Wednesday, May 16, 2018

Mom and Rishi

Mom and Rishi
Rishi was getting ready for his exams. He could smell pasta being cooked. He wanted to make sure that his sense of smell would not fool him. He enters the kitchen.
Mom: Rishi are you ready to leave?
Rishi: Yes ma. BTW what are you making?
Mom: I am making Pasta.
Rishi: Make sure you add extra cheese ok
Mom:I have added enough cheese Rishi.
Rishi: Whenever you say you have added enough cheese I always ask you to add "more cheese".
Mom: I have already dumped the whole cheese into it Rishi.
Rishi: Mama please add more cheese. Make sure you don't spoil the relationship between me and Pasta.
Mom: WHAAAAT????????
He could have told straight on her face that Pasta would not taste good without extra cheese. Or that her pasta tasted bad with less cheese. Mom never knew about the relationship between Rishi and Pasta. Two days back on Mother's day she shamelessly went around the house informing that it was mother's day. She went to the extent of asking him to surprise her to prove that the mother son relationship was too strong. That ship capsized instantly. But today the relationship between Rishi and Pasta was made strong by the binding cheese. mmmmmmmmm.

Monday, May 14, 2018

ரசித்து கேட்டது:

ரசித்து கேட்டது:
“எங்க அம்மாச்சி ஒன்னு கீதா, சளி புடிச்சா வித்தியாசமா ஒரு வைத்தியம் பண்ணுண்டீ. நல்லா திக்க்க்கா, கெட்ட்டியா தேங்காப் பால எடுத்து வச்சுக்கும். நல்லா திக்க்க்கா காப்பி டிக்காக்‌ஷன் போடும். அந்த கெட்ட்டி தேங்காப்பாலுல இந்த திக்க்க்கா போட்ட காப்பி டிக்காஷன சுட சுட சுட ஊத்தி கலந்து குடிக்க சொல்லும் பாத்துக்க. நெஞ்சு சளி முழுசா வெளில வந்துடும். அப்புறம் இன்னொரு வைத்தியம் பண்ணும் பாரு. நல்லா காஞ்ச செகப்பு மொளகாவ ஒரு அஞ்சாரு எடுத்து நல்ல கொர கொர கொரனு அம்மில வச்சு அரைரைக்கும். சுட சுட வடிச்ச சாதத்துல அத போட்டு ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணய ஊத்தி பெசஞ்சி உருட்டி குடுத்து முழுங்க வைக்கும் பாரு. அத்துன சளியும் மூக்கு, வாய் வழியா வெளில வந்துடும். “தோழி சொல்ல கேட்டது.
. கேட்க கேட்க அந்த தேங்காய்ப்பாலின் கொழ கொழ தன்மை நாக்கில் ஒட்டியது. திக்கான காப்பி டிக்காக்‌ஷன் கருப்பாய் பயமுறுத்தியது.கொர கொர என்று அரைத்த மிளகாய் என் கைகளை எரியச் செய்தது.சுட சுட வடித்த சோற்றின் ஆவி என் கை விரள்களை சுட்டுத் தீர்த்தது. மொத்தத்தில் அவள் சொல்லி முடித்த போது எனக்கு உடல் முழுதும் வேர்த்து ஜுரம் விட்டது போல் இருந்தது.

ரசித்து பார்த்தது:

ரசித்து பார்த்தது:
நேற்றும் சாங்கி ராமர் அழகாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தார். என்றைக்குமே அவரின் அழகிற்கு குறைவில்லைதான். நேற்று பிரதோஷம் ! பிள்ளையார் , உயர்ந்து நிற்கும் ஹனுமன், சிவன், பார்வதி, என்று எல்லோருக்கும் அழகான அலங்காரம். ஒவ்வொரு சந்நிதியாக கும்பிட்டபடி ராமர் சந்நிதிக்கு வந்தேன். அங்கு கண் மூடி ஓரிரு நிமிடங்கள் என் பிராத்தனையை முடித்து விட்டு கண் திறந்து பார்த்த பொழுது என் எதிரில் ஒரு முப்பது , முப்பத்தி மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவர் பார்க்க சிரித்த முகமாக , அழகாக இருந்தார். மேல் பாதி உடம்பு சற்றே முன்னோக்கி குனிந்தும் , குனியாதாது மாதிரியும், இரு கரங்களையும் குவித்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. அது அவரின் கண்களில் பிரபலித்தது. உதடுகள் ஏதோ முனுமுனுத்தபடி இருந்தன. அருகில் அவரின் கணவர் அவர்களின் இரண்டு வயது குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
இந்த பெண்மணி சிரித்தபடியே ராமரை பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் ஏதும் கோரிக்கை வைக்கவில்லை. அவரின் கண்களில் ஒரு பரவச நிலை தெரிந்தது. ராமரை அவர் ஆசையாக பார்த்தார். அவர் ராமரிடம், “ராமா உன் கண்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது? உன் உதடுகள் எப்படி இப்படி ஒரு வசீகரிக்கும் புன்முறுவல் பூக்கின்றது? உன் உடையின் நிறம் மிக அழகாக உள்ளது, உன் பூ மாலையும், பூ அலங்காரமும் கண்களுக்கு விருந்தாய் இருக்கிறது’” என்று ராமரின் அழகை அவருக்கே வர்ணித்தது போல் இருந்தது. அப்பெண்மணியின் உதட்டில் தவழ்ந்த புன்னகை சிறிதளவு கூட மாறவில்லை. அருகில் யார் இருக்கிறார்கள், தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலை இல்லை. அவர் பார்வையில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் சிரித்த முகத்துடனே ராமரை கண்கொட்டாமல் பார்த்து , ராமர், சீதா, லக்ஷ்மனன், ஹனுமன் சகிதமாக அனைவரின் அழகையும் தனக்குள் உள்வாங்கி மனதில் நிறுத்திக்கொண்டு மகிழ்வாக அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.அவருக்கும் , அந்த ராமருக்கும் இடையே இருந்த உறவை என்னால் காணமுடிந்தது. நானும் அவரைப்போலவே சில நிமிடங்கள் மனதில் இருந்த எல்லா எண்ணங்களையும் துடைத்துவிட்டு ராமரின் அழகை ரசித்தேன்.
எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் பலர் , நான் உட்பட ஒரு வித கோரிக்கையுடனேயோ அல்லது பிராத்தனை பலித்ததுக்கான நன்றியை தெரிவிப்பதற்காகவோதான் செல்கிறோம். சில நேரங்களில் கடவுளிடம் சண்டைப் போடுவதற்கும், கோபித்துக் கொள்வதற்கும் கூட கோவிலுக்கு செல்பவர்கள் இருக்கிறார்கள்..சந்நிதியில் அழுபவர்களை பார்த்து இருக்கிறேன்.சாமி வந்து ஆடியவர்களை பார்த்து இருக்கிறேன். சாமியை பார்த்து மனம் உருகி பாடுபவர்களை பார்த்து இருக்கிறேன் . ஆனால் சத்தமின்றி மெளனமும் இன்றி ஒருவித ரகசிய உடன்படிக்கையில் கடவுளுடன் உறவாடிஅந்த அழகிய உடல் மொழியை யாரிடத்திலும் நான் கண்டதில்லை .நான் சில கோவில்களில் நூற்றியெட்டு சுற்று சுற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன். மாரதானில் ஓடுபவர்களைப்போல் கடமைக்காக சுற்றுவார்கள். பக்கத்து வீட்டுக்காரன் விரதம் இருக்கிறார் என்று விரதம் இருக்கிறவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். என் குடும்பத்தாருடன் நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் எனக்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தான் கொடுப்பார்கள். அதற்குள் நான் ஜெட் வேகத்தில் என் “டெம்பிள் விசிட்டை” முடித்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் இன்று நான் பார்த்த அந்த பெண்மணி அமைதியாக , எந்த வித வேண்டுதலும் இன்றி ராமரின் அழகை ரசிப்பதற்காகவே கோவிலுக்கு வந்தது போல் இருந்தது. ”சாமி கும்பிடும்போது கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். நன்றாக கண் திறந்து சாமியை பார்த்து கும்பிடுங்கள்”’ என்று நான் எங்கோ படித்திருந்தேன். நான் பொதுவாகவே சாமி கும்பிடும்பொழுது கண்களை மூடிக்கொள்வேன். அப்பொழுது தான் மனம் ஒரு நிலையில் இருக்கும் . வேறு எங்கும் வேடிக்கை பார்க்காது என்பதற்காக அப்படி செய்வேன். இப்பொழுதெல்லாம் ஒரிரு நிமிடங்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டே சாமி கும்பிடுகிறேன். அப்படி செய்யும் பொழுது ஒருவித நிறைவு. அந்த பெண்மணியைப் போல் அமைதியாக கடவுளின் அழகை பார்த்து ரசித்து , அதை அவரிடமே பகிர்ந்து கொண்டது கிடையாது. இனி கோவிலுக்கு போகும் பொழுது கடவுளை அங்குலம் அங்குலமாக ரசித்து பார்க்க வேண்டும் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன். மனிதன் மட்டுமல்ல கடவுளும் அவரின் அழகை வர்ணித்து “நீ அழகாய் இருக்கிறாய்”, என்று கூறினால் மயங்காமல் இருக்க வாய்ப்பில்லை!! ராமரின் உருவம் மனதில் அன்று பதியவில்லை. அந்த பெண்மணியின் அமைதியான தோற்றமும், ரசிக்கும் கண்களும், புன்முறுவல் பூத்த இதழ்களும், கூப்பிய கரங்களுமே என் மனதில் அன்று பதிந்தது!!

Saturday, May 5, 2018

வாசிப்புப் பயணம்


ஒரு வழியாக இன்று நூலகம் சென்று வந்தேன். எனக்காக நூலகம் சென்று எத்துனை வருடங்கள் ஆகின்றன என ஞாபகம் இல்லை. வாசித்தல் பொருத்த வரை என் வாழ்வில் திமு , திபி என இரண்டு காலமாகப்  பிரிக்கலாம். இந்நேரம் நீங்கள் திமு, திபி க்கு அர்த்தம் கண்டு பிடித்திருப்பீர்கள். ஆமாம், திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் தான். திருமணத்திற்கு முன் பொட்டலம் கட்டி வரும் காகிதம் கூட விடமாட்டேன். எல்லாவற்றையும் படித்துவிட்டுத் தான் கிழிப்பேன்.திருமணத்திற்குப் பின் எந்த காகிதம் கிடைத்தாலும் கிழித்து துடைப்பதோடு சரி.

குழந்தைகள் என்று ஆனப்பின் அவர்களை நூலகம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். அவர்களோடு சேர்ந்து Fairy tales  முதல், bedtime  கதைகள், தாமஸ் எஞ்சின் கதைகள், Barbie கதைகள் , விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், குழந்தைகளுக்கான, இராமயணம், மகாபாரதம் என்று அவர்களுக்கு பிடித்தமான புத்தகங்களுடனே என் பயணமும் தொடர்ந்தது. எனக்கென்ற விருப்பு வெறுப்பு இல்லாமல் போனது. அவர்களுக்கு படித்து காண்பிப்பதிலேயே என் வாசித்தல் ஆசை நிறைவேறியது. ஒரு சில வருடங்களில் அவர்களாகவே படிக்க ஆரம்பித்தப் பின் என் வாசித்தல் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கணவரும், குழந்தைகளும் புத்தகப் புழுக்கள். குழந்தைகளை புத்தக உலகிற்கு அறிமுகப்படுத்தி அதில் அவர்களுடன் சில வருடங்கள் பயணித்த என்னால் அவர்களைப்போல் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக முடியவில்லை. காரணம் அவர்களுக்கு நினைத்த பொழுது சாப்பாடும் மற்ற பிற தேவைகளும் தானாக நடந்தது. எனக்கு அப்படி இல்லை. கணவர் கூறுவார், “வீட்ல இவ்ளோ புக்ஸ் இருக்கு இல்ல படிச்சா என்ன?” என்று. அதற்கு நான்,” நான் படிக்க ஆரம்பிச்சா வீட்டு வேலையை யார் செய்வாங்க? நீங்கல்லாம் போடுற குப்பையை யார் சுத்தம் செய்யறது? யார் சமைப்பா, துணி துவைப்பா, பாத்திரம் கழுவா?”என்று  என் இராமயணத்தை  ஆரம்பிப்பேன். ஏண்டா இவளை வாசிக்க சொன்னோம் என்று அவரும் பேசாமல் இருந்து விடுவார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் ஒரு புத்தகப் புழு. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது. பல நாட்கள் வேலை முடிந்து வீடு வரும் அப்பா கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு,”கீதா நீ வந்து சாப்பாடு எடுத்து வைமா. உன் அம்மா IAS examக்கு  படிக்கிறா,” என்று கிண்டலும் கோபமுமாக கூறுவார். பல நாட்கள் பால் பொங்கியதும், சட்டி காய்ந்து தீய்ந்த கதைகளும் உண்டு. என் அம்மாவால் அப்படி புத்தகத்துள் லயித்து போய்விட முடியும். எங்கள் வீட்டுக்கு இப்பொழுது வந்தாலும் என் கணவர் அம்மாவிற்கென்று புத்தகங்களை எடுத்து கொடுப்பார். இருவரும் பேசும் ஒரே பொது விஷயம் புத்தகங்களைப் பற்றியதே. ஆனால் என்னால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. என்னை ஒரு பெரிய குடும்ப இஸ்திரியாக நான் காட்டிக்கொள்ள முற்படுகிறேனா??அப்பொழுதெல்லாம் புத்தகம் ஒன்றே பிரதான பொழுது போக்கு அம்சமாக இருந்தது. இப்பொழுதுதான் ஆயிரம் பொழுது போக்கு அம்சங்கள் கொட்டி கிடக்கின்றதே!


என் உள் மனதிற்கு தெரியும் இதெல்லாம் ஒரு சப்பக்கட்டு காரணம் தான் என்று. உண்மையில் எனக்கு வாசித்தலில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அக்கடா என்று எந்தவித சிந்தைனையும் இன்றி உட்காரவே பிடித்திருந்தது. வருடங்கள் உருண்டோடின. வீட்டில் ஒரு சிறு நூலகமே உருவானது. என் வேலை புத்தகங்களை துடைத்து வைப்பதும், ”எதற்கு இத்துனை புத்தகங்களை வாங்கி இடத்தை அடைக்கிறீர்கள்”, என்று ஆதங்கப்படுவது மட்டும் தான்.

எங்காவது பயணம் செய்யும் போதெல்லாம் நானும் ஒரு புத்தகத்தை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். ஆனால் ஒரு பக்கம் கூட படிக்காமல் பத்திரமாக திரும்பி எடுத்து வந்துவிடுவேன். அது எனக்கு ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி அல்லது security blanket  மாதிரி என்று கூட கூறலாம்.  நாள் தவறாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தேன் . ஆனால் அதில் வரும் செய்திகள்  முக்கால்வாசி மனதிற்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், எது உண்மை எது பொய் என்று தெரியாததாலும் அதை வாசிப்பதையும் விட்டு விட்டேன்.

வயது ஆக ஆக கண்ணாடி இல்லாமல் படிப்பதும் சிரமமாக ஆனது. வாட்ஸ் ஆப் வந்ததிலிருந்து கண் இன்னும் மோசமானது தான் மிச்சம். சில வரிகளே படிக்கும் பொறுமை. அதிகமாக இருந்தால் வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நான் ஏதோ இப்படி எல்லாம் கிறுக்குவதால் சிலர் நான் வாசிக்கும் பழக்கம் உள்ளவள் என்று தவறாக நினைத்துக்கொண்டு கேட்பார்கள். அவர்களிடம், “ நான் எழுதுவது என் உணர்வுகளை , என் எண்ணங்களை வெளி கொணர்வதற்கே. மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று நான் ஒன்றும் நிறைய புத்தகங்கள் வாசிப்பவள் அல்ல. நான் ஒரு காலி பெருங்காய டப்பா,”என்று உண்மையை ஒத்துக் கொள்வேன். சிறு வயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை என் குழந்தைகளுக்குள் கடத்தியப்பின் நான் அதைப்பற்றி மறந்தே போனேன்.

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடைய என் தோழிகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் கூட இருக்கும். இவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று நினைப்பேன். நான் சோம்பேறி என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் இடம் தராது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நான் எழுதுவதையே நான் திரும்பி படிக்க மாட்டேன். பல தோழிகள் நல்ல புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பார்கள். நான் படிக்காமல் அவர்களிடம் அதைப்பற்றி கேட்டே தெரிந்து கொள்வேன். புத்தகங்களைப் பற்றி ரொம்ப பேசுபவர்கள் மத்தியில் நான் மெளன சாமியாரினி ஆகி விடுவேன். Silence is the best response  என்று கடைப்பிடிப்பேன்.

முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது எங்காவது mallக்கு சென்று சுத்திவிட்டு வருவேன். இப்பொழுது அதிலும் நாட்டம் இல்லை. பேசாமல் வீட்டில் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. சரி வீட்டில் இருந்து கொண்டு என்னதான் செய்வது என்று தோன்றியது. தொலைகாட்சியில் வரும் தொடர்களைப் பார்க்கவும் இப்பொழுது பொறுமை இல்லை. இருக்கும் நேரம் வாட்ஸ் ஆப்பில் மூழ்கி போவதாகவே இருந்தது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவ்வப்பொழுது வரைய ஆரம்பித்தேன். அதையும் எவ்வளவு நேரம் தான் செய்வது. பேசாமல் நாம் மீண்டும்  வாசித்தல் பழக்கத்தை பழக்கிக் கொண்டால் என்ன என்று தோன்றியது.

என் பள்ளித்தோழிகளிடம் யாருக்கெல்லாம் வாசிக்க ஆசை என்று கேட்டேன். என்னைப் போலவே நிறைய பேருக்கு அந்த பழக்கம் விட்டுப் போயிருந்தது. ஒரு சிலர் அதை விடாமல் செய்து கொண்டு இருந்தார்கள். முதலில் சிறு கதையில் ஆரம்பிப்போம் என்று நானும் என் தோழிகள் சிலரும் முடிவு செய்தோம். எடுத்த உடனே நாவல் படிக்க ஆரம்பித்துவிட்டால் ஒழுங்காக செய்ய மாட்டோம். தினம் ஒரு சிறு கதையாவது படிக்க ஆரம்பிப்போம் என்று நினைத்து சுஜாதாவின் சிறு கதைகள் படிக்க முடிவு செய்தோம். ஆன்லைனில் படிக்கலாம் என்றால் அந்த வெளிச்சம் கண்ணுக்கு எரிச்சலைத் தந்தது. முப்பது நாட்கள் தினம் ஒரு கதை என்று படித்துவிட்டோமேயானால் பின்னர் நமக்கு வாசிக்கும் பழக்கம் மீண்டும் வந்துவிடும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். சில தோழிகள் நல்ல கதைகளை பரிந்துரை செய்தார்கள். படிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சிலர் புல்லெட் ட்ரெயின் வேகத்தில் போனார்கள். நான் மட்டும் கூட்ஸ் வண்டி வேகத்திலேயே இருந்தேன்.

முதல் மூன்று நாட்கள் நான் தினம் ஒரு கதை என்று படுக்க போகுமுன் Ipadல்  வாசித்தேன். நான்காம் நாள் என் வேதாளம் முருங்கைமரம் ஏறி விட்டது. Ipadயை கையில் பிடித்துக் கொண்டு படிப்பது கடினமாக இருப்பது போல் தோன்றியது. மேலும் அதில் scroll செய்து செய்து படிப்பது வேறு பிடிக்கவில்லை. எனவே நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம் என்று நினைத்து இன்று காலை முதல் புறப்பட ஆரம்பித்தேன். “வீட்ல இவ்வளவு புக்ஸ் இருக்கறப்ப எதுக்கு நீ லைப்ரரி போற,” என்றார் கணவர். ”வீட்டில் இருக்கும் புத்தகம் என்றால் இரண்டு நாட்கள் புரட்டிவிட்டு தூக்கி போட்டு விடுவேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்தால்  படித்து முடிக்க வேண்டுமே என்ற ஒரு  commitment இருக்கும் ”,என்றேன். எத்துனையோ முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை பையில் இருந்து கூட எடுக்காமல் திருப்பி கொடுத்ததுண்டு. இம்முறை அப்படி செய்யக்கூடாது என்று ஒரு சபதம் எடுத்து இருக்கிறேன்.வழக்கமாக ஓரிரு பக்கங்கள் புரட்டிய உடனேயே தூங்கிப் போவேன். சில நேரம் தூக்கம் வராவிட்டால் ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு சில வரிகள் படித்தால் போதும் , உடனே தூங்கி போவேன்.   என் கணவர் எனக்கு நேர் எதிர். நல்ல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டார்.

காலை வேலையை முடித்து விட்டு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் மதிய உணவு வேளை வந்துவிட்டது. மதிய உணவு முடித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன். அது முடிந்தவுடன், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று உறக்கம் வந்தது. சாயங்காலம் போகலாம் என்றால் டீ நேரம். அதோடு அக்னி நட்சத்திரம் முதல் நாள் வேறா வெயில் பின்னி எடுத்தது. வெயில் தாழ்ந்து போகலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் தோழியிடம் இருந்து போன் வந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அந்த போன் கச்சேரி ஒரு மணி நேரம் நடந்தேறியது. மனதிற்குள் ஒரு வைராக்கியம். இன்று எந்நேரம் ஆனாலும் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வரவேண்டும் என்று. அப்படி இப்படி ஒரு ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்.

நூலகம் அடைந்த பொழுது மணி ஏழரை இருக்கும். உள்ளே நுழைந்த எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எந்த புத்தகத்தை எடுப்பது என்றே பிடிபட வில்லை. சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு அங்கு இருக்க வில்லை. நூலகத்தில் பலர் புத்தகங்களில் மூழ்கி கிடந்ததை பார்க்கையில் எனக்கு என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. பலர் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் புத்தகத்தில் ஊன்றி இருந்தார்கள். எனக்கு  வாசிக்கும் பொழுது concentration இருப்பதே இல்லை. படிக்கும் போதே ஆயிரத்தெட்டு சிந்தனைகள்- என்ன சமைப்பது, மகள் சாப்பிட்டு இருப்பாளா, காய்கறி வாங்க எப்போது போவது என்று மூளைக்குள் ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். . சில நேரம் என்ன வாசித்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வராது. கதையை மறந்து விடுவேன். கதாபாத்திரங்களை மறந்து போவேன்.   நான் சிறிது நேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். பின் எனக்கு பரிச்சயமான வைரமுத்து, மற்றும் ஜெயமோகனின் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் ஆங்கில புத்தகம் ஒன்றையும், இரண்டு சமையல் புத்தங்களையும் எடுத்துக் கொண்டேன். நூலகத்தின் உள் இருக்கும் பொழுது அப்படி ஒரு அமைதியான மன நிலை. அந்த புத்தகங்களை தொட்டு பார்க்கும் பொழுதே அப்படி ஒரு சுகம். பக்கங்களை புரட்டிய பொழுது நானும் புத்திசாலி என்ற ஒரு எண்ணம் தோன்றியது. இதை எப்படி இத்துனை வருடங்கள் அனுபவிக்காமல் விட்டுவிட்டேன்?

எப்படியோ இன்றைக்கு என் mission accomplished. வெற்றிகரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்தாகி விட்டது. புத்தகங்கள் பையில் இருந்து வெளியில் வந்தாகி விட்டன. என் நூலகப் பயணம் பற்றி பதிவும் எழுதியாகிவிட்டது. . இத்தோடு இல்லாமல் ஒழுங்காக இந்த புத்தகங்களை  படித்து முடிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்தித்து என் வாசிப்பு பயணத்தை புதிதாய் தொடங்க இருக்கின்றேன்.

 காலையில் இருந்து “நான் லைப்ரரி போறேன் நான் லைப்ரரி போறேன் என்று தண்டோரா வேறு  அடித்து விட்டேன்.  மகன் வேறு, “ லைப்ரரிக்கு  volunteering செய்ய போறியாமா,”என்று வேறு கேட்டு மானத்தை வாங்கி விட்டான். அவனைப் பொறுத்த வரை நூலகத்திற்கு நான் சென்றாலும் அது  புத்தகங்களை அடுக்கி வைக்கும் வேலைக்குத்
தான்  என்று  முடிவு செய்து இருந்தான். “இல்லை , நான் வாசிக்க புத்தகங்களை எடுத்து வந்து இருக்கிறேன்,”என்று கூறியவுடன் அவனுக்கு ஒரே ஆச்சரியம். “எங்கே காட்டு,” என்று நான் எடுத்து வந்த புத்தகங்களை பார்த்து நான் சொல்வது உண்மை என்று உறுதி செய்து கொண்டான். எடுத்து வந்த புத்தகங்களை படிக்கா விட்டால் மகனின் கிண்டலுக்கு நான் ஆளாகி விடுவேன். அதற்காகவாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் படிப்பது போன்று நடிக்கவாவது செய்ய வேண்டும்!!!

Wednesday, May 2, 2018

என் கடன் பணி செய்து கிடப்பதே !






நேற்று உழைப்பாளர் தினத்திற்காக நான் உழைபாளர் சிலையின் படத்தை வரைந்து என் தோழிக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவள்,”நான் உனக்கு ஒரு டாக்குமெண்டரி வீடியோ அனுப்பி வைக்கிறேன். அதைப் பார்த்தப் பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அனுப்பு,” என்றாள். கூடவே,”முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உனக்கு அது எதைப்பற்றியது என்பதை தெரிந்து கொள்ள ஆகாது. அதற்கு மேல் உன்னால் அந்த வீடியோவை பார்க்க முடியாது,”என்றாள்.

சரி அப்படி என்னதான் வீடியோ அது என்று பார்க்க ஆவலாக இருந்தேன். அவளும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தாள். அந்த டாக்குமெண்டரியின் பெயர்,”கக்கூஸ்”. இந்த வார்த்தையை என் வாயால் உச்சரிக்கக்கூட நான் கூச்சப்படுவேன். டாய்லெட், ரெஸ்ட் ரூம் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது.  இதை பார்ப்பதா இல்லை வேண்டாமா என்ற ஒரு குழப்பம் . சரி, இவ்வளவு சொல்லி இருக்கிறாளே பார்த்துவிடுவோம் என்று அந்த லிங்கை திறந்து பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியே என் வயிற்றை குமட்டச்செய்தது. அந்த டாக்குமெண்டரி துப்புறவு பணி செய்பவர்களைப் பற்றியும், அவர்களின் அவல நிலை பற்றியும், கழிப்பிடங்கள் பற்றியும், குப்பைக்கூளங்கள் பற்றியும், துப்புறவு பணி செய்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதார பிரச்சனைகள், வேலையிலும், வேலை இடத்திலும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகள்  மற்றும் அபாயகரங்கள் பற்றியும்  எடுக்கப்பட்டிருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்தப் பின் என்னால் அதில் வரும் காட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. முழுவதுமாக பார்க்க நம்மால் முடியுமா ? என்ற சந்தேகம். பார்க்க முடியாவிட்டால், கேட்டாவது  மட்டும் பார்ப்போம் , அதில் அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று முடிவு செய்து எதையோ வரைந்த படி கேட்க ஆரம்பித்தேன். அப்பப்பா, என்ன கொடுமை, என்ன கொடுமை!இந்த வாழ்க்கையில் நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்பதை  அந்த நொடி உணர்ந்தேன். பல எண்ண ஓட்டங்கள் எனக்குள் ஓட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல்  ஒடிய அந்த முழு டாக்குமெண்டரியை அவ்வப்போது பார்த்தும்,  கேட்டும் முடித்தேன். அதற்குள் நடு ராத்திரி பன்னிரண்டரை  ஆகிவிட்டது. தூங்க சென்ற என்னால் கண்களை மூடிக்கொள்ள முடிந்ததே தவிர தூங்க முடியவில்லை. அந்த காட்சிகள் சம்மட்டியை வைத்து என் தலையில் அடிப்பது போன்று மீண்டும் மீண்டும் என் கண்களுக்குள்ளும், மூளைக்குள்ளும்  விவரிக்க முடியாத ஒரு வித அவஸ்தயை உண்டு பண்ணியது. கனத்த மனத்தோடு சில மணி நேரத்திற்குப் பின் தூங்கி விட்டேன்.

காலை எழுந்தவுடன் மீண்டும் அதைப்பற்றிய நினைவுகளே. மனித கழிவுகளையும், குப்பைகளையும் சுத்தம் செய்வோர் எவ்வளவு பாவப்பட்டோர் என்று எனக்கு உறுத்தியது. நானும் அவர்களின் இந்த இழிநிலைக்கு என்னை அறியாமல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனம் அழுத்தத்தை உணர்கிறது. சிறு வயதாக இருந்த பொழுது எங்கள் வீட்டு செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வருபவர்களை பார்த்து இருக்கிறேன். மனம் கஷ்டப்படும். அவர்கள் வேலையை முடித்து விட்டு போகும் வரை மூக்கை மூடிக்கொண்டு, சன்னல், கதவுகளை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து இருப்போம். ஒரு வாரம் வரை கொல்லப்பக்கத்திற்கு போவதை தவிர்த்து விடுவோம். சுத்தம் செய்துவிட்டு போனவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் ? அவர்களின் நிலை பற்றி யோசித்தது கிடையாது. இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இப்பொழுதெல்லாம் மெஷின் வந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். அவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டு இருந்தேன். செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வேண்டுமானால் மெஷின் இருக்கலாம் ஆனால் நாம் அன்றாடம் போடும் குப்பைகளையும், அடைத்துக் கொள்ளும் பாதாள சாக்கடைகளையும், ஆஸ்பத்திரி கழிவுகளையும், பொது கழிப்பிடங்களையும், ரயில் வண்டி பாதைகளையும், இன்னும் எத்தனை எத்தனையோ  குப்பைகளையும் இன்று வரை மனிதர்களே கைகளைக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள் என்று பார்த்த பொழுது என் அறிவீனம் என்னை சாட்டையால் அடித்தது.  இதற்கெல்லாம் விடிவு காலமே வராதா என்று ஆதங்கமும், அழுகையும் சேர்ந்தே வருகிறது. இந்த மனித மெஷின்களின் இந்த நிலைக்கு என்ன காரணம், யார் காரணம் என்று யோசிக்கிறேன்.

சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரிலும் குப்பைகளை வகைப்படுத்துவது மனிதர்களே. ஆனால் அவர்களுக்கென்று கையுறைகள், காலணிகள், முககவசங்கள் எல்லாம் தரப்படுகிறது. குப்பைகளை கையாளும் முறை கற்பிக்கப்படுகிறது. அதற்கான கருவிகளும் , தேவையான உபகரணங்களும் தரப்படுகிறது. அவர்களுக்கும் கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவைப் போல வேறெந்த நாட்டிலும் பொது இடங்களில் , வெட்ட வெளிகளில் குப்பைகளையோ, கழிவுகளையோ போடுவதோ,இல்லை வெட்ட வெளிகளை கழிப்பிடமாகவோ உபயோகப்படுத்துவதும் இல்லை. இந்த நிலை எதனால் ஏற்பட்டது?

சுத்தத்திற்கு பெயர் போனவர்கள் நாம் . ஒரு காலத்தில் வெளியில் சென்று விட்டு வீடு வருபவர்கள் கால் ,கையை சுத்தம் செய்து விட்டு வரவேண்டும் என்று வீட்டு வாசலிலேயே தண்ணீர் குவளை இருக்கும் . செருப்பு என்பது வீட்டுக்கு வெளியில் மட்டுமே பயன் படுத்துவோம். முன்னங்கால்களை மட்டும் கழுவினால் பத்தாது சனி விடாது , குதிகால்களிலும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டுத்தான் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற ஐதீகம் எல்லாம் நமக்கு உண்டு. இந்த சுத்தம் பற்றி நாம் பேசுவது எல்லாம் நம் வீட்டிற்குள் மட்டுமே. வெளி இடங்களையும், பொது இடங்களையும், நம் வீட்டின் வேலியை தாண்டி சந்து , பொந்து என்று மற்ற எல்லா இடங்களையும் சுத்தமாக நாம் வைத்துக் கொள்ள நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநலம். என் வீடு நாறாதிருக்க என் வீட்டு குப்பையை வெளியில் தூக்கிப் போடும் நான் அதை சுத்தம் செய்பவர்களைப்பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதே இல்லை.

துப்புறவு தொழிலாளர்களும் மனிதர்களே, அவர்கள் ஒன்றும்  அருவருப்பு உணர்வும், அசிங்க உணர்வும் இல்லாத ஜடங்கள் இல்லை. துப்புறவு பணியாளர்கள் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால்  அவர்களின் வேலை பளுவை, அவர்களின் கஷ்டத்தை குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று நான் சிந்தித்து பார்த்தேன். பல விஷயங்கள் எனக்கு தோன்றியது.  துப்புறவு தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , அவர்களை கண்டு ஒதுங்கி போவது அவர்களை மதிக்காமலோ அல்ல அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் கொண்டோ அல்ல. அவர்கள் துப்புறவு வேலை செய்வதால், வேலை செய்யும் பொழுது அவர்கள் சுத்தமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் குப்பைகளை கையாள்வதால் அவர்கள் அழுக்காக இருப்பார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. எனவே அவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்போம் என்ற எண்ணத்தினால் இருக்கலாம். குப்பையை சுத்தம் செய்பவர்களை அந்த குப்பை வண்டியிலேயே அமரவைத்து கூட்டிச் செல்வார்களாம். பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ஆள் எடுப்பதற்கு சில தகுதிகள் உண்டாம். அது என்னவென்றால், அவர் நன்றாக குடித்துவிட்டு பாதாள சாக்கடையில் உள்ளே சில நிமிடங்கள் தம் பிடித்து இருக்க முடிந்தால் அவருக்கு வேலை உண்டாம். இந்த கொடுமைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

இன்னும் பல நெஞ்சை உலுக்கும் உண்மைகள் அந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. வீடியோவை பார்க்கும் நமக்கே இப்படி வயிற்றை பிரட்டுகிறதே  இந்த வேலையை  தினம் தினம் பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்பவர்களுக்கும் மனநிலை எப்படி இருக்கும். சிலர் சொல்கிறார்கள், “எங்கள் குழந்தைகள் எங்கள் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்,” என்று. ஆனாலும் குடும்பத்திற்காகவும், வயிற்றுப் பசிக்காகவும் எல்லா அசிங்கங்களையும் சகித்துக் கொண்டு அவர்கள் தங்களை இத்தொழிலுக்கு அர்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் முதலில் சுத்தத்திற்கான பாட திட்டம் வகுக்கப்பட வேண்டு. சிறு வயது முதலே சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படவேண்டும். தான் மட்டும் சுத்தமாக இருத்தல் பத்தாது , நம்முடைய சுற்றுப் புறத்தையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலே, சுத்தம் செய்பவர் வேறு யாரோ தானே , நமக்கென்ன , நம்முடைய வேலை குப்பையை தூக்கிப்போடுவது. என் வீட்டு வேலை ஆள்தானே என் கழிவறையை சுத்தம் செய்கிறார், நான் ஏன் அதை சுத்தமாக வைத்து விட்டுத்தான் வரவேண்டும், “ என்பது போன்ற எண்ணங்களை மாற்ற வேண்டும். துப்புறவு வேலை செய்பவர் அருவெறுப்பு படாவண்ணம் நம் வீட்டு குப்பையை நாம் ஒழுங்காக போட வேண்டிய இடத்தில், மூட்டையாகவோ, ப்ளாஸ்டிக் கவரிலோ, போட்டு கட்டி போடவேண்டும். கறிமீன் கழுவுகள், sanitary napkin, diaper , முதலியவைகளை தூக்கி போடும் பொழுது ஒழுங்காக ஒரு கவரில் போட்டு குப்பைத்தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை அகற்ற  அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இப்பிரச்சனைகள் களையப்பட முடியுமே தவிர வேறு எப்படியும் இதனை சரி செய்ய இயலாது.

என் பிள்ளைகளிடம்,”வேறு ஒருவர் அசிங்கமாக விட்டு விட்டு வரும் பாத்ரூமை உங்களால் நிம்மதியாக உபயோக படுத்தவோ, சுத்தம் செய்யவோ முடியுமா? அடுத்தவர்கள் டாய்லெட்டை அசிங்கமாக விட்டுச்சென்றால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி இருக்க நீங்கள் அப்படி ஒரு நாளும் விட்டு விட்டு வரக்கூடாது. வீட்டு வேலையாள் அசிங்கப்பட்டு இந்த வேலையை செய்தால் அந்த பாவம் நம்மைத்தான் வந்து சேரும். அவர்களும் மனிதர்களே. நாம் உபயோகபடுத்திவிட்டு அசிங்கமாக டாய்லெட்டை விட்டு விட்டு வந்தால் அது நமக்கு அசிங்கம்,எனவே ஒவ்வொரு முறையும் எந்த இடமாக இருந்தாலும் சரி , வீடானாலும், ஹோட்டலானாலும் சரி, பள்ளியானாலும்,பொது  கழிப்பிடமானாலும்  நீங்கள் டாய்லெட் உபயோகபடுத்திவிட்டு வரும் பொழுது சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வாருங்கள்,”என்று கூறுவேன்.

இந்த வீடியோவை பற்றி என் மகனுக்கு சொன்னேன். அவனையும் பார்க்க சொல்லி இருக்கிறேன். அவனும் தெரிந்து கொள்ளட்டும் . இப்பணி செய்பவர்களின் கஷ்டம் ,நஷ்டம், தியாகம் என்ன என்பதை. மேலும், நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் அருமையும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு நேரம் ஏண்டா இதைப்பார்த்தோம் என்று தோன்றுகிறது. Ignorance is a bliss  என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் எதற்கு இதெல்லாம் தலைக்கு ஏற்றிக் கொண்டு அவதிபட வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் , நாம் ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி என்று சிறிதேனும் இருத்தல் அவசியம். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பார்க்க வேண்டுமே தவிர , கண்களை மூடிக்கொண்டு கற்பனை உலகில் வாழ்வதால் பயனில்லை. நிதர்சனம் கசக்கத்தான் செய்யும் எட்டிக்காயைப் போல்!இனியாவது துப்புறவு தொழிலாளர்களின் கஷ்டம் அறிந்து பொது இடங்களை அசிங்கமாகவோ, குப்பைகளை கண்டபடி தூக்கி போடாமலோ  இருக்க முயற்சிப்போம். ஏனெனில் அவர்களும் ஆறறிவு பெற்ற மனிதர்களே ! அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அவர்களும் சுகாதாரமாக நோயற்று வாழ வேண்டும். அவர்கள் இல்லையெனில் நாம் அனைவரும் குப்பைமேடுகளில் தான் கால் வைக்க நேரிடும்! மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்.