன்.

காலை எழுந்தவுடன் மீண்டும் அதைப்பற்றிய நினைவுகளே. மனித கழிவுகளையும், குப்பைகளையும் சுத்தம் செய்வோர் எவ்வளவு பாவப்பட்டோர் என்று எனக்கு உறுத்தியது. நானும் அவர்களின் இந்த இழிநிலைக்கு என்னை அறியாமல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனம் அழுத்தத்தை உணர்கிறது. சிறு வயதாக இருந்த பொழுது எங்கள் வீட்டு செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வருபவர்களை பார்த்து இருக்கிறேன். மனம் கஷ்டப்படும். அவர்கள் வேலையை முடித்து விட்டு போகும் வரை மூக்கை மூடிக்கொண்டு, சன்னல், கதவுகளை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து இருப்போம். ஒரு வாரம் வரை கொல்லப்பக்கத்திற்கு போவதை தவிர்த்து விடுவோம். சுத்தம் செய்துவிட்டு போனவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் ? அவர்களின் நிலை பற்றி யோசித்தது கிடையாது. இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இப்பொழுதெல்லாம் மெஷின் வந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். அவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டு இருந்தேன். செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வேண்டுமானால் மெஷின் இருக்கலாம் ஆனால் நாம் அன்றாடம் போடும் குப்பைகளையும், அடைத்துக் கொள்ளும் பாதாள சாக்கடைகளையும், ஆஸ்பத்திரி கழிவுகளையும், பொது கழிப்பிடங்களையும், ரயில் வண்டி பாதைகளையும், இன்னும் எத்தனை எத்தனையோ  குப்பைகளையும் இன்று வரை மனிதர்களே கைகளைக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள் என்று பார்த்த பொழுது என் அறிவீனம் என்னை சாட்டையால் அடித்தது.  இதற்கெல்லாம் விடிவு காலமே வராதா என்று ஆதங்கமும், அழுகையும் சேர்ந்தே வருகிறது. இந்த மனித மெஷின்களின் இந்த நிலைக்கு என்ன காரணம், யார் காரணம் என்று யோசிக்கிறேன்.

சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரிலும் குப்பைகளை வகைப்படுத்துவது மனிதர்களே. ஆனால் அவர்களுக்கென்று கையுறைகள், காலணிகள், முககவசங்கள் எல்லாம் தரப்படுகிறது. குப்பைகளை கையாளும் முறை கற்பிக்கப்படுகிறது. அதற்கான கருவிகளும் , தேவையான உபகரணங்களும் தரப்படுகிறது. அவர்களுக்கும் கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவைப் போல வேறெந்த நாட்டிலும் பொது இடங்களில் , வெட்ட வெளிகளில் குப்பைகளையோ, கழிவுகளையோ போடுவதோ,இல்லை வெட்ட வெளிகளை கழிப்பிடமாகவோ உபயோகப்படுத்துவதும் இல்லை. இந்த நிலை எதனால் ஏற்பட்டது?

சுத்தத்திற்கு பெயர் போனவர்கள் நாம் . ஒரு காலத்தில் வெளியில் சென்று விட்டு வீடு வருபவர்கள் கால் ,கையை சுத்தம் செய்து விட்டு வரவேண்டும் என்று வீட்டு வாசலிலேயே தண்ணீர் குவளை இருக்கும் . செருப்பு என்பது வீட்டுக்கு வெளியில் மட்டுமே பயன் படுத்துவோம். முன்னங்கால்களை மட்டும் கழுவினால் பத்தாது சனி விடாது , குதிகால்களிலும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டுத்தான் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற ஐதீகம் எல்லாம் நமக்கு உண்டு. இந்த சுத்தம் பற்றி நாம் பேசுவது எல்லாம் நம் வீட்டிற்குள் மட்டுமே. வெளி இடங்களையும், பொது இடங்களையும், நம் வீட்டின் வேலியை தாண்டி சந்து , பொந்து என்று மற்ற எல்லா இடங்களையும் சுத்தமாக நாம் வைத்துக் கொள்ள நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநலம். என் வீடு நாறாதிருக்க என் வீட்டு குப்பையை வெளியில் தூக்கிப் போடும் நான் அதை சுத்தம் செய்பவர்களைப்பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதே இல்லை.

துப்புறவு தொழிலாளர்களும் மனிதர்களே, அவர்கள் ஒன்றும்  அருவருப்பு உணர்வும், அசிங்க உணர்வும் இல்லாத ஜடங்கள் இல்லை. துப்புறவு பணியாளர்கள் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால்  அவர்களின் வேலை பளுவை, அவர்களின் கஷ்டத்தை குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று நான் சிந்தித்து பார்த்தேன். பல விஷயங்கள் எனக்கு தோன்றியது.  துப்புறவு தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , அவர்களை கண்டு ஒதுங்கி போவது அவர்களை மதிக்காமலோ அல்ல அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் கொண்டோ அல்ல. அவர்கள் துப்புறவு வேலை செய்வதால், வேலை செய்யும் பொழுது அவர்கள் சுத்தமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் குப்பைகளை கையாள்வதால் அவர்கள் அழுக்காக இருப்பார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. எனவே அவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்போம் என்ற எண்ணத்தினால் இருக்கலாம். குப்பையை சுத்தம் செய்பவர்களை அந்த குப்பை வண்டியிலேயே அமரவைத்து கூட்டிச் செல்வார்களாம். பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ஆள் எடுப்பதற்கு சில தகுதிகள் உண்டாம். அது என்னவென்றால், அவர் நன்றாக குடித்துவிட்டு பாதாள சாக்கடையில் உள்ளே சில நிமிடங்கள் தம் பிடித்து இருக்க முடிந்தால் அவருக்கு வேலை உண்டாம். இந்த கொடுமைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

இன்னும் பல நெஞ்சை உலுக்கும் உண்மைகள் அந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. வீடியோவை பார்க்கும் நமக்கே இப்படி வயிற்றை பிரட்டுகிறதே  இந்த வேலையை  தினம் தினம் பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்பவர்களுக்கும் மனநிலை எப்படி இருக்கும். சிலர் சொல்கிறார்கள், “எங்கள் குழந்தைகள் எங்கள் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்,” என்று. ஆனாலும் குடும்பத்திற்காகவும், வயிற்றுப் பசிக்காகவும் எல்லா அசிங்கங்களையும் சகித்துக் கொண்டு அவர்கள் தங்களை இத்தொழிலுக்கு அர்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் முதலில் சுத்தத்திற்கான பாட திட்டம் வகுக்கப்பட வேண்டு. சிறு வயது முதலே சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படவேண்டும். தான் மட்டும் சுத்தமாக இருத்தல் பத்தாது , நம்முடைய சுற்றுப் புறத்தையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலே, சுத்தம் செய்பவர் வேறு யாரோ தானே , நமக்கென்ன , நம்முடைய வேலை குப்பையை தூக்கிப்போடுவது. என் வீட்டு வேலை ஆள்தானே என் கழிவறையை சுத்தம் செய்கிறார், நான் ஏன் அதை சுத்தமாக வைத்து விட்டுத்தான் வரவேண்டும், “ என்பது போன்ற எண்ணங்களை மாற்ற வேண்டும். துப்புறவு வேலை செய்பவர் அருவெறுப்பு படாவண்ணம் நம் வீட்டு குப்பையை நாம் ஒழுங்காக போட வேண்டிய இடத்தில், மூட்டையாகவோ, ப்ளாஸ்டிக் கவரிலோ, போட்டு கட்டி போடவேண்டும். கறிமீன் கழுவுகள், sanitary napkin, diaper , முதலியவைகளை தூக்கி போடும் பொழுது ஒழுங்காக ஒரு கவரில் போட்டு குப்பைத்தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை அகற்ற  அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இப்பிரச்சனைகள் களையப்பட முடியுமே தவிர வேறு எப்படியும் இதனை சரி செய்ய இயலாது.

என் பிள்ளைகளிடம்,”வேறு ஒருவர் அசிங்கமாக விட்டு விட்டு வரும் பாத்ரூமை உங்களால் நிம்மதியாக உபயோக படுத்தவோ, சுத்தம் செய்யவோ முடியுமா? அடுத்தவர்கள் டாய்லெட்டை அசிங்கமாக விட்டுச்சென்றால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி இருக்க நீங்கள் அப்படி ஒரு நாளும் விட்டு விட்டு வரக்கூடாது. வீட்டு வேலையாள் அசிங்கப்பட்டு இந்த வேலையை செய்தால் அந்த பாவம் நம்மைத்தான் வந்து சேரும். அவர்களும் மனிதர்களே. நாம் உபயோகபடுத்திவிட்டு அசிங்கமாக டாய்லெட்டை விட்டு விட்டு வந்தால் அது நமக்கு அசிங்கம்,எனவே ஒவ்வொரு முறையும் எந்த இடமாக இருந்தாலும் சரி , வீடானாலும், ஹோட்டலானாலும் சரி, பள்ளியானாலும்,பொது  கழிப்பிடமானாலும்  நீங்கள் டாய்லெட் உபயோகபடுத்திவிட்டு வரும் பொழுது சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வாருங்கள்,”என்று கூறுவேன்.

இந்த வீடியோவை பற்றி என் மகனுக்கு சொன்னேன். அவனையும் பார்க்க சொல்லி இருக்கிறேன். அவனும் தெரிந்து கொள்ளட்டும் . இப்பணி செய்பவர்களின் கஷ்டம் ,நஷ்டம், தியாகம் என்ன என்பதை. மேலும், நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் அருமையும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு நேரம் ஏண்டா இதைப்பார்த்தோம் என்று தோன்றுகிறது. Ignorance is a bliss  என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் எதற்கு இதெல்லாம் தலைக்கு ஏற்றிக் கொண்டு அவதிபட வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் , நாம் ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி என்று சிறிதேனும் இருத்தல் அவசியம். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பார்க்க வேண்டுமே தவிர , கண்களை மூடிக்கொண்டு கற்பனை உலகில் வாழ்வதால் பயனில்லை. நிதர்சனம் கசக்கத்தான் செய்யும் எட்டிக்காயைப் போல்!இனியாவது துப்புறவு தொழிலாளர்களின் கஷ்டம் அறிந்து பொது இடங்களை அசிங்கமாகவோ, குப்பைகளை கண்டபடி தூக்கி போடாமலோ  இருக்க முயற்சிப்போம். ஏனெனில் அவர்களும் ஆறறிவு பெற்ற மனிதர்களே ! அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அவர்களும் சுகாதாரமாக நோயற்று வாழ வேண்டும். அவர்கள் இல்லையெனில் நாம் அனைவரும் குப்பைமேடுகளில் தான் கால் வைக்க நேரிடும்! மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்.

Sunday, April 29, 2018

சித்ரா பெளர்ணமி!

Image result for picture of a full moon


சித்திரை மாதம் பிறந்ததிலிருந்தே சித்ரா பெளர்ணமிக்காக  காத்து இருந்தேன். சித்திரை என்றாலே அழகரும், வைகையும், மீனாட்சி -சுந்தரேசுவரரும் , திருவிழாக்களும் , பள்ளி விடுமுறையும், உறவினர் வருகையும், சுற்றுலாவும் ஞாபகத்திற்கு வராமல் இருப்பதில்லை. அழகர் வைகையாற்றில் இறங்குவதை நேரில் பார்த்தது இல்லைதான். ஆனாலும் அது நடக்கும் சித்திரை மாதத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. வைகை வேண்டுமானால் வற்றிப்போய் இருக்கலாம் ,ஆனால் நினைவுகள் இன்று வரை வற்றிப்போகவில்லை.

சித்திரை மாதத்தில் ஊரெங்கும் திருவிழா எடுப்பதும், நாடகங்கள் போடுவதும், குல தெய்வங்களுக்கு பொங்கல் வைப்பதும் என்று கலை கட்டிவிடும். இப்பொழுது எல்லாம் இவை நடக்கின்றனவா என்று தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து வருடங்கள் பல ஆகிவிட்டதால் அதிகம் இவைப்பற்றிய செய்திகள் காதில் விழுவதில்லை. சித்திரை மாத பாதியில் பள்ளிகள் விடுமுறை விட்டுவிடுவார்கள்.  சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது ஒரு பெரிய திட்டமாகவே தீட்டப்படும். சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பார்க்காமல் வெட்ட வெளியில் விளையாடிய காலம் உண்டு. என் அம்மா,”ஊரு வெயில் எல்லாம் உன் தலையில தான் கொளுத்துது. அடிக்கற வெயில் வீணாக கூடாதுன்னா இப்படி ஆட்டம் போடுற,”என்று சத்தம் போடுவதும் உண்டு. அதற்காக எந்த விதத்திலும் ஆட்டப்பாட்டத்தை குறைத்துக்கொண்டது கிடையாது. பத்து தெரு தள்ளி விளையாடினாலும் மகள் பத்திரமாக வீடு திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது பெற்றோருக்கு. அப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட குழந்தைகளை குறிவைக்கும் ராட்சச கூட்டம் இருக்கவில்லை. 

இந்நாட்களில் விடுமுறை என்றாலே சொந்தபந்தங்கள் ஒன்று கூடுவது குறைந்து ஏதாவது holiday destinationனுக்கு போகலாம் என்று கிளம்பிவிடுகிறோம். யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் யாரும் நம்மை அப்படி வேண்டி விரும்பி அழைப்பதும் இல்லை . இதில் குழந்தைகளுக்கு peer pressure வேறு. ”விடுமுறைக்கு எந்த ஊருக்கு சென்றாய்?” என்பது போக இப்பொழுதெல்லாம் ”எந்த நாட்டிற்கு சென்றாய் ?”என்பதாகிவிட்டதாம். இதனால் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்லவேண்டிய கட்டாயத்திற்கு சில பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள்.

சித்ரா பெளர்ணமியை பற்றி பேச வந்துவிட்டு மாட்டை எங்கெங்கோ ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொருங்கள் மாட்டை கொண்டுவந்து கட்டிவிடுகிறேன். சித்ரா பெளர்ணமி என்றாலே எனக்கு சில விஷயங்கள் டக்கென்று ஞாயபகத்திற்கு வரும். ஒன்று கட்டுச்சோறு , இரண்டாவது  கோவலன், மாதவி  . இந்த நாளில் தான் இந்திர விழா கொண்டாடப்பட்டதாம்.   இதை தவிர வேரெதுவும் எனக்கு தெரியாது. பொதுவாகவே பெளர்ணமி நிலவு என்றாலே எனக்கு அலாதி பிரியம் உண்டு. சரி இந்த நாளுக்கு அப்படி என்ன விஷேசம் என்று தெரிந்து கொள்ளலாமே என்று என் தோழிகளிடம் கேட்டேன். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும்?  எந்த மாதிரி உணவு செய்து உண்ண வேண்டும்? என்றெல்லாம் கேட்டேன். இதில் இருந்தே தெரியவில்லையா வயதாகி கொண்டு போகிறதென்று!

ஒரு தோழி ,” அன்று எங்கள் வீட்டில் சங்கர நாராயணா பூஜை செய்வோம் ,” என்று கூறினாள். “அப்பூஜை எப்படி செய்வது ,”என்று கேட்டேன். அதற்கு அவள்,” நான் செய்வது கிடையாது. என் அம்மா செய்வார்கள். எனக்கு நேரம் இருப்பது இல்லை அதனால் சாதாரணமாக பூஜை செய்வதோடு சரி,”என்று கூறினாள். ஆமாம் , அவள் ஒரு மருத்துவர். அவளுக்கு நேரம் இருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு நேரம் இருந்தும் விளாவாரியான பூஜை செய்யும் அளவிற்கு எனக்கு பொறுமையும் இல்லை, அப்படியே செய்தாலும் என் மூளைக்குள் இருக்கும் ஆயிரம் சிந்தனைகளை என்னால் மூட்டை கட்டி அவ்வளவு எளிதில் ஓரமாக வைத்து விட முடியாது. மனமும், நினைவும் குரங்காம்சம் எனக்கு. 

நமக்கு ஏற்றமாதிரி  இராமயணம் மாதிரி நீண்டதாக இல்லாமல், திருக்குறள் மாதிரி சிக்கென்று சீக்கிரமாக சுருக்கமாக ஆனால் அதே பயன் தரக்கூடிய பூஜை ஏதாவது இருக்கா என்று கேட்டேன். அதற்கு என் மற்றொரு தோழி, “ சித்ரா பெளர்ணமி அன்று தான் சித்திர குப்தர் பிறந்தார். அன்று சக்கரைப் பொங்கலும், தயிர் சாதமும் செய்து வைத்து, புது நோட்டு புது பேனா வைத்து சாமி கும்பிட வேண்டும்.  அப்பொழுது, “மலையதன்னை பாவத்தை கடுதனையாக எழுதி எனக்கு அருள் புரி,” என்று சித்ரகுப்தரை வேண்ட வேண்டும் என்று கூறினாள். ”முன்பெல்லாம் கொத்தோடு மாங்காயும், குலையோடு தேங்காயும் வைத்து பூஜை செய்வோம். இப்பொழுதெல்லாம் அதற்கு எங்கே போவது. இப்படி செய்தால் போதும் ,”என்றும் கூறினாள். இது எனக்கு மிக எளிதான ஒன்றாக தோன்றியது. ஒரே ஒரு சந்தேகம் மட்டும் தோன்றியது. நோட்டு வைப்பது நம்முடைய பாவ புண்ணிய கணக்கை புது கணக்காக எழுதுவதற்கு. அப்போ வீட்டுக்கு ஒரு நோட்டா, இல்லை ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு நோட்டா ?? பரவாயில்லை ஒரு நோட்டை குடுப்ப பாவ புண்ணிய வரவு செலவு நோட்டாக அவர் வைத்துக் கொள்ளட்டும் இல்லையென்றால்  சித்ர குப்தரே ரொம்ப குழம்பி விடுவார் என்று முடிவு செய்தேன். 

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. இன்றோ ஞாயிற்றுக்கிழமை. காமாட்சி, மீனாட்சி இல்லாமல் சாப்பாடு வீட்டில் இருப்பவர்களுக்கு இறங்காது. இப்பொழுது நான் எப்படி இவர்களை சக்கரைப் பொங்கலுக்கும், தயிர் சாதத்திற்கும் சம்மதிக்க வைப்பது? முதலில் சித்ரா பெளர்ணமியை பற்றி ஒரு க்ளாஸ் எடுத்தேன். சித்ர குப்தர் யார்,  அவர் தொழில் என்ன என்பதெல்லாம் போகிற போக்கில் எனக்கு தெரிந்த ஓரிரு விஷயங்களை சொன்னேன். அப்புறம் இன்று எப்படி சாமி கும்பிட வேண்டும், எதற்காக புது நோட்டும் பேனாவும் வைத்து வணங்க வேண்டும் என்று எல்லா கதையும் கூறி , இன்று சைவ உணவு தான் செய்யப்போகிறேன் என்ற குண்டை தூக்கி போட்டேன். கணவர் அவ்வளவாக அதிர்ச்சி அடையவில்லை. மகன் தான், you disappointed me amma,” என்று சற்றே சுனக்கமாக கூறினான். நானும் , தேங்காய் சாதம், சக்கரைப்பொங்கல், தயிர் சாதம், அவரைக்காய் பொரியல், தேங்காய் துவையல் என்று செய்தேன். இந்த மாதிரி சாப்பாடு செய்தால் சித்ர குப்தருக்கே போர் அடித்து புது நோட்டில் நம் பாவக்கணக்கில் ஏதாவது எழுதி விடுவாரே என்று நினைத்து கொஞ்சம் மசால் வடையும் செய்தேன். சாமியும் குளிரும், வீட்டில் உள்ள ஆசாமிகளும் குளிரும்!

செய்த உணவை சாமிக்கு வைத்து சூடம் காண்பித்து நெய்வேத்தியம் செய்வதற்குள் மகனின் கை மசால் வடையை நோக்கி சென்றது. “சிறிது நேரம் பொறுடா, சித்ர குப்தரே இன்னும் இதை பார்த்து இருக்க மாட்டார். அவர் பார்க்கட்டும் அப்புறம் நீ சாப்பிடலாம்,”என்று கூறி அடக்கி வைத்தேன். நெய்வேத்தியம் செய்தப் பின் எல்லோரும் அமர்ந்து மதிய உணவை உண்டோம். பெளர்ணமி நிலவொளியில் உண்ண வேண்டியதை உச்சி வெயிலில் வீட்டிற்குள் அமர்ந்து உண்டோம். வெயிலும் பளீரென்று தான் இருந்தது . என்ன நிலவொளி போல் குளுமையாக இல்லை அவ்வளவுதான். தென்னை கீற்றிடை வரும் நிலவொளியாக இல்லாமல் சன்னல் திரைச்சீலை வழி வந்த சூரிய வெளிச்சமா இருந்தது. சித்ரா பெளர்ணமி கொண்டாட்டம் இனிதே முடிந்தது! 

இம்மாதிரி பண்டிகைகளே நம்  வாழ்க்கையை ருசியாக்குகின்றன. இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியமே இல்லாமல் ஒரே சீராக போவது போல் இருக்கும். கடிகாரம் மட்டும் இல்லை, நாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம் . ஆனாலும் இது போன்ற நம்முடைய பழக்க வழக்கங்களை ஓரளவாவது செய்வதால் நமக்கு வாழ்வின் மீது ஒரு பிடித்தம் ஏற்படும். ஒரு எதிர்பார்ப்பு உண்டாகும். நேரம் இல்லை என்ற காரணத்தினால் இப்படி பட்ட சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைப்பதால் நம்முடைய சந்ததியருக்கும் நம் பழக்க வழக்கங்கள் தெரியாமல்  போகும் . அது மட்டுமில்லாமல் நமக்கும் இவை ஒட்டிய அழகிய நினைவுகளும் மறைந்து போகும். முடிந்த வரை நம்மால் முடிந்தவரை இவற்றை பின்பற்றுவதால் நம்முடைய கலாச்சாரம் மட்டுமல்ல, நம்முடைய சந்தோஷங்களும் காக்கப்படும்.

சாயங்காலம் உலா வரப்போகும் பெளர்ணமி நிலாவை பார்க்க காத்துக்கிடக்கிறேன் , அழகிய நினைவுகளோடு!!!!

Wednesday, March 28, 2018

Into the Woods!


You and me in a rosy gown
with flower prints and lace stitched around,
walk into the woods swinging
a tightly weaved bamboo basket
with a half moon handle!

One hand holds the basket
the other hand holds you tight,
Not to get lost in the wild!
Dark green, light green, lemon green,
shades of green all around!

Pretty small scarlet flowers
peep from thick green bushes!
The breeze is filled with
the scent of wild roses and herbs!

Cute , furry little bunnies
with round,sparkling red eyes,
run here and there out of fear!
Birds of different colours
flap their wings to the music of the wind!

White spot deer hiding behind the bushes
 are ready to play hide and seek with us!
Walking through the woods,
we pick sweet and sour berries
to fill our bamboo baskets!

A clear silver stream makes it way in silence
so as not to wake up
the sleeping pebbles under it's bed!
You and me wet our feet
in the icy chill wild stream!

We hold some water cupping our palm
with most of it running between our fingers!
We wash our face and sip a little of the magical water
and feel fresh as the wild flowers
and happy as the butterflies!

We walk along the trodden path
still with hands held tight!
Neither do you know nor do I know,
What are we searching for?
Are we looking for the start of the stream?
Or for the one who painted the wild with green?
Or for the musician who plays through the wind?
Or are we looking for
the unknown joy of the untouched wilderness????

Monday, March 26, 2018

”பித்து”



சமீப நாட்களாக எனக்கு பிடித்திருப்பது (என் குடும்ப உறுப்பினர்கள் கூற்றுப்படி) கோலப் பித்து. ஆம் ! புதிதாக நான் ஒரு ஸ்லேட் வாங்கினேன். வாங்கியது என்னவோ அன்றைய வேலைகளை எழுதி வைத்தாவது செய்யலாமே என்ற நல்ல எண்ணத்தில் தான். இதில் என் தோழி உமாவும் கூட்டு. இருவருமாக ஆளுக்கொரு ஸ்லேட் வாங்கி வந்தோம். சில நாட்கள் அதில் அன்றைய சமையல் முதல் என்ன என்ன வேலைகள் செய்ய இருக்கிறது என்பது வரை எழுதி வைத்தேன். சமையல் எழுதியபடி நடந்தது. ஆனால் அந்த to-do list டுட்டுடூ ஆனது. அது எழுதியது எழுதியதாகவே இருந்தது. அதை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு குற்ற உணர்வு. அதற்காக உடனே எழுதியபடி செய்ய துவங்கினேன் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். என் தோழியிடம் கேட்ட பொழுது தான் தெரிந்தது இருவரும் ஒரே படகில் பயணித்தோம் என்று.

சரி ஸ்லேட் வாங்கியாகிவிட்டது அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று ஒரே யோசனை. சின்ன சின்ன சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். நான் சிறுமியாக  இருந்த பொழுது என் சின்ன அத்தை அழகழகாக சிக்கு கோலம் போடுவார்கள். அதுவும் வாசல் நிறைய புள்ளி வைத்து போடுவார்கள். அந்த சாணம் தெளித்த வாசலில் வெள்ளை கோலமாவில் புள்ளி வைத்து போடும் சிக்கு கோலம் வசீகரமாக இருக்கும். எனக்கு பார்த்து ரசிக்க தெரிந்ததே தவிர போட தெரியவில்லை. நமக்கு தெரிந்த கோலம் எல்லாம் ஸ்டார், பூ, பொங்கல் பானை அவ்வளவு தான். காலம் போன கடைசியில் ஸ்லேட்டில் சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். இதுவும் ஒரு அனுபவமாகவே இருக்கிறது.

சாதாரணமாக நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் காலைவணக்கம் செய்தி அனுப்புவது வழக்கம். வெட்டியாக இருப்பதால் தான் இதனை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் கணவரின் வாதம். அதற்காக நான் அந்த பழக்கத்தை விடவில்லை. அதை நெருங்கியவர்களுக்கு அனுப்பும் பொழுது ஒரு சந்தோஷம். வெறும் குட் மார்ணிங் என்று அனுப்புவதற்கு பதில் ஒரு கோலம் போட்டு அனுப்பினால் என்ன  என்று தோன்றியது. அடுக்குமாடி குடியிருப்பின் சிறு வாசல்களில் போடுவதெற்கென்றே அழகிய சிறு சிறு புள்ளிக் கோலங்கள் நெட்டில் உள்ளன. அவற்றைப் பார்த்து ஸ்லேட்டில் வரைந்து குட் மார்ணிங் என்று எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் போட்டால் பேப்பர் போடுபவர் ஏதோ சபதம் எடுத்ததைப் போல் தினம் தினம் கோலத்தின் மேலேயே செய்தித்தாளைப் போட்டுவிட்டு போகிறார். இப்படி ஸ்லேட்டில் போட்டு படம் பிடித்து அனுப்புவதால் பல பேர் பார்க்க முடிகிறது.  பல நண்பர்கள் அதை ரசித்தார்கள். அழகிய இமோஜிகள் அனுப்பி வாழ்த்தி, உற்சாகப்படுத்தினார்கள். சில நண்பர்கள் என் ஸ்லேட் கோலத்தைப் பார்த்து வாசலில் போட ஆரம்பித்தார்கள். வாழ்க்கையே ஒருவரை ஒருவர் பார்த்து கத்துக் கொள்வதுதானே!

நான், ”என் நண்பர்கள் என் கோலம் அழகாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்”, என்று உற்சாகத்துடன் கூறினால் என் கணவர்,”நீதான் உனக்குனு ஒரு ஜால்ரா கோஷ்டிய வச்சு இருக்கியே,”என்று சர்வ சாதாரணமாக கூறிவிடுவார். நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு என் கோலப்பித்தை தொடர்ந்தேன்.

முதல் சில நாட்கள் வீட்டில் வைத்தே ஸ்லேட்டை படம் பிடித்து அனுப்பினேன். என் தோழி அங்கை என்பவர் மிக அழகாக  பல விஷயங்களை படம் பிடித்து அனுப்புவாள். அவளின் புகைப்படங்கள் கண்ணை கவர்பவையாக இருக்கும். அவளைப் பார்த்து நானும் படம் எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன். என் இன்னொரு தோழி பூஜா படம் எடுக்கும் போது ஃபோனை எப்படி பிடித்து எடுத்தால் அழகாக வரும் என்று சொல்லிக்கொடுத்தாள். எப்படி எடிட் செய்வது என்பதெல்லாம் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.

வீட்டுக்குள் படம் எடுத்து போர் அடிக்கிறதே என்று சில நாள் கீழே சென்று புள்வெளியில் ஸ்லேட்டை வைத்து படம் எடுத்து அனுப்பினேன். அன்று எனக்கு ஒரு யோசனை. புல்லில் வைத்து எடுப்பதற்கு பதில் நீச்சல் குளத்தில் ஸ்லேட்டை மிதக்கவைத்து எடுத்தால் என்ன என்று தோன்றியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. நான்,, கோலம் போட்ட ஸ்லேட், மழைதூரல் பட்டு அழிந்து விட்டால் மறுபடியும் கோலம் போட சாக்பீஸ் , துடைக்க ஒரு டிஷ்யூ பேப்பர் எல்லாம் எடுத்துக் கொண்டு நீச்சல் குளம் நோக்கிச் சென்றேன்.பெரியவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் எடுக்கலாம் என்று முதலில் யோசித்தேன். ஸ்லேட்டை மிதக்கவிடும் முயற்சியில் நான் உள்ளே விழுந்துவிட்டால் ,அச்சோ நமக்கு நீச்சலும் தெரியாது, மழைத்தூறும் காலை வேலை, ஞாயிற்றுக் கிழமை வேறு,  யாரும் அந்த காலை நேரத்தில்  காப்பாற்றக்கூட வரமாட்டார்களே!  நான் கீழே சென்றது கணவருக்கோ, மகனுக்கோ தெரியவும் தெரியாது. இருவரும் இழுத்து மூடிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்கள்.  தண்ணீருக்குள் விழுந்தால் ஸ்லேட்டைப்போல் நானும் சில நொடிகளில் மிதக்க நேரிடும். என் உயரத்திற்கு நீச்சல் குளத்தின் மிகவும் குறைந்த ஆழத்தில் நான் விழ நேர்ந்தாலும் ஜல சமாதிதான்.

 எனவே அந்த யோசனையை கைவிட்டு விட்டு, குழந்தைகள் விளையாடும் நீச்சல் குளத்தில்  ஸ்லேட்டை மிதக்கவிட்டு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அதன் ஆழம் என் உயரத்திற்கு ஏற்றதாக இருக்கும். கனுக்காலுக் கொஞ்சம் மேல் தான் தண்ணீரின் அளவு. உள்ளே இறங்கினாலும் முட்டிக் கூட நனையாது. மெதுவாக கீழே குணிந்து ஸ்லேட்டை  தண்ணீரில் மிதக்க விட்டேன். கையில் இருக்கும் ஃபோன் மழைத்தூரலில் நனைந்துவிடுமோ என்று வேறு கவலை.  அந்த நீல நிற தண்ணீரில் ஒரு சிறு படகைப்போல் என் ஸ்லேட் கோலத்தோடு 
அழகாக  மிதந்தது.  மழைத்தூரல் பட்டுவேறு கோலம் அழியத் துவங்கியது. உடனே ஸ்லேட்டை எடுத்து அழிந்த இடங்களை மீண்டும் வரைந்து மெதுவாக மிதக்கவிட்டு படம் பிடித்தேன். 

யாரும் பார்ப்பதற்கு முன்  நனைந்த ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்தவுடன் கணவர் கையில் ஆவி பறக்கும் காப்பியுடன்,”காலையில எங்க போன?”என்று கேட்டார். நான் என் ஸ்லேட்டை பெருமையாக காண்பித்து,”நான் ஸ்விம்மிங் பூல்ல ஸ்லேட்டை மிதக்கவிட்டு போட்டோ எடுத்தேன் தெரியுமா,”என்றேன்.உடனே அவர்,” அடிப்பாவி, ஆரம்பிச்சுட்டியா ?”என்றார். எதை நான் ஆரம்பித்துவிட்டேன் என்று நான் கேட்கவில்லை. எதற்கு நாமாகவே நாக்கில் இருக்கும் சனியை வெளியில் இழுத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம். எடுத்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்த்தேன். ஆஹா இது என்ன பிள்ளையார்  பிடிக்கப்போய் குரங்கான கதையாகி போய்விட்டதே!, என்று மனம் நொந்து போனேன். படத்தை பார்த்தால் நான் எதிர்ப்பார்த்தது போல நீச்சல் குளத்தில் எடுத்ததை போல் வரவில்லை. ஏதோ பாத்ரூம் டைல்ஸில் வைத்து எடுத்தது போல் இருந்தது. நீச்சல் குளத்தின் தரையில் பதித்திருந்த நீல நிற டைல்ஸ் அசிங்கமாக படத்தில் தெரிந்தது.  எனக்கே பிடிக்கவில்லை. உடனே ஸ்லேட்டை ஒரு தலையணை மீது வைத்து படம் பிடித்து என் குட்மார்னிங் மெசேஜை எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.

சிறிது நேரம் கழித்து என் மகன் எழுந்து வந்தான். அவனிடம் நான் எடுத்த படத்தை காண்பித்து ,”ரிஷி இது எப்படி இருக்கு என்றேன்?” அதற்கு அவன்,”அம்மா , what is this new obsession of yours?"என்றான். ”நல்லா உங்கம்மாவ கேளுடா இப்போ புதுசா இந்த கோலப் பித்து பிடிச்சு இருக்கு அவளுக்கு,”என்றார் கணவர் .  நான் முறைத்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.  அவன் மிகச் சாதாரணமாக இக்கேள்வியை கேட்டுவிட்டு போய்விட்டான். ஆனால் நான் அதனை நாள் முழுதும் அசைப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவர்கள் கூறுவது போல் இது என்ன புது பித்து எனக்கு?, கொஞ்சம் நாள் சமையல் பித்து, கொஞ்சம் நாள் படம் வரையும் பித்து, கொஞ்சம் நாள் வீட்டை சுத்தம் செய்யும் பித்து, கொஞ்சம் நாள் புத்தகம் வாசிக்கும் பித்து! இப்பொழுது கோலப்பித்து! ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு பித்து என்னை ஆட்டுவித்துக்கொண்டே இருக்கிறது. இது எனக்கு மட்டும் தானா? ஏன் இவர்களுக்கு இல்லையா?

மகன், சில வருடங்கள் கார் மேல் பித்தாகி இருந்தான், சில வருடங்கள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் பித்தாக இருந்தான், சில வருடங்கள் தாமஸ் ட்ரெயின் பித்தாக இருந்தான், சில வருடங்கள் பென் டென் பித்தாக இருந்தான், சில வருடங்கள் ட்ரான்ஸ்பார்மர்கள்.இப்படி சில சில வருடங்கள் ஏதோ ஒன்றின் பால் அவனின் ஈர்ப்பு இருந்திருக்கிறது. கணவரும், சில காலம் பேலியோ டையட், சில காலம் சைக்கிள் பித்து, சில காலம் யோகா பித்து, சில காலம் படப்பித்து என்று இருந்திருக்கிறார், இப்பொழுதும் இருக்கிறார். அவர்கள் ஒரு செயலுக்கு அடிமையாகும் பொழுது அது “ஈடுபாடு” என்று பெயரிடப்படுகிறது. இதுவே இருபது ஆண்டுகளுக்கு மேல் தன் ஆசைகளை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, தன் சுயம் மறந்து அவர்களின் பித்துக்களுக்கெல்லாம் உயிர் கொடுத்த நான் இப்பொழுது எனக்காக , எனக்கு பிடித்த விஷயத்தை நான் செய்ய முயற்சிக்கும் பொழுது அது “பித்து, அப்செஷன்”என்று பழிக்கப்படுகிறது.

நான் வரையும் படங்களை, எடுக்கும் புகைப்படங்களை, போடும் கோலங்களை பார்த்துவிட்டு என் தந்தை என் அம்மாவிடம்,”பாவம், அவளுக்கு ரொம்ப போர் அடிக்குது போல.என்ன செய்யறதுனு தெரியாம ஏதாவது செஞ்சுகிட்டு இருக்கா”, என்றாராம். அவருக்கும் புரியவில்லை என் தேடல் எது என்பது. அவருக்கு தெரியவில்லை வீணாக பொழுதை கழிக்காமல், வெட்டிக் கதை பேசாமல், ஊர் வம்பு இழுக்காமல், என்னை நானே பிசியாக வைத்துக்கொள்ள நான் கற்றுக்கொண்டு வருகிறேன்  என்று.

என் விருப்பங்கள் , என் திறமைகள் என்ன  என்பதே எனக்கு மறந்து போய் காலம் பல ஆகிவிட்டது. இப்பொழுது அரை கிணற்றைத் தாண்டும் வயதாகிவிட்டது. இப்பொழுதுதான் நான் யார், எனக்கு என்ன பிடிக்கும், என்ன செய்தால் எனக்கு சந்தோஷம் , என்னவெல்லாம் என்னால் செய்ய முடியும்  என்று நான் எனக்கு நானே கேட்டுக்கொண்டு தேட ஆரம்பித்திருக்கிறேன். என் தேடலின் வழியில் என்னை தாங்கிப் பிடிப்பவர்களின்  துணை எனக்கு தூணாய் தோன்றுகிறது. இந்த தேடல் என்னை இளமையாக உணரச்செய்கிறது. இந்த கற்றலில் நான் செய்யும் தவறுகள் என்னை பின்வாங்க செய்யவில்லை. புதுப் புது விஷயங்களை தேடத் தூண்டுகிறது. என் ரசிகையாய் என்னையே மாற்றுகிறது.

பிள்ளைகள் நாளை நம்மை விட்டு சென்றப்பின் அந்த வெற்றிடத்தை நிறப்ப, எனக்கு நானே பொழுதை கழிக்க தெரிந்திருக்க வேண்டும். தனித்தனி தீவுகளாக வாழும் இக்கால கட்டத்தில் யாரையும் சார்ந்து இல்லாமல் நமக்கு நாமே துணையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.   அதனால் தான்  நான் என்னுள் என்னை தேடுகிறேன். அந்த தேடல் அழகாக இருக்கிறது, புது அனுபவமாகவும் இருக்கிறது. நீங்களும் என்னுடன் கைகோர்த்து உங்களை தேட ஆரம்பியுங்கள். சேர்ந்தே நாம் பயணிக்கலாம்!!!! பயணம் இனிதாக அமையும்!!

Friday, March 23, 2018

Wine glass with ABC Juice!


Wine glass with ABC Juice!

It was scorching sun and it was making my eyes burn. Wanted to make the much hated ABC juice for Rishi and me. After making it I wanted to take a picture so that I could post it on my Instagram and also wanted to send it to a few of my friends to make them feel motivated to make the same juice .

.The recipe was passed on by my friend Suganthi to me. She is a very good cook and my kids love her food. She said if you drink it you can feel rejuvenated and energetic and that your skin will shine. The first time I made this juice and poured it in a clear glass and gave Rishi, he was very excited to taste it. I didn't tell him what it was. He assumed that it was grape juice or that it must be pomogranate juice. The minute he put his lips on the glass and took a sip he closed his eyes and pulled his nose and cheek up. I was waiting there looking at his face for his reaction. He said"Maaaaa What kind of a juice is this?" I told him the fancy name "ABC Juice". He said "What the heck is ABC juice? It tastes horrible. I thought it was some grape juice." I said that it was very good for his health and that it had apple, beetroot and carrot in it.

Knowing the fact that he would drink anything to get rid of his pimples I told him that it would clear his face of the acne. None of my marketing techniques and health advice worked that day. Finally I took my wand of "I am the mom just listen to whatever I say and drink it." Yes! that worked. He drank it like some kind of poison with an extra effort of acting to puke. I didn't bother to any of his actions since all I wanted was to push it down his throat and I succeeded in it. After he finished he was about to put the glass in the sink with a big bang to show his frustration but I was quick enough to stop him from doing it. Still he kept the glass in the sink and pressed it hard. He asked me," Who was the one who taught you this juice mama?" Thinking that if I say Suganthi's name I will be saved ,I proudly said,"Sugan aunty Rishi. She gave me the recipe." He immediately reacted with a ."What ? I thought Sugan aunty always makes good stuff. When did she become like you?" This was the last feather added that day to my "Mean Mother Hat".

Today when I made this juice again he came from school and said,"Mama agaiiiin the same juice? Pls Iet me have plain ice water or make me plain lemonade." He knows that if mom has decided a menu for the day it will definetely be on the table. He had no other choice. I asked him whether he wanted it in a fancy glass or an eversilver tumbler. "Enough of a tumbler." That "enough " did imply many meanings. I gave him in a tumbler and poured the remaining in a wine glass . It looked like wine. Was excited to see the beautiful colour. I asked him to take a picture of me holding the cup. He totally refused to do that . I tried taking a selfie. It was horrible than the pictures that Rishi takes of me. So I decided to take a picture of just the glass.

First I held it in my hand and took a picture. I was not satisfied by the outcome. Next I tried holding it outside the window so that I could focus the pool, the sunlight , the sky all at the same time. That picture looked even more worse. Then I placed the glass on the metal hinges of the window . When I placed it my hands shook and my heart beat was hundred times more. It went dhak dhak dhak quite fast. I was sooo scared that it might fall down. What if it falls on someone's head? I live in the eighth floor . I looked down and made sure no one was down. Since it was mid day usually no body walks at that time of the day . But there was no guarantee that nobody will be walking for sure. After making sure that nobody was down I tried to place it safely on the hinges. I made sure that it stood there with full support and prayed that there shouldn't be any wind till I took the picture.  When I saw the glass through my phone's camera I got goosebumps on my hands Somehow with my shaking hands I captured the glass standing on the hinges . I could feel my heavy breath ! I clicked continuously a few times so that I have a few pictures to select from. After taking the shot I took the glass from the window with so much care and put it on a levelled surface.Checked whether the picture had come out as expected. Hurray !! I did it !!yes I had managed to capture the sky, the sunlight and the swimming pool at the background. Felt very proud of myself for having successfuly taken a picture without letting the wine glass with the ABC juice go dowwnnnn the air!